இதயத்தில் எரியும்தழல் என்றைக்கும் அணைவதில்லை!
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை கண்ணுற்றோர் எல்லாம் கதறி அழுவாரே..
குப்பைத்தொட்டிகளில் வாரியிறைத்தாற்போல் பிணங்களைக் குவித்துக் காட்டினாரே!
ஒரு நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்றுசொல்லி, சொந்தநாட்டு மக்களையே நயன்மையின்றிக் கொன்று குவித்தனரே!
மனசாட்சி ஒருசிறிதும் இல்லாத கயவர்கள் இன்றும் மனித உருவில் வாழ்கிறார்கள் என்று மெய்ப்பித்தார்களே!
பாலுக்கு அழுகின்ற பச்சிளம்குழந்தை முதல் பாவையர் யாவரையும் கொடுமையின் உச்சம் கொண்டு சென்றனரே!
இலட்சத்து எழுபதாயிரம் என்கிற உயிர்கள் அவர்களுக்குக் கிள்ளுக்கீரையானதே!
எந்த உயிரையும் அவர்கள் கணக்கில் கொள்ளவில்லையே..
முதிய பெரியவர்களும் ஊனமுற்றவர்களும்கூட இவர்கள் பார்வைக்குத் தப்பவில்லையே!
வழிபடும்தளங்கள்கூட இவர்களின் தாக்குதல் முனையமாக இருந்ததை மன்னிக்க முடியுமா?
பள்ளிச்சிறார்கள் ஓடிவருகையில் அவர்கள்மேல் குண்டுகள் துளைத்து உயிரை எடுத்தனரே!
இப்படி ஒரு இனம் .. அதுவும் கூப்பிடும்தூரத்தில் தம் சொந்தங்கள் இருந்துமே உயிர்ப்பலியாயினரே!
எங்கு நடக்கும் இந்தக் கொடுமை?
எவருமே இல்லையா எம்குலம் காத்திட!!
மொத்தமாய் முடிந்தனரே யாழ்வாழ்ந்த தமிழரெல்லாம்!
எத்தனைக் கொடுமையிது?
இதயத்தில் எரிதழலாய் இன்றைக்கும் எரிகிறதே!
பழிக்குப் பழி என்பதெல்லாம் ஏதோ ஒன்றிரண்டு உயிரைக் கொன்றவர்க்குக் கூறிடலாம்!
ஓர் இனத்தையே அழித்திட்ட பாவிகளுக்கு எந்த பரிவுஇரக்கமின்றி இம்மண்ணிலே இருக்கக்கூடுமோ?
நினைவேந்தல் நாளில்கூட ஒருசேர கூடியழ மறுக்கும் ஈழமண்ணிலே.. இன்றைக்கு இல்லையென்றாலும் புரட்சியின் பூகம்பம் வெடிக்கத்தான் செய்யும்!
இத்தனை உயிர்களின் இரத்தத்திற்கு விடை சொல்லும் நாள் ஒன்று வந்தாக வேண்டும்!!
என் தமிழ் இனமே!
எவரெல்லாம் தமிழனத்திற்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ.. இரண்டகம் செய்தனரோ.. அவரையெல்லாம் அடையாளம் கண்டிருக்கிறோம்! தண்டனைக்கு எவரும் தப்பவே முடியாது!
அறம் உறுதியாய் வெற்றி பெறும்!! காலம் கனியும்.. எமக்கான தமிழ் ஈழம் உறுதியாய் மலரும்!
எண்ணற்ற வீரர்களின் ஈக மெல்லாம் ஒரு நாள் பேருருவம் எடுக்கும்!
எங்கள் பிரபாகரன் இறக்கவில்லை.. எங்கள் இலக்கை நாங்கள் வென்றெடுக்க எல்லாரும் பிரபாகரன் ஆவோம் என்பதே இன்றைய நாள் சூளுரையாம்!
Leave a Reply