9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல்!
இன அழிப்புக்கு பொறுப்புக் கோரல்!

இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்து வரும் தமிழ் இனத்தின் தொன்மையும் செழுமையும் நிறைந்த வரலாறு, பண்பாடு, வாழ்வியல் பதிவுகளைச் சிதைத்து அழித்து எம் மக்களின் நிகழ்கால எதிர்கால அரசியல். சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கூட்டு விருப்பத் தெரிவுகளை அழித்தொழித்துத் தமிழ் மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக வாழ்வதை மறுதலித்துக் கடந்த கால அழிவுகளிலிருந்து என்றுமே மீண்டெழ முடியாத பலவீனமான சமூகமாக கையறு நிலையில் தொடர்ந்து வைத்திருக்க முனையும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்கின்றது.

மே 2009இற்குப் பின்னர் அகத்திலும் புறத்திலும் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தும் நுண் திட்டங்கள் சிங்களத் தேசத்தினால் உருவாக்கப்பட்டுத் தமிழ் மக்களை பிளவுபடுத்தி உள் முரண்பாடுகளுக்குள் சிக்க வைத்துப் பொது எதிரியை நோக்கி பலமான கட்டமைப்பாக இணைந்து விடாது, தாயக, புலம்பெயர் மக்கள் தம் ஆற்றலை ஒன்று திரட்ட விடாது பார்த்துக் கொள்கின்றது. ஒருங்கிணைந்த போராட்ட நிகழ்ச்சி நிரலில் உயிர்த்தெழு (Phoenix) பறவையாக த் தமிழ் மக்கள் மீண்டெழ முடியாது வைத்திருக்கும் சூட்சுமமான நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிலையாக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

 

தமிழர் தேசமே! இந்த நச்சு வளையத்தை அடையாளம் கண்டு உயிர்த் துடிப்புள்ள போராட்டத்தை உலக அரங்கிலே ஒற்றுமையாகக் கட்டியெழுப்ப மாட்டாயா என்ற எதிர்பார்ப்போடு ஈகிகளின் ஆதனும்*ஆன்மாவும்) தாயக மக்களும், விடுதலையை நேசிப்போருமாக ஏங்கிக் கிடக்கின்றனர். வெவ்வேறு வடிவங்களில் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டாலும் நாம் அனைவரும் ஓர் இலக்கினை நோக்கிப் பயணிக்கின்றோம் என்ற புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்வோம்.

70 வருட இன அழிப்பின் உச்சம் தொட்ட முள்ளிவாய்க்கால் கொடுமைகள் உலகின் கண்களிலிருந்து மறைந்து போக விடலாமா? தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது, திட்டமிடப்பட்ட இன அழிப்பு என்பதை என்றோ ஒரு நாள் உலகம் ஏற்றுக் கொள்ளச்    செய்வோம்! அழிந்து கொண்டிருக்கும் இனத்தை பாதுகாக்க கழுவாய் (பரிகார) நீதி வழங்க வேண்டும் என்று மானுடத்தை நேசிக்கும் உலகளாவிய மக்களை எமக்காகக் குரல் கொடுக்க வைப்போம்!  அவர்களின் ஓங்கிஒலிக்கும்  குரல் உலக நாடுகளின் மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்த வைப்போம்!

பெரும்இனஅழிப்பு  (HOLOCAUST) என்றதுமே யூத மக்களின் மீதான இன அழிப்பு, இசுரெபிரெனிகா(SREBRENICA) என்றதும் அப்பாவி மக்களின் இன அழிப்பு என்று உலகின் மனப் பதிவில் நினைவுகள் வலம் வருவதைப் போல முள்ளிவாய்க்கால் என்ற சொல் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட கொடூரமான இன அழிப்பு வெறியாட்டம் என உலகெங்கிலுமுள்ள மக்கள் நினைவுக்கு வர வேண்டுமென்பதற்காகவே 2010 ஆம் ஆண்டில் பிரித்தானியத் தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் இன அழிப்பினை வருடா வருடம் நினைவு கூறத் தொடங்கியது.

எம் மக்கள் பட்ட அவலங்களை உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ளவர்களுக்கு எடுத்துச் சென்று குழந்தைகள், பெண்கள், முதியோர் என்று பாராது ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட கொடூரச் செயல்களிற்கு நீதி கேட்க வைக்க வேண்டும், உலகின் மன ச்சான்றினை எம் பக்கம் திருப்ப வேண்டும், தாம் வாழும் நாடுகளெங்கும் அதிகார மையங்களை இன அழிப்பினை தடுத்து நிறுத்தக் குரல் கொடுக்க வைக்க வேண்டும், தமிழர் தேசத்தின் பொது எதிரிக்கெதிராக ஒற்றுமையாக அணி திரள வேண்டும், புதிய வரலாற்றினை வரைய வேண்டும். இ ஃ து இன அழிப்புக்குள்ளாக்கப்படும் அனைத்து மக்களுக்கும் வழி காட்ட வேண்டும்.

 

9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல்

வைகாசி 03, 2049  / மே 18 , 2018

பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில்

வழமை போன்று மத்திய இலண்டனில்

பளிங்கு வளைவு / Marble Arch  நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள

சீர்திருத்தர் மரஓவியம்  [The Reformer’s Tree (W2 2EU)] என்னும் இடத்தில்  மாலை 4.30 மணி தொடக்கம் 7.00 மணி வரை

பொதுக்கூட்டத்துடன் நினைவு கூரப்பட உள்ளது.

 

எம் இனிய உறவுகளே!

இன அழிப்பிற்கான பொறுப்புக் கோரல்பன்னாட்டு நீதி விசாரணை

மீள நிகழாமைக்கான கட்டமைப்பு மாற்றங்கள்

கழுவாய்(பரிகார) நீதி என்பனவற்றை வலியுறுத்தி 

நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்!

சங்கீதன்

பிதபே தகவல் ஒருங்கிணைப்பாளர்

[Sangeeth, BTF Media Coordinator, +44 (0) 7412 435697 ]