சி.எம் (எ) கேப்மாரி படக்குழுவினரைக்

கைது செய்க!

‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தை உருவாக்கி வரும் படக்குழுவினரைக் கைது செய்ய வேண்டும்.

கேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம். என்பது கேப்மாரியின் சுருக்கெழுத்துகளாம். அப்படியானால் கே.எம். என்றுதான் குறிப்பிட வேண்டும். பெயர்க்காரணம் என்னவாக இருந்தாலும் சி.எம். என்பது முதல்வரை ஆங்கிலத்தில் – Chief Minister என்பதைச் – சுருக்கமாகக் குறிக்கும் தலைப்பெழுத்துச் சாெற்களாகும். நாட்டின் முதல்வரைக் குறிக்கும் சொற்சுருக்க எழுத்துகளைக் கொண்டு கேப்மாரி என்னும் குற்றக் கும்பலின் பெயராகக் குறிப்பது நாட்டையே அவமதிப்பதாகும். எந்தநாட்டு முதல்வரைக் குறித்தாலும் அது தவறுதான்.

நடிகர்களுக்குத் தங்கள் பெயருடன் தாங்கள் நடித்த படத்தின் பெயர் என்ற முறையில் கெட்டவன், அயோக்கியன், பிச்சைக்காரன், கொலைகாரன் என்ற தீய பண்பினரைக் குறிக்கும் சொற்களைச் சேர்த்துக் கொள்வது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு அவ்வாறல்ல.

பொதுவாகச் சாதியைக் குறிப்பிடும் வசைச்சொல் எனில் எதிர்த்துப் போராட ஆட்கள் உள்ளனர். முதல்வரைக் குறிப்பதால் யாரையோ குறிக்கிறது என மக்கள் அமைதி காக்கின்றனர். ஆனால் இத்தகைய வசைச்சொல்லுடன் முதல்வரைக் குறிப்பது நாட்டு மக்களையே இழிவுபடுத்துவதாகும்.

படக்குழுவினர் யார் மீதும் தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது. பாராட்டிற்குரிய திறமையான கலைஞர்கள்தாம் அவர்கள். எனினும்‘சி.எம். (எ) கேப்பமாரி’ படத்தை எடுப்போர், இயக்குநர், கதையாசிரியர், உரையாடலாசிரியர், பாடலாசிரியர், நடிக-நடிகையர், தொழில்நுட்பக்கலைஞர்கள் முதலான படக்குழுவினர் அனைவரையும் கைது செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பெயருக்கு எதிர்ப்புதெரிவிக்காமல் உடன்படுவதற்குத்தான் படக் குழுவினரை முழுமையாகக் கைது செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பண்பற்ற முறையில் படப்பெயர் வைக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி இடப்படும்.

படம் முடியும் தறுவாயில் நடவடிக்கை எடுத்தால் படத்திற்கு விளம்பரமாகத்தான் அமையும். எனவே, இப்பொழுதே அரசு காவல்துறை மூலம்நடவடிக்கை எடுக்குமா?

இலக்குவனார் திருவள்ளுவன்,

மின்னம்பலம், 09.08.2019