(மு.க.தாலின் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை பிப்பிரவரி 19ஐ –  தொடர்ச்சி)

மு.க.தாலினும் பிப்பிரவரி 19-உம்! (2)

சூழ்ச்சித் திட்டம் தீட்டியது யார்?

  ‘பழையவற்றையெல்லாம் ஏன் கிளறுகிறீர்கள்’ – எனச் சண்டைக்கு வருகிறார்கள், பழைய நண்பர்கள் சிலர். உள்ளூர் அழைப்புக்கும் 25 காசு, வெளியூர் அழைப்புக்கும் 25 காசு என்கிற கட்டணக் குறைப்புத் திட்டத்தில் (Rate cutter) இணைந்து விட்டார்கள் போலிருக்கிறது… என்னை ஒரு சொல் சொல்ல விடாமல் மூச்சு விடாது பேசிக் கொண்டிருக்கிறார்கள். கூட இருந்தே குழி பறிப்பவர்களுக்கு மறப்போம் மன்னிப்போமெல்லாம் பொருந்தாது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

  சென்னைக் கடற்கரையில் போராடிய இளைஞர்களுக்கு இடையில் போய் உட்கார்ந்து கொண்டு தற்படம்(selfie) எடுத்து முகநூலில் வெளியிட்டுக் கொள்ள அவர்களுக்கு உரிமை இருக்கிறதென்றால், எம் இனம் காக்கக் குரல் கொடுத்த வழக்கறிஞர்களுக்கு நீதி கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது. இதை அவர்கள் புரிந்து கொள்வது நல்லது.

  சென்ற மாதம், சென்னைக் கடற்கரையில் போராடிய இளைஞர்களைக் கலைக்கக் காவல்துறை எடுத்த நடவடிக்கை அடாவடித்தனமானது என்றால், 2009 பிப்பிரவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் போராடிய வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அடாவடித்தனமானது, அட்டூழியமானது! அந்தத் தாக்குதலில் மு.க.தாலினுக்குத் தொடர்பிருக்கிறதா இல்லையா என்பதுதான் என்னுடைய கேள்வி.

  எடுத்த எடுப்பிலேயே இந்தக் கேள்வியை நான் எழுப்பி விடவில்லை. “சென்னைக் கடற்கரைத் தாக்குதலுக்கு நீதி உசாவல் (விசாரணை) தேவை” என்று திருவாளர் மு.க.தாலின் முழங்குவதைப் பார்த்த பிறகுதான், இதைக் கேட்டேன். 2009 உயர்நீதிமன்றத் தாக்குதலுக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததை தாலின் அறிந்திருக்கிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே கேட்டேன்.

  2009 பிப்பிரவரி 19ஆம் நாள் காவல்துறையால் தாக்கப்பட்ட சென்னை வழக்கறிஞர்கள் செய்த ‘குற்றம்’, இலங்கை நடத்திய இனப்படுகொலையை எதிர்த்துப் போராடியது மட்டும்தான்! அப்பொழுது மத்தியில் ஆட்சியிலிருந்தது, சோனியா காங்கிரசு. அதன் வாழ்த்துடன்தான் தமிழின அழிப்பில் ஈடுபட்டது, இலங்கை. அதன் துணையில்தான் இங்கே பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தது, தி.மு.க.!

  சோனியாவை எதிர்த்தால் பதவி பறி போய்விடும் என்கிற பரிதாபகரமான நிலையில் தி.மு.க., இருந்தது உண்மைதான்! ஆனால், ‘அதனால்தான் இனப்படுகொலையைக் கண்டும் காணாததைப் போல் தி.மு.க., இருந்தது’ – என்கிற வாதத்தில் உண்மையில்லை. இனப்படுகொலையைக் கண்டும் காணாதவர்கள் போல் இருந்திருந்தால், அதற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பிலும் அப்படித்தானே இருந்திருக்க வேண்டும்! போராடியவர்களை ஏன் தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும்?

  இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தி.மு.க., அரசு முயற்சிக்காவிட்டாலும் கூட, 8 கோடித் தமிழர்களால் அதை வென்றெடுத்திருக்க முடிந்திருக்கும். தான் அதைச் செய்ய முயலாத நிலையில், அதற்காகப் போராடிய தமிழக மக்களையாவது தடுக்காமல் இருந்திருக்க வேண்டும் தி.மு.க. அப்படி இருந்ததா?

  தெருப் பொறுக்கிகளால் தாக்கப்படுகிற தன்னுடைய பிள்ளையைக் காப்பாற்ற ஓடி வருகிற தாயைப் போல, வழக்கறிஞர்களைக் காப்பாற்ற ஓடோடி வந்த நீதியரசர் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தனுக்கு, அந்தக் ‘குற்றத்துக்காக’ அந்த நிமையமே (நிமிடமே) தண்டனை கொடுக்கப்பட்டதே! அந்தக் கொடுமைக்குக் காரணமானவர்களுக்கு மட்டும் இந்த நிமையம் வரை தண்டனை வழங்கப்படவில்லையே… ஏன்?

  காவல்துறையின் தாக்குதல் தொடர்பாக உசாவிய(விசாரித்த) உயர்நீதிமன்றம், சென்னைக் காவல்துறை ஆணையாளர் இராதாகிருட்டிணன், கூடுதல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் முதலானோரைக் கண்டித்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு ஆணையிட்டது. இது, தாலினுக்குத் தெரியுமா தெரியாதா?

  ‘நடந்த தாக்குதலுக்குக் காவல்துறை ஆணையர் இராதாகிருட்டிணனே முழுப் பொறுப்பு’ என்று, ஏ.கே.விசுவநாதன் நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பம் அளித்தார். “ஆணையர் என்ன சொன்னாரோ அதைத்தான் நாங்கள் செய்தோம். கூடுதல் படையுடன் ஆணையர் வந்த பிறகே, ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் முதலானோர் காயமடைந்தனர்” என்று அந்த விண்ணப்பத்தில் அவர் தெரிவித்திருந்தார். உயர்நீதிமன்ற வளாகத்தில் இராதாகிருட்டிணனும் இருந்ததைச் சான்றுகளுடன் நிறுவியிருந்தார் அவர்.

  தனக்கும் தாக்குதலுக்கும் தொடர்பில்லையென்று காவல்துறை ஆணையர் தப்பிக்கப் பார்த்ததாலேயே, ‘அவர்தான் ஆணை பிறப்பித்தார்’ என்பதை நிறுவ வேண்டிய கட்டாயம் கூடுதல் ஆணையருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ‘நாங்கள் பொறுப்பில்லை’ என ஆளாளுக்கு இப்படித் தப்பிக்கப் பார்த்ததிலிருந்தே, நடந்த தாக்குதலின் ஒழுங்கு தெளிவாகிறது.

  கண்மூடித்தனமான ஒரு தாக்குதலை நடத்தும் முடிவை யாரோ ஓர் அலுவலர்தாம் எடுத்தார் என்றால், அரசுக்குக் கெட்ட பெயரைத் தேடித் தந்த அவர் மீது தி.மு.க., அரசு கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாவா? அதற்கு நேர்மாறாக, கண்டிக்கப்பட்ட அலுவலர்களுக்கு முதல்வர் கருணாநிதி பரிந்து பேசினாரே ஏன்?

  உயர்நீதிமன்ற நிகழ்வு தி.மு.க., ஆட்சிக்கு எதிரான சூழ்ச்சி – என்று கூட ஒரு முறை கலைஞர் பேசியதாக நினைவு. சூழ்ச்சி என்று அவர் குறிப்பிட்டது காவல்துறையினரின் தாக்குதலையா, வழக்கறிஞர்களின் போராட்டத்தையா என்பது நினைவில்லை. இரண்டில் ஒன்றைத்தான் அப்படிக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

  கலைஞர் பெயரால் இராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து வெளிவந்த முதல் அறிக்கை, “பகைமையை மறந்து காவல்துறையினரும் வழக்கறிஞர்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியது. அது, சிக்கலைத் திசை திருப்புகிற வேலையா இல்லையா?

  காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் பகை – என்றெல்லாம் பேசியது எவ்வளவு அடுக்காத பொய்! இனப்படுகொலைக்கு எதிராகப் போராடிய வழக்கறிஞர்களை, மத்திய மாநில அரசுகள் எதிரிகளாகவே கருதின என்பதுதானே உண்மை! அந்தப் பகை ஒன்றைத் தவிர, பிப்பிரவரி 19 தாக்குதலுக்கு வேறெது காரணம்?

  தாக்குதலுக்கு முன்பாக ஆயுதப் படைக் காவல்துறையினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? போராடுபவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்ற அச்சம்தான் அதற்குக் காரணமென்றால், அரசு அஞ்சியதைப் போல வழக்கறிஞர்கள் வன்முறையில் இறங்கினார்களா? வெறுங்கையுடன் இருந்த வழக்கறிஞர்கள், காவல்துறையினரிடம் தாறுமாறாக அடி வாங்கியதைத்தானே தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது!

  வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று உண்மையாகவே அஞ்சியிருந்தால், அஃது அரசின் முட்டாள்தனம்! அப்படியெல்லாம் அஞ்சுவதைப் போல் காட்டிக்கொண்டு ஆயுதப்படையைக் கொண்டு வந்து குவித்திருந்தால், அது அரசு செய்த திட்டமிட்ட சூழ்ச்சி!

  உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்த காவல்நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதை யாராவது சுட்டிக்காட்டினால், அது பொருத்தமற்றது, பொறுப்பற்றது. காவல்நிலையம் எரிக்கப்பட்டது, காவல்துறையின் தாக்குதலுக்கு முன்பா பின்பா என்பவற்றையெல்லாம் சிந்திக்காமல் பேசக்கூடாது!

  இன்று சென்னைக் கடற்கரையில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்குப் பிறகே விவேகானந்தர் இல்லக் காவல் நிலையம் எரிக்கப்பட்டது. அன்றும் இதுதான் நடந்தது. உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் நடத்திய கொடுந் தாக்குதலுக்குப் பிறகே காவல்நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. இஃது எரிக்கப்பட்ட பாணியிலேயேதான் அதுவும் எரிக்கப்பட்டதா – என்கிற கேள்விக்கே நான் வரவில்லை. ‘காவல்நிலையம் எரிக்கப்பட்டதாலா தடியடி நடத்தப்பட்டது’ – என்பதுதான் எனது கேள்வி. இப்பொழுதும் தி.மு.க-வே ஆட்சியில் நீடித்திருந்தால், சென்னைக் கடற்கரைப் போராட்டம் குருதிக்களறியில்தான் முடிந்திருக்கும்! இதில் கேள்விக்கே இடமில்லை. 2009 பிப்பிரவரி 19 வரலாறு தெள்ளத் தெளிவாக இதைத் தெரிவிக்கிறது. இதைக் குறித்த உறுத்தலே இல்லாமல், ‘சென்னைக் கடற்கரைத் தாக்குதலுக்கு நீதி உசாவல் வேண்டும்’ என நீட்டி முழக்கிப் பேசுகிறார் தாலின். ‘உயர்நீதிமன்றத் தாக்குதலிலும், சென்னைக் கடற்கரைத் தாக்குதலிலும் தொடர்புடைய அலுவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்க நமக்கு இருக்கிற தகுதி, தாலினுக்கும் தி.மு.க-வுக்கும் எப்படி இருக்க முடியும்!

  8 ஆண்டுகள் ஆகின்றன, ஈழத்தில் இனப்படுகொலை நடந்து! இன்னும் நீதி கிடைக்கவில்லை. உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் உதிரம் சிந்தியும் 8 ஆண்டுகள் கடந்து விட்டன. அதற்கும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. அவற்றுக்கெல்லாம் நீதி கிடைக்கத் தடையாக இருந்தவர்களே, சென்னைக் கடற்கரை நிகழ்ச்சிக்கு நீதி உசாவல் வேண்டுமென்று கூசாமல் பேசுவதற்குப் பெயர்தான் அரசியல்.

  ‘இதற்கு நீதி வழங்கச் சொல்கிறீர்களே, அதற்கு நீதி கொடுத்துவிட்டீர்களா’ எனவெல்லாம் கேட்காமல் இதழாளர்கள் ‘மொய்’ மறந்து நிற்பதற்குச் சூட்டப்பட்டிருக்கிற கண்ணியப் பெயர்தான் – ‘ஊடக அறம்’.

  ஆளுங்கட்சியாக யார் இருந்தாலும், அவர்கள் கட்டளையிட்டவுடன் மக்களாட்சியின் குரல்வளையை நெரிக்கிறார்களே அவர்களுக்குப் பெயர்தான் – ‘உங்கள் நண்பன்’.

  ஈழத்துக்கான போராட்டம், இடிந்தகரை போராட்டம், சென்னைக் கடற்கரை ஏறுதழுவல் மீட்புப் போராட்டம் என்று எவ்வளவு போராட்டங்களை ‘உங்கள் நண்பர்கள்’ நசுக்கியிருப்பார்கள் எனத் திரும்பிப் பார்க்கிறேன்.

  சென்னைக் கடற்கரையில் கூடிய இளைஞர்களைக் காட்டிலும், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் திரண்ட மீனவ உறவுகளைக் கூடுதலாக மதித்தவன் நான். அந்தப் போராட்டப்பந்தலில் தொங்கிய தூளிகளில் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தன. அந்தக் குழந்தைகளின் தாய்மார்கள் எழுப்பிய முழக்கத்தில், கடலோரப் பகுதிகள் விழித்து எழுந்து கொண்டிருந்தன. எப்படிப் போராட வேண்டுமென்று இந்தியாவுக்கே கற்றுத் தந்த அந்த மக்களை அடித்து உதைத்துப் பாடம் கற்பித்தவர்கள், இதே ‘உங்கள் நண்பர்கள்’!

  உயர்நீதிமன்றத்திலும் இடிந்தகரையிலும் சென்னைக் கடற்கரையிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களின் நோக்கம் ஒரே மாதிரியானது. மூன்றுமே அரசின் இரண்டகத்தைக் கண்டித்துப் போராடிய அறப்போராளிகளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் பாடங்கள். மூன்றுமே திட்டமிட்ட தாக்குதல்கள். மூன்றுமே ஆட்சியாளர்களின் கட்டளையின்றி நடக்கவில்லை. மூன்றிலுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

  தமிழரின் பண்பாட்டை மீட்கச் சென்னைக் கடற்கரையில் திரண்டார்கள் இளைஞர்கள். தங்கள் நீரும் நிலமும் வாழ்வும் பறிபோவதைத் தடுக்க இடிந்தகரையில் கூடினார்கள் எங்கள் மீனவச் சொந்தங்கள். எமது வழக்கறிஞர்களோ, எம் தொப்புள்கொடி உறவுகளின் உயிர்களைக் காக்கப் போராடினார்கள். அதனால்தான் நீதி கேட்கிறேன். ‘தாக்குதலுக்குக் கட்டளையிட்டது கலைஞரா, தாலினா, அலுவலர்களா’ என்று கேள்வி கேட்கிறேன்.

  எந்த அறப்போராட்டத்திலும், சூழ்ச்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை. அதை, வன்முறைப் போராட்டமாகக் காட்டச் ‘சூழ்ச்சி’ செய்கிறவர்கள் ஆளுவோரும் அலுவலர்களும்தாம்! அந்தச் சூழ்ச்சியை நிறைவேற்றுகிறவர்களே, ‘போராடியவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்’ எனக் கூசாமல் பேசுவார்கள். ஏனெனில், அவர்கள், ‘உங்கள் நண்பர்கள்’. இந்த உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல், ‘பழையவற்றையெல்லாம் கிளறாதீர்கள்’ – என என் மீது பாய்கிறார்கள் நண்பர்கள்.

‘வழக்கறிஞர்களை ஓட ஓட விரட்டி அடிப்பது… மண்டைகளை உடைப்பது… குருதிக்காயங்களை ஏற்படுத்துவது… வன்முறையில் ஈடுபட்டதாக அவர்கள் மீதே பழியைத் திருப்புவது… அதன் மூலம், இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை நசுக்குவது’ – என்பது, திட்டவட்டமாகத் திட்டமிட்ட சூழ்ச்சி. மேற்கொண்டு அதில் இன்னொரு சூழ்ச்சியும் இருந்திருக்குமென்று கணிக்கிறேன். அது, தமிழகமெங்கும் இனப்படுகொலைக்கு எதிராகப் போராடியவர்களை, மறைமுகமாக அச்சுறுத்துகிற சூழ்ச்சி.

‘உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களையே காலில் போட்டு மிதிக்கிற இந்த அரசு – எளியவர்களான நம்மை என்ன பாடுபடுத்தும்’ என்கிற அச்சத்தை அனைவர் மனத்திலும் விதைத்து, தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களைக் குழி தோண்டிப் புதைப்பது – என்பது, உயர்நீதிமன்றத் தாக்குதல் சூழ்ச்சியின் அடிப்படை நோக்கமாக இருந்திருக்கலாம். இவ்வளவு கொடூர மனப்பான்மையுடன் அந்தச் சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டியவர் யார்? அஃது எவருடைய மூளையில் தோன்றியது? இதை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்!

  2009இல் முதல்வர் கலைஞர் மருத்துவமனையில் இருந்தபொழுது கடிவாளம் தாலின் கையில் இருந்தது. அன்று போலவே இன்றும், தலைவர் செயல்பட இயலாத நிலையில் கடிவளாம் அவர் கையில்தான் இருக்கிறது. உயர்நீதிமன்றத் தாக்குதல் தொடர்பான ஐயங்களை அகற்றி, தன்னுடைய மக்களாட்சிக் கடமையை நிறைவேற்ற அவர் முன்வர வேண்டும்!

  இன்னும் ஒருபடி மேலே போய், பிப்பிரவரி 19 தாக்குதல் தொடர்பாகத் தாலின் வெளிப்படையான மன்னிப்புக் கேட்டாரென்றால், அவர் மீது புதிய நம்பிக்கை ஏற்படும். ‘தி.மு.க., ஒரு மக்களாட்சி இயக்கம்தான்’ என்கிற தோற்றம் வலுப்படும். இவற்றையெல்லாம் செய்ய தாலின் தயங்க மாட்டார் – என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

படைப்பு:

திரைப்பட இயக்குநர், தமிழ்ப் போராளி

புகழேந்தி தங்கராசு

pugazendhithangaraj@gmail.com

நன்றி: தமிழக அரசியல் இதழ், 22.02.2017

தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்