kalaigal_arts03

இந்தியக் கலையியலை ஆராய்ந்த மேற்குநாட்டு அறிஞரும் யாவரும், தென்னாட்டு தமிழ்நாட்டு கலைமரபைத் “திராவிடக் கலைமரபு’ என்னும் பெயராலேயே போற்றியுள்ளனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னர், “இந்திய, கிழக்கத்திய சிற்பக்கலை’ எனும் நூலை எழுதி சேம்சு பர்கூசன் என்பவர், திராவிடக் கலைமரபு’ என்னும் பெயராலேயே விரிவாக எழுதியுள்ளார். “”இந்தியாவின் மதிநலமிக்கப் படைப்புகள் அனைத்தும் ஆரியர்களுடைய சாதனை எனச் சொல்லுவது தவறாகும். வேத உபநிடதங்கள் போன்று எழுதப்பட்டவை ஆரியர் அளித்தவை என்பதனை உடன்படலாம். ஆனால், இந்தியாவில் கட்டப்பட்டவை யாவும், கலை நயத்தோடு படைக்கப்பட்டவை யாவும் ஆரியரல்லாத அந்நாட்டுப் பழங்குடி மக்களுடையனவாகும்” என்று தெளிவுறுத்தியுள்ளார்.

கவியோகி முனைவர் ஆனந்த குமாரசுவாமி, “”திராவிடக் கலைமரபு இந்தியக் கலைமரபில், தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று; “இந்தியக் கலை’ என்பதனை உருவாக்குவதில், இது கணிசமான அளவில் பங்குப் பெற்று படைத்து அளித்தவர்கள் தமிழரின் மூதாதையரே” என்னும் கொள்கையை அதில் வற்புறுத்தியுள்ளார். (Dravidan Architecture.pp 4-7) இத்தாலிய நாட்டுக் கலையியல் அறிஞர் மேரியோ புசலலி வெளியிட்டுள்ள “உலகக் கலைகளின் களஞ்சியத்தில்’ “திராவிடக் கலைகள்’ எனும் தலைப்பில், ஏறக்குறைய நூறு பக்கங்கள் தமிழகக் கலைகளைப்பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளமை. இங்குக் கருதத்தக்கதாகும். (Mario Bussai, Ency. of World Arts.vol.4 pp.443-550))

– முனைவர் க.த.திருநாவுக்கரசு: தமிழரின் கலைக்கொள்கை:

தமிழகக் கலைச்செல்வங்கள்: பக்கம் 47