(அகல் விளக்கு – மு.வரதராசனார். 56. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 23 தொடர்ச்சி

இருந்தாலும், புத்தகப் படிப்பில் அவளுக்கு, ஆர்வம் இல்லை. போகப் போக அதை நன்றாக உணர்ந்தேன். புத்தகப் படிப்பில் அக்கறை இல்லாவிட்டாலும், அறிவுப் பசி மட்டும் இருந்தது. செய்தித்தாள் படித்து ஏதாவது சொன்னால், ஆர்வத்தோடு கேட்பாள். வார இதழிலிருந்து ஏதாவது கதை படித்துச் சொன்னால் கேட்பாள். நாளடைவில் அவளே அந்த இதழ்களில் இருந்த கதைகளைப் படித்துப் பழகினாள். பழக்கம் விடவில்லை.

வார இதழ்கள் எப்போது வரும் என்று காத்திருந்தாள். சிறு கதைகளைவிடத் தொடர் கதைகளில் ஆர்வம் காட்டினாள். போன வாரத்தில் கதைத் தலைவன் இந்த ஊருக்குப் போனான். தலைவி இப்படி இருந்தாள். இந்த வாரத்தில் என்ன நடக்குமோ தெரியவில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதைவிட ஆர்வம் மிகுதியாக இருந்த ஒரு துறை திரைப்படம் என்று தெரிந்து கொண்டேன். திரைப்படத்துக்குப் போகவேண்டும் என்ற ஆசையை அவள் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

நெருங்கிப் பழகிய பிறகு, “அங்கே புதுப்படம் ஓடுகிறதாமே இங்கே புதுப்படம் ஓடுகிறதாமே. வாங்க போகலாம்” என்று என்னை வருமாறு வற்புறுத்தலானாள். எனக்கு வேலை நெருக்கடி மிகுதியாக இருந்த நாட்களில் “உங்களுக்கு வேலை தீர்ப்பாடு இல்லை. நீங்கள் வரமாட்டீர்கள். அந்த வீட்டுப் பெரியம்மா போகிறார்களாம். நான் அவர்களோடு போகட்டுமா?” என்று அனுமதி கேட்டாள். அவள் விருப்பம்போல் இசைந்து போகச் செய்தேன். ஆனாலும் அவளுடைய திரைப்பட வேட்கை தீரவில்லை. போன ஆண்டில் பார்த்த பழைய படமே திரும்பி வந்தால், மறுபடியும் போய்ப் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். வேண்டா என்று தடுத்தால் உடனே அவளுடைய முகம் மாறுவதைக் கண்டேன். அது எனக்கும் வருத்தமாக இருந்தது. இந்த வகையில் அவளைத் திருத்த முடியாதுபோல் இருக்கிறதே என்று அவள் விருப்பம் போல் விட்டேன்.

ஓய்வு கிடைத்தபோது நானே அவளைச் திரைப்படத்துக்கு அழைத்துச் சென்றேன். ஒருமுறை அடுத்தடுத்து மூன்று நாள் படம் பார்க்கப் போயிருந்தோம். அப்போது நான் விளையாட்டாக ஒரு தந்திரத்தைக் கையாண்டேன். வீட்டுக்கு வந்த பிறகு, திரைப்பட நடிகைகளைப் பற்றியே புகழ்ந்து பேசினேன்.

இன்னாருடைய முகவெட்டு இப்படி, கண் இப்படி, புருவத்தின் அழகே தனி, கன்னமும் உதடுகளும் அமைந்த அமைப்பே சிறப்பு. மார்பு இப்படி, வயிறு இப்படி கைவிரல்கள் இப்படி, கழுத்தின் அழகு இப்படி, மூக்கின் எழில் இப்படி, இன்ன நடிகையின் கூந்தல் அழகே அழகு, பேசும்போது அவளுடைய உதடுகளின் அசைவு என்ன அழகு, நடக்கும்போது என்ன ஒயில், கைகளை வீசும்போது அதுவே ஒரு தனிக்கலை, அப்படி எட்டிப் பார்க்கும்போதே உயிர் போகும்போல் இருக்கிறது.

ஒரு சிறு கண்சிமிட்டுக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடு ஆகாது என்று இப்படியே நாள்தோறும் ஒரு நடிகையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவள் ஒரு நாள் பொறுத்தாள், மறுநாளே என் பேச்சில் வெறுப்புக் காட்டத் தொடங்கினாள். பிறகு நான் இந்தப் பேச்சில் ஈடுபட்டபோதெல்லாம் எழுந்து போய்விட்டாள். திரைப்படங்களைப் பற்றி எந்நேரமும் பேசிக் கொண்டிருந்தவள், என் போக்கு இவ்வாறு ஆன பிறகு அந்தப் பேச்சையே விட்டுவிட்டாள். நானோ விடவில்லை. இந்த விளையாட்டின் எல்லைக்குப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று முனைந்தேன். ஒரு நாள் அவள் உணவு பரிமாற வந்தபோது, அவளுடைய கால்களைப் பார்த்தபடியே இருந்தேன்.

“என்ன, திரைப்பட நட்சத்திரங்களின் நினைப்பா?” என்றாள். “ஆ ஆ! அந்த படத்தில் பார்த்த நடிகை உன்னைப் போல் நடந்து வரும்போது ஆ ஆ! என்ன அழகு, என்ன ஒய்யாரம்! அந்தக் கால்களையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது. ஒரு உரோசாப்பூவை ஒய்யாரமாகப் பறித்து அவள் தன் தலையில் சூட்டிக் கொண்டபோது அந்தக் கையை எடுத்ததே ஒரு கலை! அந்த விரல்களின் வளைவு நெளிவு அடடா! பூவைத் தலையில் சூடிக்கொண்டே அவள் திரும்பிப் பார்த்த பார்வை! அடடா! உயிரே கொள்ளை போகிறாற் போல் இருந்ததே!” என்றேன்.

“ஐயய்யோ! வர வர ஆபத்தாக வந்து முடியும்போல் இருக்கிறதே! உங்களுக்கு நடிகைப் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருக்கிறதே! என்ன இப்படிக் கெட்டுவிட்டீர்களே! இனிமேல் தயவு செய்து திரைப்படத்துக்கே போகவேண்டா. நானும் போகப் போவதில்லை. அடிக்கடி திரைப்படம் பார்த்தால் குடும்ப ஆண்கள் கெட்டுப் போவார்கள் போல் இருக்கிறதே” என்றாள்.

அவள் இதைச் சொல்வாளா என்றுதான் காத்திருந்தேன்.

“ஆண்கள் கெட்டுப் போவது போல் பெண்களும் கெட்டுப் போவார்கள் அல்லவா?” என்றேன்.

“ஒரு காலும் பெண்கள் இப்படிக் கெட்டுப்போக மாட்டார்கள். உங்களுக்குத்தான் அந்த நட்சத்திரங்கள் கண்ணிலேயே வந்து குடிபுகுந்து விடுகிறார்களே, நாங்கள் படம் பார்க்கிறோம். கதை தெரிந்து கொள்கிறோம். வந்து விடுகிறோம்.”

“எல்லாருமா அப்படி?”

“யாரோ சில பெண்கள் உங்களைப் போல் பைத்தியம் பிடித்துப் பிதற்றுவார்கள். நாங்கள் அப்படி ஒருநாளும் நினைக்கவே மாட்டோம். இது என்ன அவமானம்! யாராவது கேட்டால் என்ன எண்ணுவார்கள்?” என்று கடுகடுப்பாகப் பேசினாள்.

மறுநாள் காலையில் மற்றொரு தந்திரம் செய்தேன். உணவு முடித்து அலுவலகத்திற்குச் செல்வதற்குமுன் கூடத்தில் இருந்த ஒரு நாட்காட்டியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு திரைப்பட நடிகையின் படம் இருந்தது. அவளுடைய தோற்றமும் பார்வையும் அழகாக அமைந்திருந்தன. நான் அதைப் பார்த்தபடியே நெடுநேரம் இருந்தேன். கூடத்துப் பக்கமாக மனைவி வந்தபோது, நடிகையின் அழகை அனுபவிப்பது போல் பாசாங்கு செய்தேன். அழகில் மயங்கிப் பார்ப்பதுபோல் பார்த்து அடிக்கடி தலையை அசைத்துக் கொண்டிருந்தேன். வந்தவள் விர்ரென்று போய்விட்டாள். அன்று மாலையில் அலுவலகத்திலிருந்து வந்து பார்த்தபோது அந்த நாட்காட்டி அங்கே காணோம். அதோடு இன்னும் இரண்டு திரைப்படப் படங்களும் காணப்படவில்லை; எங்கே அந்தப் படம் என்று மனைவியைக் கேட்டேன். அடுப்பில் இட்டு எரித்துவிட்டதாகக் கூறினாள்.

“அழகு இன்னது என்று தெரியாத களி மண் நீ! யாரைக் கேட்டு அதை அடுப்பில் போட்டாய்? அதற்காகவா நான் கேட்டு வாங்கிவந்து, கூடத்தில் மாட்டினேன்? உனக்கு அப்படிப்பட்ட அழகு இல்லையே என்ற பொறாமையால் செய்திருப்பாய்? இருக்க இருக்க உன் மூளையே மாறுகிறது” என்று பொய்க் கோபத்துடன் பேசினேன்.

“நான் அப்படித்தான் செய்வேன். உங்கள் நடத்தையே எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. ஊருக்கு வாங்க. பாக்கிய அம்மாவிடத்திலே மாமியிடத்திலே சொல்லிப்பார்க்கிறேன். யாருக்கு மூளை மாறிவிட்டது என்று அவர்களே சொல்லட்டும்” என்று அழத் தொடங்கினாள்.

“அழகான படம், கூடத்துக்கு அலங்காரமாக இருக்கும் என்று வாங்கிக் கொண்டு வந்தேனே” என்று கொஞ்சம் தணிந்த குரலில் சொல்லி வருந்தினேன்.

“பார்க்கிறவர்களின் மனம் கெடுமானால், எவ்வளவு அழகான படமாக இருந்தாலும் வாழ்கிற வீட்டுக்குள் வரக்கூடாது. உங்களுக்குத் தேவையானால், என்னை ஊருக்கு அனுப்பிவிட்டு, அப்புறம் என்னாவாவது செய்யுங்கள்”.

இதற்கு மேல் போகக்கூடாது என்று நடிப்பை நிறுத்திக் கொண்டேன். உடனே உண்மையைச் சொன்னாலும் பயன்படாது என்று அமைதியாக இருந்தேன்.

மூன்று நாள் கழித்து, “இன்று திரைப்படத்துக்குப் போகலாமா?” என்றேன்.

“வேண்டா. நான் வரவில்லை” என்றாள்.

“என்ன அவ்வளவு வெறுப்பு”

“ஆமாம். வெறுப்புத்தான். அதை பார்த்துக் கெட்டுப் போவதைவிட வீட்டோடு நல்லபடி இருக்கலாம்.”

“நான் வாயால் அழகைப் பாராட்டியது குற்றமா? மனத்திற்குள்ளே நினைத்துக் கொண்டு மனத்திலேயே அவர்களின் அழகைப் போற்றிக் கொண்டு இருந்திருக்க வேண்டும். எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். நான் வெளிப்படையாக உன்னிடம் பாராட்டிச் சொன்னது குற்றம். பெண்கள் மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள். ஆண்கள் அழகை அழகு என்று வாயால் சொல்கிறார்கள். அது குற்றமா?”

அதற்கு மறுமொழியாக என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

இரண்டு நாள் கழித்து மறுபடியும் படம் பார்க்க அழைத்துப் பார்த்தேன். முடியவில்லை. மறுநாள் முயன்றேன். அன்றும் மறுத்துவிட்டாள்.

எல்லாம் பழங்கதையாய்ப் போகட்டும் என்று இரண்டு வாரம் சும்மா இருந்தேன். பிறகு, இனி அப்படி நடிகைகளின் அழகில் மயங்குவதில்லை என்று உறுதிமொழி கொடுத்து, திரைப்படத்துக்கு வருமாறு அழைத்தேன். அன்று மனம் இறங்கி வந்தாள். நானும் பழைய நடிப்பு ஒன்றும் இல்லாமல் நடந்து கொண்டேன். இருந்தாலும், வீட்டுக்கு வந்த பிறகு, “ஆண்களையே நம்ப முடியாது. நீங்கள் அந்த நடிகைகளின் அழகை அடிக்கடி மனத்திற்குள் நினைக்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டாள்.

“எனக்கு இப்போது வேலை மிகுதி. ஓய்வு ஏது? அவர்களின் அழகைப் பற்றிய நினைப்பே வருவதில்லை” என்றேன்.

“கடவுள் உங்களுக்கு எந்த நாளும் ஓயாத வேலை கொடுத்தபடியே இருக்கவேண்டும்” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

எனக்குச் சிரிப்பாக இருந்தது. “இதற்காக நான் மாடுபோல் ஓயாமல் உழைக்கவேண்டும் என்று சாபம் கொடுக்கிறாயா? நீ மட்டும் ஓய்வாக வீட்டில் சுகப்படு” என்றேன்.

அவளும் சிரித்தாள்.

அப்போதுதான் என் உள்ளம் திறந்து சொன்னேன். “நான் அப்படிப் படத்தின் அழகில் மயங்கிக் கெட்டுப் போகிற ஆள் அல்ல. அதெல்லாம் உண்மை அழகு அல்ல. மேற்பூச்சும் அலங்காரமுமே அதிகம். அவற்றை நம்புகிற பேர்வழி நான் அல்ல. நடிப்பு மட்டும் உண்மையாகவே சிறந்த கலை. அதைத்தான் பாராட்ட வேண்டும்” என்றேன்.

“அப்படியானால் நீங்கள் அவர்களின் அழகில் மயங்கவில்லையா?”

“நீ ஆண் நடிகரின் அழகில் மயங்கவில்லையா?”

“சேச்சே! அந்த எண்ணம் வந்தால் நான் திரைப்படத்துக்கே போகமாட்டேன். தெரியுமா?”

“அவர்கள் என்னைவிட அழகாக இல்லையா? அதனால் உனக்கு ஆசையாக இல்லையா!”

“சே! என்ன பேச்சு இது! தெருவில் போகிற ஒருவன் அழகாக இருந்தால், அதனால் அவன்மேல் ஆசை தோன்றி விடுமா? நம் அம்மாவைவிட இன்னொருத்தி அழகாக இருந்தால் அவள்மேல் ஆசை வளருமா? அழகு குறைவாக இருந்தாலும் என்னைப் பெற்று வளர்த்தவள்தான். எனக்கு வேண்டும், அவள்தான் எனக்குத் தாய். அப்படித்தான் நீங்களும் எனக்கு.”

“கண்ணி! என் நிலையும் அதுதான். ஊரில் எந்தப் பெண் எவ்வளவு அழகாக இருந்தால் எனக்கு என்ன? அயலாருடைய கண் அழகாக இருந்தால் அதற்காக என் கண்ணைக் குத்திக்கொள்வேனா? என் கண்தான் என் கண்! என் கண்ணிதான் என் கண்ணி!” என்று அன்போடு அவள் முகத்தை நோக்கினேன்.

உடனே அவள் என் தோள்மேல் சாய்ந்து என் கன்னங்களைத் தடவினாள்.

இவ்வாறாக எங்கள் திரைப்பட நாடகம் முடிந்தது.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு