(உ.வே.சா.வின் என் சரித்திரம் 52 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2)

அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 1/2

மாயூரத்திற்குச் சென்ற மூன்றாம் நாள் ‘பாடங் கேட்க ஆரம்பித்துவிட்டோம்’ என்ற சந்தோசத்தில் நான் மூழ்கினேன். “சாமா, நீ இன்றைக்கு நைடதம் கேட்க ஆரம்பித்ததே நல்ல சகுனம். கலியின் தொல்லைகள் நீங்குவதற்கு நைடதத்தைப் படிப்பார்கள். இனிமேல் நம் கட்டம் தீர்ந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்” என்று என் தந்தையார் சொன்னார். அது வாசுத்தவமென்றே நான் நம்பினேன். மனிதன் முயற்சி செய்வதெல்லாம் ஏதாவது நம்பிக்கையை வைத்துக்கொண்டு தானே?

பாடங் கேட்ட சந்தோசத்தோடு நானும் என் தந்தையாரும் சாகைக்கு வந்து போசனம் செய்தோம். என் தந்தையார் திண்ணையில் சிரமபரிகாரம் செய்துகொண்டார். நான் அருகில் உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைப் படித்து வந்தேன்.

கோபாலகிருட்டிண பாரதியாரைக் கண்டது

அப்போது வீதி வழியே ஒரு கிழவர் கையில் மூங்கில்கழி ஒன்றை ஊன்றிக்கொண்டு சென்றார். அவரைக் கண்டவுடன் என் தகப்பனார் எழுந்து, “பாரதியாரவர்களா?” என்று கேட்டுக்கொண்டே திண்ணையைவிட்டு இறங்கினார். அக்கிழவர், என் தந்தையாரைப் பார்த்துவிட்டு, “யார்? வேங்கடசுப்பையரா? ஏது இவ்வளவு தூரம்?” என்று கூறியவாறே நாங்கள் இருந்த திண்ணையில் வந்து உட்கார்ந்தார். என் தந்தையார் அந்த முதியவரை நமசுக்கரிக்கும்படி கூறவே நான் வணங்கிவிட்டு நின்றேன்.

“இந்தப் பிள்ளையாண்டான் யார்?” என்று பாரதியார் கேட்டார்.

“இவன் என் குமாரன்.”

“என்ன செய்துகொண்டிருக்கிறான்? சங்கீதம் அப்பியாசம் செய்து வருகிறானா?”

“செய்து வருகிறான். தமிழ் படித்தும் வருகிறான். இங்கே மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படிக்கச் செய்யலாமென்று வந்திருக்கிறேன்.”

“அப்படியா? சந்தோசம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை நல்ல வித்துவான். நல்ல குணசாலி, உபகாரி, சிறந்த கவி. ஆனால் அவர் சங்கீத விரோதி. சங்கீத வித்துவானென்றால் அவருக்குப் பிரியமிருப்பதில்லை.”

இந்த விசயத்தைப் பாரதியார் சொன்னபோது நான் அதை நம்பவில்லை. பாரதியாருடைய அழகற்ற உருவத்தைப் பார்த்து நான் வியப்படைந்தேன். அவருடைய கோணலான உடம்புக்கும் அவருடைய புகழுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அன்றுதான் உணர்ந்தேன். “நந்தனார் சரித்திரத்தை இவரா இயற்றினார்?” என்றுகூட நான் நினைத்தேன். அச்சரித்திரத்தில் இருந்த மதிப்பு அவரைப் பார்த்தபோது அவர்பால் உண்டாகவில்லை. கவர்ச்சியே இல்லாத அவரது தோற்றமும் அவர் கூறிய வார்த்தையும் என் மனத்தில் திருப்தியை உண்டாக்கவில்லை. ஆயினும் என் தகப்பனார் அவரிடம் காட்டிய மரியாதையைக் கண்டு நானும் பணிவாக இருந்தேன்.

“இவனுக்குச் சங்கீதத்தில் எந்த மட்டும் அப்பியாசம் செய்துவைத்திருக்கிறீர்கள்? கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்கள் வருமா?”

“எனக்குத் தெரிந்த மட்டிலும் சொல்லி வைத்திருக்கிறேன். கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்களில் எனக்குத் தெரிந்தவற்றிற் சிலவற்றை இவனும் பாடுவான்.”

“அப்படியா! அந்தக் கீர்த்தனங்களைக் கேட்டு எவ்வளவோ நாளாகிவிட்டது. எங்கே [1] ‘குசுமகுந்தளாம்பிகையே’ என்ற கீர்த்தனத்தைப் பாடப்பா; கேட்கலாம்” என்று பாரதியார் என்னைப் பார்த்துச் சொன்னார். நான் அதைப் பாடினேன்.

“நல்லது; பையனுக்குச் சாரீரம் இருக்கிறது. இதை வீண் பண்ணிவிடக் கூடாது. மேலும் மேலும் அப்பியாசம் செய்து வர வேண்டும்” என்று சொல்லிவிட்டு வேறு சில கீர்த்தனங்களையும் பாடும்படி சொன்னார். நான் பாடினேன். என் தகப்பனாரும் சில கீர்த்தனங்கள் பாடினார். நாங்கள் இருவரும் சேர்ந்து சிலவற்றைப் பாடினோம்.

“இந்த மாதிரி கீர்த்தனங்களை இங்கே யார் பாடுகிறார்கள்? இந்தப் பிள்ளை இவ்வளவு நன்றாகப் பாடுவதைக் கேட்க எனக்குச் சந்தோசமாக இருக்கிறது.”

“எல்லாம் உங்களைப் போன்ற பெரியவர்கள் ஆசீர்வாதம்தான். இவனை இங்கேயே விட்டுவிட்டுப் போகலாமென்று எண்ணி வந்திருக்கிறேன். தாங்கள் இவனுக்குச் சங்கீத அப்பியாசம் செய்து வைக்கவேண்டும்” என்று என் தகப்பனார் பாரதியாரைக் கேட்டுக்கொண்டார்.

“அதற்கு என்ன தடை? எனக்கும் பொழுது போகும்” என்று அவர் சம்மதித்தார்.

என் தந்தையாரும் பாரதியாரும் பழைய சமாசாரங்களைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்பேச்சினால் பாரதியார் கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்களில் எவ்வளவு விருப்பமுடையவரென்பது தெரிந்தது. பின்பு சாகைக்கு வந்து பார்ப்பதாக என் தந்தையார் சொல்லவே பாரதியார் விடைபெற்றுச் சென்றார்.

பாரதியாரிடம் சங்கீத அப்பியாசம் செய்தது

மறுநாள் விடியற்காலையிலேயே நானும் என் தந்தையாரும் பாரதியார் தங்கியிருந்த சாகைக்குச் சென்றோம். அவர் அக்காலத்தில் தம் மாணாக்கராகிய இராமசாமி ஐயருடைய வீட்டில் வசித்து வந்தார். இராமசாமி ஐயர் மாயூரநாத சுவாமி ஆலயத்தில் கைங்கரியம் செய்வார்.

அன்றே நான் பாரதியாரிடம் சங்கீத அப்பியாசத்தைத் தொடங்கினேன். அது முதல் பெரும்பாலும் தினந்தோறும் விடியற்காலையில் பாரதியாரிடம் போய் வரலானேன். சில நாட்களில் மாலைவேளைகளில் செல்வதும் உண்டு; பிற்பகலில் அவரோடு காவேரித் துறையாகிய துலாக்கட்டத்துக்குச் சென்று சந்தியாவந்தனம் செய்து வருவேன். துலாக்கட்டத்தில் அக்காலத்தில் முன்சீப் கச்சேரி இருந்தது. மாயூரம் முன்சீபாக வேதநாயகம் பிள்ளை உத்தியோகம் பார்த்து வந்தார். அவர் தமிழ் வித்துவானென்று நான் கேட்டிருந்தேன். தூரத்தில் இருந்தபடியே அவர் கச்சேரி பண்ணுவதை நான் சில சமயங்களில் கவனிப்பேன்.

பாரதியாரோடு பழகப் பழக அவர் பெரிய மகானென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அவர் சாரீரம் கம்மலாக இருந்தது. அதனால் அவர் சில வருசங்களாகப் பிடில் வாத்தியத்தைப் பயின்று தனியே இருக்கும் நேரங்களில் அதை வாசித்துப் பொழுதுபோக்கி வந்தார். காலைவேளைகளிலும் மாலைவேளைகளிலும் மாயூரநாதர் கோயிலிலுள்ள அகசுத்தீசுவர சுவாமி சந்நிதியில் நெடுநேரம் யோகம் செய்துகொண்டேயிருப்பார்.

வேடிக்கையாகப் பேசுவதிலும் கதைகள் சொல்லுவதிலும் அவர் வெகுசமர்த்தர். ஏதாவது ஒரு வார்த்தை சொன்னால் அந்த வார்த்தையோடு ஒரு புராண கதையைச் சம்பந்தப்படுத்திச் சொல்வார். பொழுதுபோவதே தெரியாது. பேசும்போது அடிக்கொரு தரம் பழமொழிகள் அவர் வாக்கிலிருந்து வரும்.

அவரிடம் நான் பல கீர்த்தனங்களைக் கற்றுக்கொண்டேன். அவர் இயற்றிய கீர்த்தனங்கள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்களுக்கு உரிய மெட்டையும் இராகதாளங்களையும் அவர் சொல்லிக் காட்டினார். சில சமயங்களில் அவர் மாணாக்கராகிய இராமசாமி ஐயரும் எனக்குக் கீர்த்தனங்களைச் சொல்லித் தருவார்.

(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.

அடிக்குறிப்பு

1. இக்கீர்த்தனம் உடையார்பாளையம் சிவாலயத்திலுள்ள அம்பிகை விஷயமானது.