(உ.வே.சா.வின் என் சரித்திரம் 78 : அன்பு மூர்த்திகள் மூவர்-தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்- 48

சில சங்கடங்கள்

ஒரே மாதிரியான சந்தோசத்தை எக்காலத்தும் அனுபவிப்பதென்பது
இவ்வுலகத்தில் யாருக்கும் சாத்தியமானதன்று. மனிதனுடைய வாழ்விலே
இன்பமும் துன்பமும் கலந்து கலந்தே வருகின்றன. செல்வத்திலே
செழித்திருப்பவர்களாயினும், வறுமையிலே வாடுபவர்களாயினும் இன்பம்
துன்பம் இரண்டும் இடையிடையே கலந்து அனுபவிப்பதை அல்லாமல்
இன்பத்தையே அனுபவிக்கும் பாக்கியவான்களும் துன்பத்திலே வருந்தும்
அபாக்கியர்களும் இல்லை.

எனக்கு வேண்டிய நல்ல வசதிகளும் தமிழ்க் கல்வி இலாபமும்
திருவாவடுதுறையிலே கிடைத்தன
. மனத்திலே சந்தோசம் இடையறாது
உண்டாவதற்கு வேண்டிய அனுகூலங்களெல்லாம் அங்கே குறைவின்றி
இருந்தன. ஆனாலும், இடையிடையே அச்சந்தோசத்திற்குத் தடை நேராமல்
இல்லை.

ஒவ்வாத உணவு

இரண்டு வகையாக நடந்து வந்த பாட வகுப்பில் நானே படித்து
வந்தமையால் சில நாள் என் தொண்டையும் நாக்கும் புண்ணாகிவிடும். ஆகாரம் செய்துவந்த சத்திரத்தில் எல்லோரையும் போல் நானும் ஒருவனாக இருந்து ஆகாரம் பண்ணிவந்தேன் என் அசௌகரியத்தை அறிந்து கவனித்து அதற்கேற்ற உணவுகளை அளிப்பவர் யாரும் அங்கே இல்லை. எனக்கு இன்ன வகையான உணவு செய்துபோட
வேண்டுமென்று துணிந்து சொல்லுவதற்கும் நான் அஞ்சினேன். சத்திரத்தில்
அப்போது உணவு அளித்து வந்தவள் ஒரு கிழவி. மடத்திலிருந்து வரும்
உணவுப் பொருள்களுக்குக் குறைவு இல்லை. உணவருந்த வருபவர்களுக்கு
அவற்றைக் கொண்டு நல்ல உணவு சமைத்து வழங்குவதற்குரிய சக்தி அந்த
அம்மாளுக்கு இல்லை. எல்லாம் சரியாகவே நடந்து வருமென்பது
மேலேயுள்ளவர்களது கருத்து. “இவ்வளவு பெரிய இடத்தில் இப்படி
இருக்கிறார்களே!” என்று நான் வருந்தினேன்.

சத்திரத்து உணவு என் தேகத்துக்கு ஒவ்வாமையால் சில நாட்கள் நான்
அன்னத்தோடு மோரை மட்டும் சேர்த்துக் சாப்பிட்டதுண்டு.
அயலூர்களிலிருந்து திருவாவடுதுறைக்கு வரும் வித்துவான்களிலும்
கனவான்களிலும் சிலர் சில சமயங்களில் சமையற்காரர்களை அழைத்து
வருவார்கள்; சில சமயங்களில் குடும்பத்துடன் வருவதுமுண்டு. நான் பண்டார
சந்நிதிகளுக்கு வேண்டியவனென்று தெரிந்தவர்களாதலால் என் நிலைமையை
அறிந்து தங்களுடன் சேர்ந்து சாப்பிடும்படி அவர்கள் என்னை
வற்புறுத்துவார்கள். அப்போது எனக்கு மெத்த ஆறுதல் ஏற்படும்.

குழம்பு செய்த குழப்பம்

ஒரு நாள் எனக்கு வயிற்றுப் போக்கு உண்டாயிற்று. மாங்கொட்டைக்
குழம்பு வைத்துச் சாப்பிட்டால் அந்நோய் நீங்குமென்று
எனக்குத்
தெரியுமாதலால் அக்கிழவியிடம் நயமாகப் பேசி அதைச் செய்து போடும்படி
கேட்டுக் கொண்டேன். அந்த அம்மாள் அப்படியே செய்து போட்டாள். நான்
ஆகாரம் செய்ய உட்கார்ந்த பின் என் இலையில் அந்தக் குழம்பைப்
பரிமாறினாள். என்னுடன் உணவருந்தியவர்களுள் ஒருவர் இதைக் கவனித்தார்,
திருவாலங்காட்டுக்குச் சென்று சம்சுகிருதம் படித்து வருபவர் அவர்.
அவருக்கு மனம் பொறுக்கவில்லை. “எல்லாரும் சாப்பிடுகிற
இப்பொதுவிடத்தில் இவருக்கு மட்டும் தனியாக எதையோ செய்து
போடுகிறாளே!” என்று அவர் எண்ணினார். அந்நினைவு வளர்ந்தது. ஒரு
பெரிய தவறு சத்திரத்தில் நேர்ந்ததென்று தோற்றும்படி அச்செய்தியை மிகவும்
சாதுரியமாக விரித்து அவர் சுப்பிரமணிய தேசிகர் காதில் விழும்படி செய்து
விட்டார்
. உடனே கிழவிக்கு மடத்திலிருந்து உத்தரவு வந்தது; “பலர்
சாப்பிடுகையில்ஒருவருக்கு மட்டும் தனியே உபசாரம் செய்வது தப்பு; இனிமேல்
இம்மாதிரியான காரியம் செய்யக்கூடாதென்று உத்தரவாகிறது” என்று
காரியத்தர் வந்து கிழவியிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போனார்.

இந்நிகழ்ச்சி எனக்கு மிக்க மனத் துன்பத்தை உண்டாக்கியது, “பண்டார
சந்நிதிகள் நம்மிடமே நேரில் விசயத்தை விசாரித்துத் தெரிந்து
கொண்டிருக்கலாமே! யாரோ ஒருவர் சொன்னதைக் கேட்டு இப்படிச்
செய்தார்களே” என்று வருந்தினேன். “ஒரு நாளும் அவர்கள் அப்படிச்
செய்யமாட்டார்கள். யாரோ ஒருவர் போய் எனக்கு விசேட உபசாரம்
நடந்ததாகச் சொல்லியிருக்கக் கூடும். பொதுவிடத்தில் பட்சஷபாதம் இருப்பது
சரியன்று என்று எண்ணி இப்படி உத்தரவு அனுப்பியிருக்கலாம்
. நமக்கு நடந்த
உபசாரம் மாங்கொட்டைக் குழம்புதான். அதுவும் தேக அசௌக்கியத்துக்காக
ஏற்பட்டதென்று தெரிந்திருந்தால் நம்மிடம் விசேட அன்பு வைத்திருக்கும்
அவர்கள் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள்” என்று நானே சமாதானம்
செய்து கொண்டேன்.

இரவில் பொழுது போக்கு

இரவில் ஆகாரம் செய்த பிறகு மடத்திற்கு வந்து அங்குள்ள
குமாரசாமித் தம்பிரானுடன் பாடத்தைப் படித்துச் சிந்தித்து வருவேன். பிறகு
அங்கேயே படுத்துக் கொள்வேன். இவ்வழக்கம் திருவாவடுதுறை சென்ற பிறகு
சில மாதங்கள் வரையில் இருந்தது. மடத்தில் தங்கி வந்த காலத்தில் ஒரு நாள்
இரவு அவருடன் வழக்கம்போலவே படித்துவந்தேன். மடத்தின் கீழ்ப்பக்கத்தில்
இருந்த சவுகண்டியில் தம்பிரான்கள் தங்கியிருப்பதற்காக இரண்டு அறைகள்
உண்டு. குமாரசாமித் தம்பிரான் ஓர் அறையில் இருந்து வந்தார். அதற்கு
எதிரே உள்ள அறையில் பன்னிருகைத் தம்பிரான் என்பவர் இருந்தார். அவர்
நல்ல செல்வாக்குடையவர். ஆதீனத்தில் பொறுப்புள்ள உத்தியோகங்களை
வகித்தவர். அறைகளுக்கு மத்தியிலுள்ள கூடத்தில் நாங்கள் இருந்து படித்த
நூல்களைச் சிந்தனை செய்வோம். அப்போது அவரும் உடனிருந்து
கவனிப்பார். படித்துக் கொண்டிருந்த நான் அலுப்பு மிகுதியால் அங்கே
படுத்துத் தூங்கி விட்டேன். இரவு மணி பத்து இருக்கும். குமாரசாமித்
தம்பிரானும் பன்னிருகைத் தம்பிரானும் பேசிக்கொண்டிருந்தனர். முத்துசாமி
ஓதுவார் அங்கே வந்தார்.

எதிர்பாராத சம்பவம்

மடத்திலும் கோயிலிலும் அர்த்த சாமத்தில் நிவேதனமாகும்
பிரசாதங்களில் ஒரு பகுதி சுப்பிரமணிய தேசிகருக்கு வரும். அவற்றில் சிறிது, தாம் உபயோகித்துக் கொண்டு பாக்கியைத் தனித்தனியே பிரித்துக்
தம்பிரான்களுக்கும் அனுப்புவார். ஒவ்வொரு நாளும் 10 மணிக்கு வடை,
சுகியன், தேங்குழல் முதலிய பிரசாதங்கள் தம்பிரான்களுக்குக் கிடைக்கும்.
குமாரசாமித் தம்பிரானுக்கும் பன்னிருகைத் தம்பிரானுக்கும் கொடுப்பதற்காக
அப்போது முத்துசாமி ஓதுவார் அவற்றை எடுத்து வந்தார். அவர் வந்த சமயம்
தம்பிரான்கள் இருவரும் அன்று மாலையில் நடந்த ஒரு களவைப் பற்றிச்
சம்பாசித்திருந்தனர்.

பன்னிருகைத் தம்பிரான் ஒரு சிறந்த ஏறுமுகருத்திராட்ச கண்டியை
அணிந்திருந்தார். அதன் இரு தலைப்பிலும் கல்லிழைத்த தங்க முகப்புகள்
உண்டு ஏறக்குறைய இரண்டாயிர உரூபாய் பெறுமானமுள்ளது. அன்று மாலை
தம்பிரான் குளப்புரைக்குப் போய் வந்து சில வேலைகளைக் கவனித்தார். சிறிது
நேரமான பிறகு பார்த்த போது கண்டி காணப்படவில்லை. விலையுயர்ந்த
பொருளாதலால் மடத்துக் காரியத்தர்கள் அதைத் தேடலாயினர்.

“தவசிப் பிள்ளைகளை விசாரிக்கச் சொல்லவேண்டும். இந்த மடத்தில்
இந்த மாதிரி நடப்பதென்றால் ஆதீனத்துக்கே குறைவல்லவா?” என்றார்
பன்னிருகைத் தம்பிரான்.

“ஒவ்வொரு பயலாகக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும். திருடினவன்
இலேசில் சொல்ல மாட்டான். கட்டிவைத்து அடிக்கவேண்டும்” என்று சொன்னார்
குமாரசாமித் தம்பிரான்.

அங்கே இருந்த முத்துசாமி ஓதுவார் அவர்களுடைய பேச்சு இன்ன
விசயத்தைப் பற்றியதென்பதை அறிந்து, ‘இது தெரிந்து சந்நிதானம் கூட
மிகவும் கவலையோடிருக்கிறது. இவ்வளவு துணிவான காரியத்தைச் செய்தவன்
யாரா யிருப்பான்? அங்கங்கே எல்லோரும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்”
என்று சொல்லி அச்சம்பாசணையில் கலந்தனர்.

அவர்கள் மூவரும் பேசிய சத்தத்தால் என் தூக்கம் கலைந்தது. நன்றாகத்
தூங்கின எனக்குச் சிறிது விழிப்பு உண்டாயிற்று. கண்ணைத் திறவாமல்
மறுபடியும் தூக்கத்தை எதிர்பார்த்துப் படுத்த வண்ணமே இருந்தேன்.
அப்போது அங்கே வந்த வேறொரு மனிதர், “இங்கே வந்திருக்கும் புதிய
மனிதர்களையும் விசாரிக்கவேண்டும்” என்றார்.

“புதிய மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? எல்லாம் பழைய
பெருச்சாளிகளே. அவர்கள் வேலையாகத்தான் இருக்கும் இது” என்றார்
குமாரசாமித் தம்பிரான்“அப்படிச் சொல்லலாமா? இந்த ஐயர் புதியவர் அல்லவா? இவர்
எடுத்திருக்க மாட்டாரா?” என்று அந்த மனிதர் சொன்னார்.

அந்த வார்த்தை என் காதில் விழுந்ததோ இல்லையோ எனக்கு
நடுக்கமெடுத்தது. அரை குறையாக இருந்த தூக்க மயக்கம் எங்கேயோ பறந்து
போயிற்று.

“ஐயோ! ஒரு பாவமும் அறியாத நம்மைச் சந்தேகிக்கிறார்களே!
திருட்டுப் பட்டம் கட்டிக் கொள்ளவா இவர்களுடன் பழகுகிறோம்! எதற்காக
நாம் இங்கே வந்தோம்!” என்றெல்லாம் என் மனம் சிந்திக்கத் தொடங்கியது.

“என்ன சொன்னாய்? அடபாவி! அந்த வார்த்தையை மறுபடி சொல்ல
வேண்டாம்” என்று பன்னிருகைத் தம்பிரான் அம்மனிதரை நோக்கிச்
சொன்னார்.

குமாரசாமித் தம்பிரானோ மிக்க கோபக் குறிப்புடன், “உம்மை யாரையா
கேட்டார்? மனிதர்களுடைய தராதரம் இலவலேசமும் தெரியாத நீர்
அபிப்பிராயம் சொல்ல வந்து விட்டீரே! வந்த வழியைப் பார்த்துக்கொண்டு
போம். இனி இங்கே நிற்க வேண்டா” என்று கடுமையாகக் கூறினார்.

(தொடரும்)


என் சரித்திரம், உ.வே.சா.