(வருணங்கள், செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்)

? சனாதனத்தின்படிப், பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுவதில்லை. பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே!

     சிற்பிகள் முதலானோர் பூணூல் அணிவதும் உண்மைதான். அதுபோல் திருமணம் அல்லது பிற சடங்குகளின் பொழுது எல்லாச் சாதியினரும் பூணூல் அணிவது உண்மைதான். அஃதாவது சடங்குகளின் பொழுது பிராமணன் மட்டுமே தெய்வத்தை வணங்குவதற்கும் வழி படுவதற்கும் உரியவன் என்று சொல்லி அனைவருக்கும் பூணூல் போட்டுவிடுவதும் உண்மைதான். இதன் மூலம் கடவுளை வேண்டவும் பிராமணனே தகுதியானவன் எனப்படுகிறது. 

“திருமணமாயினும் நீத்தார் சடங்காயினும் நம்மைப் பூணூல் அணியச் செய்யும் பொழுது  அவ்வாறு அணிந்தால்தான் நாம் சடங்கிற்கு உரிய தகுதி பெறுகின்றோம் என்றும் கடவுளின் அருளுக்கு ஆளாகின்றோம் என்றும் கூறி இழிவுபடுத்தும் பொழுது நாம் அதை எதி்ர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் இழி தகைமை இன்றும் உள்ளது. திராவிட இயக்கப் பணிகளாலும் தன்மதிப்பியக்கச் செயற்பாடுகளாலும், இந்நிலைமை ஓரளவு குறைந்துள்ளது.” என முன்பு ஒரு கட்டுரையில் (கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு?, இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல 12.02.2017) குறிப்பிடப்பட்டது இங்கே நினைவு கூரத்தக்கது.

அவ்வாறே பிறர்  பூணூல் அணிந்தாலும் அவற்றிலும் பாகுபாடு காட்டுவதே சனாதனம். பூணூல்களில் பயன்படுத்தப்படும் நூல்கள் வருணத்திற்கேற்ப மாறுபடும். பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், சத்திரியனுக்கு சணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்றுவடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டும். (மனு,அத்தியாயம் 2 : சுலோகம் 44.) இதை மறைத்துவிட்டு அனைவரும் பூணூல் அணியலாம் என்பது வருணாசிரமம் எனக் கூறுவோரைச் சட்டப்படித் தண்டிப்பதுதான் முறையாகும். 

“சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு என்னும் நூலில் பூணூல் அணிவது தொடர்பான வழக்கு ஒன்று குறிக்கப் பெற்றுள்ளது.

விசுவப் பிரம்ம சங்கத்தார் தங்கள் குலத்திற்கான திருமணங்களைத் தாங்களே செய்து கொள்ளலாம் என்றும் பிராமணர்கள் செய்யத் தேவையில்லை என்றும் அறிவித்தனர். பஞ்சாங்கக் குண்டையன் முதலிய பிராமணர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கு பஞ்சாயத்தார் முன்னிலையில் வந்தது. பஞ்சாயத்தார் பிராமணர், பஞ்சாங்கம் குண்டையன் என்பார் கேட்கிற கேள்விகளுக்கு ஆசாரி பிரிவினர் வேத பிரமாணப்படி மறுமொழி கூற வேண்டும். கூறிவிட்டால் அவர்களே தங்கள் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம்; இல்லையென்றால் பிராமணர்களை வைத்துத்தான் திருமணம் நடத்தவேண்டும் என்று கூறினார்கள். பஞ்சாயத்தாரின் விதிகளுக்கு உட்பட்டுப் பிராமணப் பஞ்சாங்கக் குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு மார்க்க சகாயம் ஆசாரி வேதப் பிரமாணமாக விடை அளித்தார். இரு தரப்பையும் கேட்டறிந்த பஞ்சாயத்தார், “”பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி உங்கள் புராணங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யாவருக்கும் நன்றாக விளங்கும்படி உம்மிடத்தில் தருக்கித்ததும் மறுமொழி சொல்ல வகையில்லாமல் நீர் பிரமை கொண்டது யாவருக்கும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இனி விசுவப் பிரம்ம சங்கத்தார் வேத விதிப்படி விவாக முடிப்பதற்கு இந்த பஞ்சாங்கக் குண்டையன் முதலியோர் யாதொரு தடங்கல் செய்யக் கூடாதென்று 1818 இல் தீர்ப்பு சொன்னார்கள். இத்தீர்ப்பை ஒப்புக்கொள்ளாமல் பஞ்சாங்கக் குண்டையனும் வேறு சில பிராமணர்களும் சேர்ந்து கொண்டு ஆசாரிகளுடன் அடிதடிச் சண்டையில் ஈடுபட்டார்கள்.

     மனுதருமம் கூறியபடி பிராமணர்களுக்குத்தான் வேதம் ஓதுவித்தல் உள்ளிட்ட கடமைகள் செய்ய உரிமையுண்டு என்பதை மெய்ப்பிக்க இயலாமல் சண்டையில் பிராமணர்கள் இறங்கியதைச் சித்தூர் வழக்கு எடுத்துக் கூறுகிறது.

1896இல் ஃகம்பி(Hampi) ஏம கூட மடத்தில் நடந்த விவாதத்தில் தேவாங்கர்கள் பூணுல் அணிவது தம் உரிமை என மெய்ப்பித்துள்ளனர். இவ்வழக்குகள் எல்லாம் பிராமணர்களின் ஏகபோக உரிமையாகப் பூணூல் கருதப்படுவதையும் அதன் விளைவையும்தான் காட்டுகின்றன. என்ற போதும் பூணூல்  மூலம் பிராமணர்களை உயர்ததுவதே சனாதனம்.

பூணூலின் முதன்மையைக் கூறவந்த மனு “பிராமணன், உபநயனஞ் செய்து கொள்ளுவதற்கு முன்பு சூத்திரனுக்கு ஒப்பானவன் (2:172)” என்பதன் மூலம் பூணூல்தான் பிராமணர்களை உயர்ந்தவர்களாக்குகிறது, மற்றவர்களை இழிவானவர்களாக்குகிறது என்று அறிவிக்கிறது. பூணூல் அணிந்த பிராமணர்களுக்குக் குமுகத்தில் இருக்க வேண்டிய உயர் நிலை பற்றிப் பேசுகின்ற மனு, “வைதீகமாக இருந்தாலும் உலகியலாக(இலெளகீகமாக) இருந்தாலும் நெருப்பு எப்படி மேலான தெய்வமாகவே இருக்கிறதோ அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம் (9:317)”, ”பிராமணர்கள் கெட்ட காரியங்களில் ஈடுபட்டு இருந்தாலும் சகலமான சுபங்களிலும் பூசிக்கத்தக்கவர்கள். ஏனெனில், அவர்கள் மேலான தெய்வமல்ல வா! (9:319)” என அறிவிக்கிறது.

பூணூல் முதலிய பிராமணச் சாதிக்குறிகளைத் தரிக்கிற சூத்திரன் அங்கங்களை அரசன் வெட்டி விட வேண்டும். (மனு, அத்தியாயம் 9, சுலோகம் 224) எனச் சனாதனம் சொல்லும்போது யார் வேண்டுமானாலும் பூணூல் போடலாம் என்பது ஏமாற்று வேலைதானே.

(தொடரும்)