(பூங்கொடி 11  – கவிஞர் முடியரசன்: வள்ளி குறிக்கோள் வாழ்வினள்- தொடர்ச்சி)

பூங்கொடி

பழியுரை காதை

வடிவேல் படுகொலை

ஆங்ஙனம் அன்றியும் அரும்பெறற் காதலர்,

நிலத்தினில் மடமை நிறைந்திடல் கண்டு

பகுத்தறி வூட்டும் பகலவன் ஆவர் ;

70 சொல்லின் செல்வர், சோர்விலர், தொண்டர்,

அல்லும் பகலும் ஆருயிர்த் தமிழே

வெல்லும் வகையால் வீரம் விளைத்தவர்;

நல்லவர் இவரை நரிக்குணம் விஞ்சிய

கொல்லும் பகைக்குணம் கொண்டோர் ஒருசிலர்

75 தூண்டுதல் செய்யத் துணிவுடன் கூடி

நீண்ட புளிமரக் கிளைதனில் நேயரை

அந்தோ தூக்கி ஆருயிர் வவ்வினர் :

இந்தவெந் நிலையில் இசைத்தொழில் புரிவதோ ?

மலையுறை அடிகள் வருகை தருதல்

வெந்துயர் வாட்ட வேலரின் நினைவால்

80 மனநலி வெய்தி மனையுறை நாளில்

நினையா நிலையில் நீளருட் செல்வர்

மலையுறை யடிகள் வந்துகின் றருளினர்

துயரம் நீங்கச் சொற்றனர் சிலசொல் :

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி