ஆள்வோர் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதாக எண்ணுவோம். ஆனால் செங்கோலாட்சி புரிபவர்களுக்கு ஆட்சி செய்வது துன்பம் தருவதே  இதனையே தேசியப்புலவர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். அது குறித்த பாடலடிகள் வருமாறு

மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்

பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம்

குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி

மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்

துன்ப மல்லது தொழுதக வில்

சிலப்பதிகாரம் 2.காட்சிக்காதை, அடிகள் 100-104

பதவுரை:

மழை வளம்=மழையாகிய வளம்; கரப்பின்= பெய்யாது மறைந்தால்;  வான் பேர்= மிகப் பெரிய; அச்சம்= அச்சம் உண்டாம்; பிழை உயிர் எய்தில்=எதனாலும் உயிரினங்களுக்குத் துன்பம் வந்தால்; பெரும்பேர் அச்சம்=மிகப் பெரிய அச்சமுண்டாம்; குடிபுரவுண்டும்=குடிகளைக் காத்தலை மேற்கொண்டும்; கொடுங் கோல் அஞ்சி= கொடுங்கோலுக்கு அஞ்சி; மன்பதை காக்கும்=மக்கட் கூட்டத்தினைப் பேணிக் காக்கும்; நன் குடிப் பிறத்தல்= நல்ல குடியில் உதித்தல், துன்பம் அல்லது=துன்பந் தருவதல்லது; தொழுதகவு இல் =போற்றத்தக்கதன்று.

கருத்துரை:

மழைவளம் பெய்யாது போனால் ஆட்சியாளரையே மக்கள் குறைகூறுவர். அதனால் பெரும் அச்சம் வரும். கொடுங்கோல் ஆட்சியால் மக்கள் துன்பமுறாத வண்ணம் அவர்களைப் பேணிக்காக்கும் நல்ல குடியில் பிறத்தல் இன்பம் தருவதன்று; போற்றத்தக்கதுமன்று; துன்பம் தருவதே!

இதையேதான்,

மாரி   பொய்ப்பினும்,   வாரி   குன்றினும்,

இயற்கை   யல்லன   செயற்கையில்   தோன்றினும்,

காவலர்ப்   பழிக்குமிக்   கண்ணகன்   ஞாலம்;

(புறநானூறு 35, அடிகள் 28-30)

என்கிறார் புலவர் வெள்ளைக்குடி நாகனார்

அரிய மருந்து போன்ற நல்லாட்சி தருவது அரிதானதா? அல்லது எளிதானதா? எனச் சேக்கிழார் பெரிய புராணத்தில்  மனுநீதிச் சோழன் குறித்த பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ?

அஃதாவது நல்லாட்சி தருதல் எளியதன்று அரியதே என்கிறார்.

ஆள்வோர் மக்களிடம் வரி முதலானவற்றைப் பெறுவதால் அவர்கள் முதலாளிகளாகவும் ஆள்வோர் ஏவலராகவும் ஆகின்றனர். எனவே, ஏவலராகிய ஆள்வோர் மக்கட்பணி செய்ய வேண்டும்.

இப்பொழுதும் பெருமழை செய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் மழைபெய்யாமல் வறட்சி ஏற்பட்டுப் பஞ்சம் உண்டானாலும் ஆட்சியாளரைத்தான் மக்கள் குறைகூறி ஏசுவர்.

எனவே, இயற்கையாலும் செயற்கையாலும் மக்களுக்குத் துன்பம் வராத வகையிலும் அவ்வாறு துன்பம் வந்தால் அவற்றைத் துடைத்தழிக்கும் பணியிலும் ஆள்வோர் ஈடுபட வேண்டும். ஆள்வோர் எவ்வளவுதான் நன்மைகள் புரிந்தாலும் இறுதியில் தீமை ஏதும் புரிந்தார்கள் எனில், அத் தீமையைத்தான் எண்ணுவர். அதனால் ஆள்வோரை இகழ்ந்து பேசுவர். எனவே, ஆட்சிபுரிதல் துன்பம் தருவதே என்பதை உணர்ந்து நிறைகுறைகளை ஆய்ந்து மக்கள் ஆள்வோரை மதித்திடவேண்டும்.

ஆள்வோரும் மக்களுக்கு நன்மைகள்தான்புரிகின்றோம் என அலட்சியமாக இருந்து விடாமல், பழிவரும் செயல்களில் ஈடுபடாமல் விழிப்புடன் செயற்பட வேண்டும்.