(அகல் விளக்கு – மு.வரதராசனார். 24. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 10

அந்த ஆண்டு எனக்குத் துணையாக ஒருவரும் இல்லாவிட்டாலும், தனியாகவே எல்லாப் பாடங்களையும் நன்றாகப் படித்து வந்தேன். அரைத் தேர்வில் கணக்கில் முதன்மையான எண்களும், மற்றவற்றில் ஒவ்வொன்றிலும் ஏறக்குறைய ஐம்பது எண்களும் வாங்கினேன். கணக்கில் முதன்மையாக நின்றதற்குக் காரணமாக இருந்த சந்திரனுடைய உதவியை நினைத்துக் கொண்டேன். உடனே அவனுக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதினேன். வழக்கத்துக்கு மாறாக அவன் உடனே மறுமொழி எழுதினான். ஊக்கம் ஊட்டி எழுதியிருந்தான். இந்த முறை பள்ளி இறுதியில்(எசு. எசு. எல். சி. யில்) தேர்ச்சி பெற்று அடுத்த ஆனியில் தான் படிக்கும் கல்லூரியிலே வந்து சேர்ந்திடுமாறு எழுதியிருந்தான்.

அதற்கு முந்திய கடிதங்களைவிட அந்தக் கடிதத்தில் அவனுடைய மனநிலை நன்றாக இருந்தது. ஒருகால், நான் அவனுடைய உதவியைப் போற்றிப் புகழ்ந்து எழுதியிருந்த காரணத்தால், அவனுடைய நல்ல உள்ளம் வெளிப்பட்டு மகிழ்ச்சியோடு அவ்வாறு எழுதியிருக்கலாம். எப்படியோ அவனுடைய மனநிலையில் நல்ல மாறுதல் ஏற்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

வழக்கமாக வரும் சிரங்கு அந்த ஆண்டு வரவில்லை. அதற்குப் பிறகும் அது என்னைத் திரும்பப் பார்த்ததில்லை. விருந்தினரும் எங்கள் வீட்டுக்கு அந்த ஆண்டில் மிகுதியாக வரவில்லை. ஆகவே ஒருவகை இடையூறும் இல்லாமல் படிக்க முடிந்தது. மாலையில் ஒவ்வொரு நாளும் வடக்கு நோக்கி ஏறக்குறைய இரண்டு கல்(மைல்) தனியாகவே நடந்து சென்று இலுப்பை மரங்களுக்கு இடையே கால்மணி அல்லது அரைமணி நேரம் உட்கார்ந்திருந்து, பிறகு வந்த வழியே அமைதியாகத் திரும்பி வருவேன். போகும்போதும் வரும் போதும் பாடங்களின் குறிப்புகளைச் சிந்தித்து நடப்பேன்.

சில நாட்களில் மட்டும் வானத்தின் அழகிய கோலங்களைச் சிறிது நேரம் பார்த்திருப்பேன். மேற்கு வானமும் என்னைப் போலவே நாள்தோறும் புதுப் புதுப் பாடங்களை எழுதிப் பார்த்து நினைவூட்டிக்கொள்வது போல் இருக்கும். முழுநிலா நாட்களிலும் அதற்கு முந்தி இரண்டொரு நாட்களிலும் மட்டும் கிழக்கு வானம் என் கண்ணைக் கவரும். பெருங்காஞ்சியிலும் அந்த இலுப்பைமரச் சாலையிலும் சந்திரனோடு இருந்து முழு நிலாவின் அழகைக் கண்டு மகிழ்ந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. நிலாவின் வாழ்வை ஒட்டி நாட்களும் மாதங்களும் நகர்ந்து செல்லச் செல்ல முடிவுத் தேர்வு வந்து விட்டது.

அம்மாவும் அப்பாவும் என்னை நன்றாகப் படிக்கும்படியாகவும் வற்புறுத்தவில்லை. படிக்காமல் உடம்பைக் காக்கும் படியாகவும் அறிவுறுத்தவில்லை. என் போக்கில் விட்டு விட்டார்கள். தங்கையையும் தம்பியையும் மட்டும் அடிக்கடி படிக்குமாறு வற்புறுத்தி வந்தார்கள்.

தேர்வில் நன்றாக எழுதினேன். தேர்வு எழுதி முடிந்தவுடன் அத்தையின் மகன் திருமந்திரம் வீட்டுக்கு வந்தான். “தேர்வு எழுதியானவுடன், ஊருக்கு அழைத்து வரும்படியாக அம்மா சொல்லியனுப்பினார்கள்” என்றான். அப்பாவும் போய்வருமாறு சொன்னார். இசைந்து புறப்பட்டேன். அங்கே அத்தையின் மகன் திருமந்திரம் தவிர வேறு யாருடனும் நான் அவ்வளவாகப் பழகவில்லை. அவன் நல்ல பையன்; நுட்பமான அறிவும் அமைதியான பண்பும் உடையவன். அவனோடு மாலையில் உலாவச் செல்வேன். காலையில் கிணற்றில் நீந்தி மகிழ்ந்தேன். பெருங்காஞ்சியில் கற்ற நீந்தல் கல்வியை அந்த ஊரில் பயன்படுத்தினேன். அத்தை மகள் கயற்கண்ணியைப் பற்றி நான் பொருட்படுத்தவே இல்லை. அவளைப் பார்த்த போதெல்லாம், எனக்குக் கற்பகத்தின் நினைவு வந்தது.

இரண்டு வாரம் கழித்து அங்கிருந்து திரும்பினேன். சந்திரன் பெருங்காஞ்சிக்கு வந்திருப்பான்; அங்குச் சென்று அவனைக் காணவேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு வந்தேன். ஆனால் நான் வந்து கண்ட காட்சி வேறு. அப்பா முதுகுக் கட்டியால் கடைக்குச் செல்ல முடியாமல் வருந்திக்கொண்டிருந்தார். கட்டி ஒன்று போய் மற்றொன்று வரலாயிற்று. கடைக்குக் காலையும் மாலையும் போய்ப் பணப்பெட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து வரவு செலவைக் கவனிக்குமாறு சொன்னார். இதுவரையில் என் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு நேரக் கூடாது என்று அவர் என்னைக் கடைக்கு வருமாறு சொன்னதே இல்லை; வேறு எந்த வேலையும் வைத்ததில்லை. அவராலும் முடியாமல் வீட்டோடு கிடக்க நேரிட்டபோதுதான் அவ்வாறு சொன்னார். அதனால் தட்டாமல் அவர் சொன்னபடி செய்தேன்.

கட்டிகளால் அவர் பட்ட துன்பம் நாளுக்குநாள் மிகுதியாயிற்று. மருத்துவர் சருக்கரை இருப்பதாகக் கூறி, அரிசியும் மற்ற மாவுப் பொருளும் இல்லாத உணவு கொள்ளுமாறு வற்புறுத்தினார். வேனிற்காலம் ஆகையால், கட்டி மிக்க துன்பம் கொடுப்பது இயற்கை என்றார். வாரக்கணக்காக அவர் துன்பம் வளர்ந்து வரலாயிற்று. அவருடைய மனம் எல்லாம் கடையிலேயே இருந்தது. கடையில் இருந்த கணக்கர் அடிக்கடி வந்து எல்லா நிலைகளையும் சொல்லி அவருடைய கட்டளைகளைக் கேட்டுக் கொண்டுபோய் அவற்றின்படி பொருள்களை வாங்குவதும் விற்பதும் செய்தார். அப்பா என்னையும் அடிக்கடி கேட்டுத் தக்க வழிகளைச் சொல்வார். சில வேளைகளில் வலி பொறுக்க முடியாமல், மூச்சு விட்டுக்கொண்டே சொல்வார். இப்படி ஏழு வாரங்கள் ஆகிவிட்டன. இந்த ஏழு வாரங்களில் மளிகைக் கடையின் நுட்பங்களை ஒருவாறு தெரிந்து கொண்டேன் என்று சொல்லலாம்.

என் தேர்வு முடிவும் அதற்குள் வந்துவிட்டது. நான் தேர்ச்சி பெற்றேன். தமிழ், கணக்கு இரண்டு பாடங்களிலும் முதன்மை பெற்றேன். அப்பாவுக்கு என்னுடைய தொண்டு முறையைக் கண்டும், கடை வேலையைக் கவனித்ததைக் கண்டும், என்மேல் அன்பு வளர்ந்திருந்தது. ஆகையால், கல்லூரியில் படிக்கவேண்டும் என்று என் வேட்கையைத் தெரிவித்தவுடன், “சரி, உன்விருப்பம் போல் செய். இப்போது ஒன்றும் அவசரம் இல்லையே! இன்னும் இரண்டு வாரம் நான் கடையை முன்போல் கவனிக்க முடியாது. மாலையில் வந்து திரும்பிவிடுவேன். இந்த இரண்டு வாரமும் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார். அவ்வாறே செய்தேன்.

தேர்வின் வெற்றியைச் சந்திரனுக்குத் தெரிவித்திருந்தேன். அவன் கல்லூரியில் சேர்வதற்கு உரிய வழிகளைக் காட்டிப் பதில் எழுதினான். தானும் இடைநிலை(இண்டர்மீடியட்) இரண்டாம் வகுப்பில் தேறியுள்ளதாக எழுதியிருந்தான்.

இரண்டு வாரம் கழித்து என்னை அழைத்துச் செல்லச் சந்திரனே வந்திருந்தான். வந்த மறுநாளே புறப்பட்டோம். கல்லூரியில் சேர்ந்தவுடன், விடுதியில் அவனுடைய அறைக்குப் பக்கத்தில் ஒரு அறை ஏற்பாடு செய்தான்.

கல்லூரியின் புதுவாழ்வில் பழகுவதற்கு எனக்கு ஒரு மாத காலம் ஆயிற்று. சந்திரன் அவ்வப்போது எனக்குத் துணையாக வந்து உதவினான். ஆனால் அவன் வகுப்பு வேறு, என் வகுப்பு வேறு; பாடங்களும் வேறு வேறு; ஆகையால் வாலாசாவில் இணைபிரியாமல் இருந்ததுபோல் அங்கே இருக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளில் ஒருவரை ஒருவர் பார்க்காமலே இருந்ததும் உண்டு. உணவுக்கூடத்திற்குச் செல்லும் வேளையில் ஒவ்வொரு நாள் என் அறையில் நுழைந்து குரல் கொடுத்து அழைத்துச் செல்வான்.

பெரும்பாலான நாட்களில் என்னை அழைக்காமலே சென்று விடுவான். நான் உணவுக் கூடத்திற்குச் செல்லும்போது அவனை அங்கே காண்பேன். “வேறு வேலை இருந்தது. நேரே வந்துவிட்டேன்” என்பான். சில நாட்களில் அவனை அறையிலும் காண முடிவதில்லை; உணவுக் கூடத்திலும் காண முடிவதில்லை. “எங்கே, காணோமே” என்பேன், “வேறு வேலை இருந்தது” என்பான். சில முறை இப்படி நேர்ந்த பிறகு, நான் கேட்பதும் குறைந்தது; அவனாகச் சொல்வதும் குறைந்தது. இவ்வாறாக, ஒரே கல்லூரியில் படித்து ஒரே விடுதியில் தங்கியிருந்தும், நாளடைவில் எங்கள் தொடர்பு குறைந்து கொண்டே வந்தது. ஒரே வகுப்பில் பக்கத்தில் உட்கார்ந்து படிக்க வாய்ப்பு இல்லாத குறையால், நட்பும் தேய்ந்து போகிறதே என்று வருந்தினேன்.

எனக்கு அவன்மேல் அன்பு குறையவில்லை; அடிக்கடி எண்ணினேன்; அடிக்கடி காண முயன்றேன்; அடுத்தடுத்துப் பழக முயன்றேன்; வாய்ப்பு இல்லாதபோது நான் என்ன செய்வேன்!

சென்னைக்கு வந்த முதல் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று சந்திரன் என்னைக் கடற்கரைக்கு அழைத்துக் கொண்டு போனான். கடற்கரை எனக்கு விருப்பமாக இருந்தது. பெருங்காஞ்சி ஏரி முதலியவை கடலின் இயற்கைப் பெருமிதத்துக்கு முன் நிற்க முடியாதவை என்பதை நன்கு உணர்ந்தேன். தவிர, அங்குக் கண்ட மக்களின் கூட்டமும் என்னைக் கவர்ந்தது. என்ன காரணமோ தெரியவில்லை; சில நாட்களில் சில வேலைகளில் என் உள்ளம் தனிமையை நாடினாலும், பெரிய திரளான மக்களுக்கு இடையில் இருக்கும்போது நான் ஒருவகைக் கிளர்ச்சியை பெற்று மகிழ்கிறேன்.

 

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு