(தோழர் தியாகு எழுதுகிறார் 246 : கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, ஒரு கேள்விக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது: குடியுரிமைச் சட்டத்தில் குறையில்லை, திருத்தம்தான் மோசமா?

மோதியரசு கொண்டுவந்த திருத்தம் மட்டுமல்ல, அதன் நோக்கமும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளும் மோசமானவை எனபதில் ஐயமில்லை. எனவே நாமும் அந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டோம்.

அதே போது இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் உட்பட எந்தச் சட்டமும் குடியுரிமைச் சிக்கலில் சரியானதோ முழுமையானதோ அன்று என்பது நம் பார்வை. சட்டத் திருத்தம் கூடாது என்ற எதிர்மறை நிலைப்பாடு மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கான தமிழ்க் குடியுரிமை வேண்டும் என்ற நேர்நிறை நிலைப்பாடும் எடுத்தோம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போதே நம் நிலைப்பாட்டை பரப்புரையும் செய்தோம். இந்தியாவில் குடியுரிமை என்ற சிக்கல் குறித்த தெளிவில்லாமல் ‘இலங்கைத் தமிழ் அகதிகள்’ எனப்படும் ஈழத் தமிழர் ஏதிலியரின் உரிமைகள் குறித்துக் கொள்கைவழிப்பட்ட நிலையெடுக்க முடியாது. அது மட்டுமன்று, இந்தியாவில் தமிழர்களுக்கென்று தனிக் குடியுரிமை இல்லாமலிருப்பதன் துயரத்தைக் களையவும் வழிகாட்ட முடியாது.

தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற மும்முனை முழக்கம் தமிழீழத்துக்கானது மட்டுமன்று. அது தமிழ்நாட்டுக்குமானது. தமிழ்நாட்டுக் குடியுரிமைக்காகப் போராடாமல் தாயகத்துக்கான போராட்டம் முழுமை பெறாது. இந்த அடிப்படைப் புரிதலோடு தமிழ்நாட்டுக் குடியுரிமையை இலக்காகக் கொண்டு உத்திசார் கோரிக்கைகள் எழுப்ப வேண்டியிருக்கும். அப்படியொரு கோரிக்கைதான் இந்தியக் குடியுரிமை இருக்கும் போதே தமிழ்க் குடியுரிமையும் வேண்டும் என்ற நமது முழக்கம்.

இதற்கு இப்போதைய குடியுரிமைச் சட்டத்தில் இடமில்லை என்பதால் அந்தச் சட்டத்தை உரியவாறு திருத்தக் கோருவோம். அரசமைப்புச் சட்டத்திலேயே இடமில்லை என்றால் அரசமைப்புச் சட்டத்தையே திருத்தக் கோருவோம்.

தமிழ்க் குடியுரிமைக் கோரிக்கை பற்றிய புரிதலை தாழி அன்பர்கள் ஆழபப்டுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல மடல்கள் எழுத எண்ணியுள்ளேன். முதலில் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தையொட்டி நான் எழுதித் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் வெளியிட்டுப் பரப்பிய ஓர் அறிக்கையைப் பகிர்கிறேன் –


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

வேண்டும் தமிழ்க் குடியுரிமை!

இந்திய அரசமைப்பின் முகப்புரை “இந்திய மக்கள் ஆகிய நாம்” (We, the people of India) என்று தொடங்குகிறது. இந்திய மக்களா? இந்தியாவின் மக்களினங்களா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இறையாண்மை அல்லது அரசுரிமை மக்களைச் சாரும் என்பதில் ஐயமில்லை.

இந்திய மக்களாகிய நாம் இந்தியாவைக் குடியரசாக அமைத்துக் கொள்கிறோம். எத்தகைய குடியரசு? இறைமையுள்ள, குமுகிய, உலகிய [சமயச் சார்பற்ற], குடியாட்சியக் குடியரசு! (SOVEREIGN SOCILIST SECULAR DEMOCRATIC REPUBLIC!) அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் இறைமையுள்ள குடியாட்சியக் குடியரசு என்று மட்டும் இருந்தது. நெருக்கடிநிலைக் காலத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் வாயிலாக குமுகியமும் (சோசலிசம்) உலகியமும் [சமயச் சார்பின்மையும்] சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் உறுப்பு சொல்வதாவது:

  1. 1) பாரதம் என்கிற இந்தியா அரச மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும். (India, that is Bharath, shall be a Union of States).

States என்பதை மாநிலங்கள் என்று தமிழில் சொல்லலாம், அரசுகள் என்றும் சொல்லலாம். இரு தன்மைகளும் உண்டு என்பதை உணர்த்தவே அரச மாநிலங்கள் என்கிறோம். ஆட்சிப்புலம், குடிகள், ஆட்சி மூன்றும் இருந்தால்தான் அரசு. குமுக அறிவியலில் நாடுகள் என்று இவற்றைக் குறிக்கக் காணலாம். அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America) யாவருமறிந்த எடுத்துக்காட்டு.

மாநிலம் என்ற சொல்லும் கூட குறுநிலம் என்பதற்கு மாறாக ஆளப்படும் போது இறைமையைக் குறிக்கும். குறுநிலம் என்பது பேரரசுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசு. அது இறைமையற்றது. மாநிலம் என்பது தற்சார்பானது, தன்னாட்சி கொண்டது. அது இறைமையுடையது. கூட்டாட்சி அமைப்பில் அந்த இறைமையில் ஒரு பகுதியை அது கூட்டரசுக்கு விட்டுக் கொடுக்கலாம்.

Separate State என்பதைத் தனியரசு அல்லது தனிநாடு என்று சொல்வதே இயல்பு. Stateless என்பதை நாடற்ற என்றுதான் மொழிபெயர்க்கிறோம். Stateless people என்றால் நாடற்ற மக்கள்.

State என்பது வெறும் province அன்று. மாகாணம் என்பது ஒரு ஆட்சியலகுதானே தவிர வேறன்று. அது விரிவடைந்த மாவட்டம் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. 1935ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம் மாகாணங்களையே தோற்றுவித்தது. 1950ஆம் ஆண்டின் இந்திய அரசமைப்புதான் அரசமாநிலங்களைத் தோற்றுவித்தது.

State என்பது மாநிலத்தைக் குறிக்க மட்டுமல்லாமல் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து இந்திய அரசைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. The state of Tamilnadu என்பது தமிழ்நாடு மாநிலம், ஆனால் Indian State என்பது இந்திய அரசு. நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளில் மாநில அரசானாலும் நடுவணரசானாலும் இரண்டுமே State எனப்படும்.

ஆக, State என்பதை மாநிலம் என்றாலும் சரி, அரசு என்றாலும் சரி, நாடு என்றாலும் சரி, அது இறைமையுடையது. இந்திய அரசமைப்பில் ஒன்றியம், மாநிலம் என்று இரு அரசுகள் உள்ளன. இரண்டும் இறைமை கொண்டவை. ஒவ்வொன்றும் சிலவகையில் தனிமுழு இறைமை (exclusive sovereignty) கொண்டவை, வேறு சிலவகையில் இறைமையைப் பகிர்ந்து கொள்ளக் கூடியவை (Sovereignty shared between the Union and the states). அண்ணல் அம்பேத்துகர் இதனைத் தெளிவாக்கியுள்ளார். மாநில அதிகாரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளில் மாநிலங்கள் இறைமை கொண்டவை என்று அவர் விளக்கமளித்தார்.

ஒன்றிய அதிகாரப் பட்டியலில் 17ஆவது இனம் இப்படிச் சொல்கிறது:
17) குடியுரிமை, குடிமையளிப்பு, அயலார் (Citizenship, naturalization and aliens).

ஆகக், குடியுரிமை என்பது நடுவணரசு எனப்படும் ஒன்றிய அரசின் தனிமுழு அதிகாரமாகி விடுகிறது. இது மாநிலத்தின் இறைமையை மீறுவதாகும். ஒன்றியத்துக்கும் மாநிலத்துக்குமான இறைமைப் பகிர்வு என்ற கொள்கைக்கு முரணாகும்.

அரசு என்றிருந்தால் குடிமக்கள் இருந்தாக வேண்டும். குடிமக்கள் என்றிருந்தால் அரசு இருந்தாக வேண்டும். ஆகவே குடியுரிமை இல்லாத அரசு அரசே ஆகாது. ஒன்றியம் போலவே மாநிலமும் அரசுதான் என்றால் அதற்கும் குடியுரிமை இருக்க வேண்டும். மாநிலம் என்றாலும் அரசு என்றாலும் நாடு என்றாலும் குடியுரிமை இன்றியமையாத ஒன்று.

இந்திய அரசின் கூட்டாட்சித் தன்மை இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒரு கூறு என்று இந்திய உச்ச நீதிமன்றம் கேசவானந்த பாரதி (1973) வழக்கில் கூறியதாக சட்டவாளர்கள் எடுத்துக்காட்டுவதுண்டு. இது உண்மையானால் குடியுரிமையில் ஒரு பகுதியாவது மாநில அதிகாரமாக இருக்க வேண்டும். ஒற்றையாட்சி அமைப்பில்தான் அது நடுவணரசின் தனிமுழு அதிகாரமாக இருக்க முடியும். ஆனால் இந்தியாவை ஒற்றையாட்சி இலங்கையோடு ஒப்புநோக்கினால் இந்த வகையில் இரண்டும் ஒன்றாகவே இருக்கக் காணலாம். ஒருவர் நாடற்றவர் என்றால் எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாதவர் என்று பொருள். குடியுரிமை இல்லாதவர் என்றால் நாடற்றவர் என்று பொருள். இது தமிழ்நாடு என்றால் தமிழ்நாட்டுக் குடிமக்கள் இருந்தாக வேண்டும். தமிழ்நாட்டுக் குடிமக்களாக இருக்கும் போதே அவர்கள் இந்தியக் குடிமக்களாகவும் இருக்கலாம். இறைமையைப் பகிர்ந்து கொள்ளும் கொள்கைப்படிக் குடியுரிமையையும் பகிர்ந்து கொள்ளலாம்.

அரசமைப்புச் சட்டத்தின் பதினோராம் உறுப்பைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் இயற்றிய சட்டம்தான் இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 என்பது. இந்தச் சட்டமும் சட்டப் புறம்பான குடியேறிகள் (illegal immigrants) பற்றிப் பேசுகிறதே தவிர ஏதிலியர் (அல்லது அகதிகள்) குறித்து எதுவும் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்த வரை இந்தியாவில் ஏதிலியர் பற்றிப் பேசும் சட்டமே இல்லை. (இருந்தால் யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம்.)

1959ஆம் ஆண்டு முதல் திபெத்திலிருந்து ஏதிலியர் அடுக்கடுக்காக வந்து குவிந்துள்ளனர், 1962ஆம் ஆண்டு பருமாவிலிருந்து இராணுவ ஆட்சியாளர்களால் வெளியேற்றப்பட்ட தமிழ் ஏதிலியருக்காகத்தான் சென்னையில் பருமா கடைத்தெரு அமைக்கப்பட்டது. 1971இல் வங்கதேச இனவழிப்பின் போது சற்றொப்ப ஒரு கோடிப் பேர் இந்தியாவுக்கு ஏதிலியராக வந்து, விடுதலைக்குப் பின் நாடு திரும்பினார்கள். வங்கதேசத்திலிருந்து வெளியேறிய பீகாரி முசுலிம்கள் போன்ற ஏதிலியர் நாடுதிரும்ப வழியில்லாமல் பாகித்தானுக்கே போய் விட்டார்கள். இன்னும் உகாண்டாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் உள்ளனர். நேபாள ஏதிலியரும் பூட்டான் ஏதிலியரும் கூட உண்டு.

1991ஆம் ஆண்டு கருநாடகத்தில் காவிரிச் சிக்கலை ஒட்டி நடைபெற்ற வன்தாக்குதலால் ஏராளமான தமிழர்கள் ஏதிலியராகத் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். சத்திசுகரிலிருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடிகள், அசாமில் இனமோதலால் புலம் பெயர்ந்தவர்கள் என்று இந்தியாவின் உள்நாட்டு அகதிகள் ஏராளம்.

[அண்மையில் மணிப்பூருக்குள்ளேயும் மணிப்பூரிலிருந்து வெளியேயும் ஏதிலியராக வெளியேற்றப்பட்டுள்ள, இன்றளவும் வெளியேற்றப்பட்டு வரும் மக்களையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.]

இந்தியாவில் ஏதிலியர் தொகை இலட்சக்கணக்கில் இருப்பினும், இவர்களில் சிலரை இந்திய அரசு முறையான ஏதிலியராக ஏற்றுக் கொண்டிருப்பினும், ஏதிலியருக்கென்று தனிச் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை.

1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் முன்பே பல முறை –1986, 1992, 2003, 2005 2015 ஆண்டுகளில் – திருத்தப்பட்டுள்ளது என்றாலும், இம்முறைதான் இவ்வளவு எதிர்ப்புக்கு இலக்காகியுள்ளது. திசம்பர் 12ஆம் நாள் நாடாளுமன்றத்தில் இறுதியாக இயற்றப்பட்ட திருத்தச் சட்டம் ஆறு பிரிவுகளைக் கொண்டிருந்தாலும். மத அடிப்படையில் பாகுபாடு காட்டும் விதிமுறைதான் பூசலுக்குக் காரணமாகியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாக்கித்தான், வங்கதேசம், ஆஃப்கானித்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியுரிமைக்குத் தகுதிபெறக் குறைந்தது 11 ஆண்டுக் காலம் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் என்ற பழைய கட்டுத்திட்டம் தளர்த்தப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டம் செயலுக்கு வந்த பின் 6 ஆண்டுக் காலம் வசித்திருந்தாலே போதும். ஆனால் இந்தச் சலுகை இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும், பௌத்தர்களுக்கும், சைனர்களுக்கும், பார்சிகளுக்கும், கிறித்தவர்களுக்கும் மட்டும்தானே தவிர முசுலீம்களுக்குப் பொருந்தாது.

மதத்தை வைத்துப் பாகுபாடு காட்டும் இத்தகைய சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் சமயச் சார்பின்மைக் கொள்கைக்கு முரணானது என்பதும், மக்களை மத அடிப்படையில் கூறுபோடும் இந்துத்துவ அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதும் எதிர்ப்புக்கு முதற்காரணம். நேபாளமும் பூட்டானும் சிறிலங்காவும் அண்டை நாடுகளாய் இருப்பினும் அவை இந்தச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பது இரண்டாம் காரணம்.

குறிப்பாக இலங்கைத் தீவிலிருந்து உயிர்தப்பி இந்தியா வந்துள்ள தமிழ் ஏதிலியர் சற்றொப்ப நாற்பது ஆண்டுகளாக நாடற்றவர்களாக அல்லலுற்றுக் கிடக்கின்றனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்களுக்கு இடைக்காலக் குடியுரிமை கூட வழங்கப்படவில்லை, இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த ஏதிலியர் குழந்தைகளும் அதே அவலநிலையில்தான் உள்ளனர். குடியுரிமை இருக்கட்டும், அவர்கள் ஏதிலியராகக் கூட அறிந்தேற்கப்படவில்லை. உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தேறிய அயலார் என்பதே அவர்களின் சட்டநிலை.

ஏதிலியர் தொடர்பான 1951 செனிவா ஒப்பந்தம், 1967 வகைமுறை உடன்படிக்கை ஆகியவற்றில் இந்தியா ஒப்பமிடவில்லை என்பதால் பன்னாட்டுச் சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று இந்திய அரசு -– முன்பு காங்கிரசு, இப்போது பாசக – அழிச்சாட்டியம் செய்கிறது. ஆனால் 1948 உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் இந்தியா ஒப்பமிட்டிருப்பது மறந்து போவதே இவர்களுக்கு வசதியாக உள்ளது. இந்திய உயர்நிலை நீதிமன்றங்கள் இந்தச் சாற்றுரைக்குச் சட்ட மதிப்புக் கொடுக்கின்றன. இந்தச் சாற்றுரையின் உறுப்பு 14 தஞ்சம் கோரவும் பெறவும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்துகிறது. இந்தச் சாற்றுரையின் அடிப்படையில் ஏதிலியர் நிலை குறித்துச் சட்டம் இயற்றும்படி உச்ச நீதிமன்றமும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய அரசு ஏதிலியர் உரிமை தொடர்பான பன்னாட்டுச் சட்டங்களையும் மதிப்பதில்லை, உள்நாட்டிலும் சட்டம் இயற்றுவதில்லை என்று ‘உறுதி’யாகவுள்ளது. ஏதிலியர் சிக்கலைப் புவிசார் அரசியல் நலன், உள்நாட்டு அரசியல் நலன் என்ற கோணத்திலிருந்தே அணுகுவதுதான் தொடக்கத்திலிருந்தே இந்திய அரசின் நடைமுறையாக உள்ளது. மோதி-அமித்சா கையில் இந்த நடைமுறை படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் குடியாட்சிய ஆற்றல்கள் தற்காப்பு நிலை எடுத்து, புதிய சட்டத்தைத் திரும்பப் பெற்றால் போதும் என்ற நிலைக்கு வந்து விடக் கூடாது. எதிர்மறைக் கோரிக்கையோடு நின்று கொள்ளாமல், நேர்நிறையாக மாநிலங்களுக்குக் குடியுரிமை அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப வேண்டும்.

அரசு, மாநிலம் அல்லது நாடு என்பது உண்மையானால், இந்தியக் குடியுரிமையோடு மாநிலக் குடியுரிமையும் கோருவோம் காட்டாக, இந்தியாவும் தமிழ்நாடும் இரு நாடுகளாக இயங்கி இரட்டைக் குடியுரிமை வழங்கட்டும். இந்தியக் குடியுரிமை, தமிழகக் குடியுரிமை இரண்டும் இருக்கட்டும். இந்தியா இதற்கு இணங்காது என்றால் இரட்டைக் குடியுரிமைக்கு இடமே இல்லை, ஒற்றைக் குடியுரிமைக்குத்தான் வாய்ப்புண்டு என்றால் அது ஏன் அந்தந்தத் தேசிய இனக் குடியுரிமையாகவே இருக்கக் கூடாது? என்ற எண்ணம் எழத்தான் செய்யும். இந்தியக் கட்டமைப்பு உள்ள வரை தமிழ்க் குடியுரிமையோடு இந்தியக் குடியுரிமையும் இருக்கட்டும். ஆனால் தமிழ்நாட்டுக் குடியுரிமை இல்லாத இந்தியக் குடியுரிமை அடிமைத்தனமே! அதனால் குடியாட்சிய நோக்கங்களை அடைய முடியாது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது என்ற எதிர்மறைக் கோரிக்கையிலிருந்து நாம் வந்தடையும் நேர்நிறைக் கோரிக்கை:
வேண்டும் தமிழ்க் குடியுரிமை!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 275