(அகல் விளக்கு – மு.வரதராசனார். 38. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 15 தொடர்ச்சி

திருமணம் முடிந்ததும் மணமகனும் மணமகளும் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து பாலும் பழமும் உண்டார்கள். பிறகு மறுநாள் மாலையில் பெண்வீட்டு மருவுக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பி வந்தபிறகு, மணமகள் நடத்திய வாழ்க்கையைப் பார்ப்பதற்காகப் பாக்கியத்தின் வீட்டுக்குச் சிலமுறை போயிருந்தேன். பாக்கியம் பழையபடியே தம் கடமைகளைச் செய்துகொண்டிருந்தார். தம்பியின் திருமணத்தை முடித்தது பற்றிய மகிழ்ச்சி அந்தம்மாவின் முகத்தில் இருந்தது. மணமகள் சமையலறையிலேயே பெரும்பாலும் இருந்தபடியால் சரியாகக் கவனிக்க முடியவில்லை.

நான் அடிக்கடி அங்கே போய் வருவதைக் கவனித்த என் தாய், “இளம் பெண் – புது மருமகள் வந்திருக்கும் வீட்டுக்கு நீ அடிக்கடி போவது நல்லது அல்ல. எப்போதாவது ஒரு முறை போய்விட்டு வந்தால் போதும்” என்றார். அதன்படியே நான் போவதைக் குறைத்துக் கொண்டேன். பாக்கியம் முன்னைவிட ஓய்வாக எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்தார். “இனிமேல் எனக்குக் கவலை இல்லை. குடும்பம் அவர்களுடையது. வேலை இருந்தால் செய்துவிட்டு, சோறு இருந்தால் சாப்பிட்டுவிட்டு, இப்படியே என் காலத்தைக் கழிப்பேன்” என்று சிலமுறை அம்மாவிடம் பேசியபோது குறிப்பிட்டார். அந்தப் பேச்சு அவருடைய மனநிறைவைக் காட்டியதே தவிர, கவலையைக் காட்டவில்லை.

விடுமுறையில் ஒரு பாதி இப்படிக் கழித்துவிட்டது. மறுபாதியில்தான் படிக்கத் தொடங்கினேன். முற்பகுதியின் குறையை ஈடுசெய்யும் அளவிற்கு நன்றாகவே படித்தேன். சந்திரனைப் பற்றிய நினைவு அடிக்கடி வந்தது. ஆயினும் முன்போல் அதனால் சோர்வடையவில்லை.

00

அத்தியாயம் 16

விடுமுறை முடிந்ததும், பெட்டி படுக்கையுடன் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்குப் போய் விடுதியில் கால் வைத்தவுடன், சந்திரனுடைய நினைவு முன்போல் வந்து வருத்தியது. என்னைப் பார்த்த பழைய மாணவர்கள், “உங்கள் ஊரான் – பெண்ணாக நடித்த அந்தச் சந்திரன் – எங்கே இருக்கிறான்? தேர்வுக்குப் படிக்கிறானா?” என்று பல கேள்விகள் கேட்டு என் மனத்தை மேலும் கலக்கினார்கள்.

நான் சென்ற மறுநாள் மாலன் சோழசிங்கபுரத்திலிருந்து வந்து சேர்ந்தான். அவனும் சந்திரனைப் பற்றிக் கேட்டான். சந்திரனுடைய அறை காலியாக இருந்தது. அந்த அறைக்கு மாற்றிக்கொண்டு வருமாறு மாலனுக்குச் சொன்னேன். “அது கெட்ட அறை, சந்திரனுடைய வாழ்வையே கெடுத்துவிட்டது. நானும் கெடவேண்டுமா?” என்றான்.

“சந்திரன் நாடகத்தால் கெட்டான் என்றாய். பெண்ணால் கெட்டான் என்றாய். இப்போது இந்த அறையால் கெட்டான் என்கிறாய். எதுதான் உண்மை? மூடநம்பிக்கை எதையும் பேசும்போல் தெரிகிறது” என்றேன்.

“நீ இந்த அறையை எடுத்துக் கொண்டு, உன் அறையை எனக்குக் கொடு, பார்க்கலாம்” என்றான் அவன்.

“சந்திரனும் நானும் நெருங்கிப் பழகியவர்கள்” நான் அந்த அறையில் இருந்தால், எனக்கு அடிக்கடி சந்திரனுடைய நினைவே வந்து துன்பப்படுத்தும்” என்றேன்.

“அதுவும் ஒரு மூடநம்பிக்கைதான்” என்று மாலன் குத்தலாகக் கூறினான்.

வேண்டும் என்றே அவன் பேசுவதை உணர்ந்து கொண்டு அந்த முயற்சியைக் கைவிட்டேன். புதிய மாணவன் எவனாவது வந்து பக்கத்து அறையில் இருந்து தொல்லை கொடுப்பதைவிட, பழகிய நண்பன் இருந்தால் நன்மையாக இருக்குமே என்றுதான் அவனை அவ்வாறு வேண்டிப் பார்த்தேன். “உன் அறைக்குப் பக்கத்தில் காலி இருந்தால் சொல். நானாவது அங்கே வந்து இருப்பேன்” என்றேன். அதற்கும் வழி இல்லை என்றான். பழைய அறையிலேயே இருக்கத் துணிந்தேன்.

வழக்கம் போல கல்லூரி தொடங்கியதும், பாடங்கள் நடந்தன. நாங்களும் படிக்கத் தொடங்கினோம். மாணவர்கள் புதிய நண்பர்களைப் பெற்றுப் பழகினார்கள். புதிய பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொண்டார்கள். நன்மையும் பரவியது. தீமையும் பரவியது. என்னையும் மாலனையும் பொறுத்தவரையில், புதிய நட்பு ஒன்றும் ஏற்படவில்லை. புதியவர்களோடு பழகினாலும் உள்ளம் கலக்காமல் உதட்டளவில் பழகிவந்தோம். மாலனுக்கும் எனக்கும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவனும் என்னை விடவில்லை. நானும் அவனை விடவில்லை. அவனிடம் மூடநம்பிக்கைகளும் அவற்றிற்குக் காரணமான தன்னலமும் மிகுதியாக இருந்தபோதிலும், கெட்ட பழக்கங்கள் ஒன்றும் இல்லை. படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது. ஆகையால், புதியவர்களோடு பழகிப் பிறகு அந்தப் பழக்கத்தால் வருந்துவதைவிட, பழகிய பழைய நட்பே போதும் என்று இருந்துவிட்டேன். சில மாணவர்கள் தாமே நெருங்கி வந்து பழகினார்கள். சீர்திருத்தமான கருத்து உடையவர்கள் சிலர் பழகினார்கள். கல்வியில் ஊக்கம் மிகுந்தவர்கள் சிலர் முன்வந்து பழகினார்கள். பொது அறிவு நிரம்பியவர்கள் சிலர் நெருங்கிப் பழகினார்கள்.

அவர்களுடைய சீர்திருத்தமும் கல்வித்திறனும் பொது அறிவும் எனக்குப் பிடித்திருந்தன. ஆனால் சில நாள் நெருங்கிப் பழகியபோது, எனக்குப் பிடிக்காத சில பழக்கங்களும் கொள்கைகளும் அவர்களிடம் இருந்ததை உணர்ந்தேன். அந்த அளவிற்கு மேல் நட்பு வளராதபடி பழக்கத்தை வரையறைப் படுத்திக் கொண்டேன். இப்படித்தான் எல்லாரும் குணமும் குற்றமும் கலந்தவர்களாக இருப்பார்கள் என்று புதியவர்கள் யாரோடும் நெருங்கிப் பழகாமல் காத்துக் கொண்டேன். மாலனுடன் மட்டும் மனம் கலந்து பழகி வந்தேன். அவனுடைய குறைகள் எனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்த குறைகள் அவ்வளவாகத் தீமை செய்வதில்லை.

பழகிய வழியில் உள்ள மேடும் பள்ளமும் கல்லும் முள்ளும் நமக்குத் தீமை செய்வதில்லை. பழகாத வழியில் உள்ள குறைகள்தான் தீமை செய்கின்றன. மாலனும் எப்படியோ என்னிடம் மட்டுமே நெருங்கிப் பழகிவந்தான். என்னுடைய முற்போக்குக் கொள்கைகளும் அவனுடைய மூடநம்பிக்கைகளும் முரண்பட்டன. என்னுடைய இரக்க உணர்ச்சியும் அவனுடைய தன்னல முயற்சியும் மாறுபட்டன. ஆனால் எப்படியோ என் நெஞ்சமும் அவன் நெஞ்சமும் உறவு கொண்டன.

சந்திரனைப் பற்றிய நினைவு எனக்கு அடிக்கடி வந்தது. நன்றியுணர்ச்சியோடு அவனைப் பற்றி நினைந்து நினைந்து வருந்தினேன். என் உள்ளத்தின் வருத்தத்தை மாலனிடம் தவிர வேறு யாரிடம் வெளிப்படுத்தி ஆறுதல் பெறமுடியும். அவனிடம் சொல்வேன். அவனோ, கவலைப்படாமல் இருப்பான். அவனுடைய போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் இருந்தே அவன் சந்திரனிடம் வெறுப்புக் காட்டி வந்தான் என்பது தெரியும். தெரிந்தும் என் மனம் ஆறுதல் பெறவில்லை.

மாலனிடம் சந்திரனைப் பற்றி மனம் கலந்து பேச முடியாதது ஒரு குறையாகவே இருந்து வந்தது. இமாவதியின் நினைவு வந்தது. அவளோடாவது அவனைப் பற்றிப் பேசி அந்தக் குறையைப் போக்கி ஆறுதல் பெற எண்ணினேன். திருமணத்திற்குப் பிறகு அவளைக் காணவும் இல்லை. இப்போது கண்டு பேச விரும்பினேன். அதைப் பற்றி மாலனிடம் சொன்னால் அவன் தடுப்பான் என்பதும் தெரியும். ஆகவே அவனிடம் சொல்லாமல் ஒருநாள் இராயப்பேட்டைக்குச் சென்றேன்.

வீட்டில் இமாவதி இல்லை. அவளுடைய தங்கை திருமகள் வந்து, “யார் நீங்கள்? முன்னே வீட்டுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறதே” என்றாள். “சந்திரனுடைய நண்பன்” என்று சொன்னேன். சொன்னதும் “சந்திரன் வந்து விட்டாரா? ஊரில் இருக்கிறாரா? படிக்கிறாரா?” என்றாள். “அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது” என்று நான் சொன்னதும் அவளுடைய ஆர்வம் முழுவதும் மறைந்து விட்டது. “இருங்கள் அம்மாவை வரச் சொல்வேன்?” என்று உள்ளே சென்றாள்.

இமாவதியின் தாய் வந்ததும், “இன்னும் அவன் திரும்பி வரவில்லையாமே! என்ன ஆனான் என்றும் தெரியவில்லையே” என்று வருந்தினார். பிறகு இமாவதி அவளுடைய கணவரின் வீட்டில் இருந்ததைத் தெரிவித்தார்.

“இமாவதியைப் பார்த்துப் பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்றேன்.

“அடுத்த மாதம் இருவரும் வருவார்கள். அல்லது அவள் மட்டுமாவது வருவாள். வந்ததும் உனக்குத் தெரிவிக்கச் சொல்வேன்” என்றார்.

மறுபடியும் அந்த அம்மாவே சந்திரனைப் பற்றிப் பேச்செடுத்தார். “எவ்வளவு நல்ல பிள்ளை! நல்லபடி முன்னுக்கு வந்திருக்கவேண்டும். இமாவதிக்கு அவனைப் பற்றிக் கவலை உண்டு. ஒருநாள் கனவிலும் வந்தானாம். கடிதத்தில் எழுதியிருந்தாள்” என்றார்.

நானும் என் வருத்தத்தைத் தெரிவித்துவிட்டு விடை பெற்றேன்.

விடுதிக்கு வந்தவுடன் “எங்கே போயிருந்தாய்? சொல்லாமலே போய்விட்டாயே” என்று மாலன் கேட்டான். ஏதாவது பொய் சொல்லி மறைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு திரும்பினேன். ஆனாலும் முடியவில்லை. உண்மையைச் சொன்னேன். “நீயும் சந்திரனைப் போல் எங்காவது அகப்பட்டுக்கொண்டு ஏமாந்து கெடப்போகிறாயோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது” என்றான்.

“என்னைப் பற்றி அப்படித் தவறாக எண்ணவேண்டா.”

“உன்னை நம்பலாம்; உன் உடம்பை எப்படி நம்ப முடியும்? உடம்பு குறை உடையது.”

“சரி, போகப் போகத் தெரியும்” என்றேன்.

பிறகு அங்கு இமாவதியிடம் பேசியதைப் பற்றிக் கேட்டான். அவள் இல்லாதபடியால் திரும்பிவிட்டதைச் சொன்னேன். “உனக்கு என்ன வேலை அங்கே? போகாமலே இருப்பது நல்லது” என்றான்.

“சந்திரனைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டு வரச் சென்றேன்” என்றேன்.

“இன்னும் சந்திரனைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்காதே. உன்னிடம் அவனுக்கு உண்மையான அன்பு இருந்தால் ஒரு கடிதம் எழுதட்டும். அதுவரையிலும் அமைதியாக இரு” என்றான்.

ஆனாலும் என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை. பெருங்காஞ்சியில் அவனுடைய பெற்றோரும் அத்தையும் கற்பகமும் என்னைப் பற்றி என்ன எண்ணுவார்கள்? நான் அடியோடு மறந்துபோனதாக எண்ணுவார்களோ என்று சாமண்ணாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். கடிதத்துக்கு அவரே கைப்படப் பதில் எழுதியிருந்தார். அதில் பழைய நிகழ்ச்சிகளை எல்லாம் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவனை வெளியூரில் படிக்க வைக்கக்கூடாது என்று தாம் பிடிவாதமாக இருந்ததைப் பற்றியும், சந்திரனுடைய சிற்றப்பாவும் அப்படிப் படித்த காரணத்தால் கெட்டுப் போனதைப் பற்றியும், சந்திரனுடைய தாய் மனம் குலைந்து வருந்துவதைப் பற்றியும் குடும்பமே சீர்குலைந்து போனதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தைப் படித்தபோது என் நெஞ்சம் உருகியது; கண்கள் கலங்கின.

சிறிது நேரத்தில் மாலன் என்னை நோக்கி வந்தான். வந்ததும், என் மேசைமேல் இருந்த குறிப்புகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, “உனக்குத் திருவுளச் சீட்டில் நம்பிக்கை இருக்கிறதா?” என்றான்.

“இல்லை” என்றேன்.

“எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”

“உனக்கு இருக்கும் நம்பிக்கைகளுக்குக் கணக்கே இல்லை.”

“உனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லையா?”

“உண்டு. கடவுளிடத்திலும் கடவுளின் சட்டமாகிய அறத்திலும் நம்பிக்கை உண்டு. அடுத்தபடியாக, என்னிடத்தில் நம்பிக்கை உண்டு. உன்னிடத்தில் நம்பிக்கை உண்டு. உலகத்தில் . . .”

“போதும்! இந்த நம்பிக்கை எல்லாம் இருந்து பயன் என்ன?”

“இன்னும் என்ன நம்பிக்கை வேண்டும்? இலாட்டரி சீட்டில், கோழிப் பந்தயத்தில், குதிரைப் பந்தயத்தில் என்று இப்படி நம்பிக்கைகள் வேண்டும்?”

“ஆமாம் அவையும் நம்பிக்கைகள் தான்.”

மாலன் அவ்வாறு கூறியதும் எனக்குத் திடுக்கிட்டது. “இப்படிப்பட்ட குடிகெடுக்கும் பாழும் நம்பிக்கைகளைவிட மந்திரக்காரர் சோதிடக்காரர் முதலியவர்கள் ஊட்டும் மூடநம்பிக்கைகளே மேல்” என்றேன்.

“ஒன்று சொல்கிறேன்” என்று பொறுமையோடு உபதேசம் செய்பவன் போல் தொடங்கினான்.

“இவற்றில் எல்லாம் ஏதோ உண்மை இருப்பதால் தான் இவை நடக்கின்றன. உண்மை இல்லாவிட்டால் படித்தவர்கள் கூட்டமாகப் போவார்களா?”

“நம்பிக்கையால் போகவில்லை. பொழுது போக்குக்காகப் போகிறார்கள். வாழத் தெரியாமல் போகிறார்கள்.”

“சிலர்க்கு ஆயிரம் பத்தாயிரம் என்று எதிர்பாராமல் கிடைக்கிறதே. நல்ல தசை, யோகம் இருக்கிறது என்று சோதிடக்காரர் சொல்கிறபடியே கிடைக்கிறதே. அதற்கு என்ன சொல்கிறாய்?”

“வருங்காலத்தில் தானே வரும், கொடுக்கிற தெய்வம் தானே கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், ஒன்றும் செய்யாமல், பந்தயங்களுக்குப் போகாமல், சீட்டுக் கட்டாமல் சும்மா இருக்கவேண்டும். பணம்தானே வந்து சேரவேண்டும்.”

“தெய்வம் காட்டும். ஊட்டுமா?”

“இப்படிப்பட்ட பழமொழிகள் பல உண்டு. யாரும் எதற்கும் பழமொழியைப் பயன்படுத்தலாம்.”

“உன்னோடு பேசிப் பயன் இல்லை” என்று மாலன் வெறுப்போடு சொல்லி அமைதியானான்.

“அதையே நானும் சொல்ல முடியும்” என்றேன். அவ்வாறு நான் சொல்லிய பிறகு ஏன் சொன்னேன் என்று வருந்தினேன். நண்பன் மனம் சோர்வடையும் போது, புண்படுத்தும் முறையில் திருப்புவது நல்லது அல்ல என்று உணர்ந்தேன். பிறகு அதை மாற்றுவதற்காகத் தொடர்ந்து பேசினேன். “மூடநம்பிக்கையோ அல்லவோ, அது எப்படியோ போகட்டும். நாம் உழைக்க வேண்டும்; உழைப்புக்கு ஏற்ற கூலி வரவேண்டும். இப்படி எதிர்பார்ப்பதுதான் கடமை. அதைவிட்டு, எதிர்பாராமல் பணம் வந்து குவியவேண்டும் என்று ஏங்குவதே பாவம்! பலருடைய பணம் தகாத வழியில் நமக்கு வந்து சேர்வது நல்லதா? அது தன்னலம் அல்லவா?” என்றேன்.

“தன்னலம் இல்லாமல் இந்த உலகத்தில் யாரும் வாழ முடியாது” என்றான்.

“உண்மைதான். மற்றவர்களைக் கெடுத்துத் தான் வாழவேண்டும் என்பதுதான் கெட்ட தன்னலம். மற்றவர்களும் வாழத் தானும் வாழவேண்டும் என்பது நல்ல தன்னலம். தனக்கு மட்டும் நல்ல காலம் வரவேண்டும் என்பது கெட்டது. நாட்டுக்கே நல்ல காலம் வந்தால், தனக்கும் நல்ல காலம் வரும் என்பது நல்லது. அதனால் மூடநம்பிக்கைகளை நான் வெறுக்கிறேன். அவை அறிவுக்கும் பொருந்தவில்லை; தன்னலத்தையும் வளர்க்கின்றன.”

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு