(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (5) -தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!


பெரியகுளம் போராட்டக் களம்

பெரியகுளத்தில் மகாலட்சுமி – மாரிமுத்து ஆணவப் படுகொலைக்கு நீதிகேட்டு – குறிப்பாக இந்த உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை அட்டவணைச் சாதிகள் அட்டவணைப் பழங்குடிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதியக் கோரி – ஆகட்டு திங்கள் 5ஆம் நாள் தொடங்கிய போராட்டம் இன்று வரை உறுதியாகத் தொடர்கிறது.

இந்த இடைக்காலத்தில் நடந்துள்ள சில நிகழ்ச்சிகளை உடனுக்குடன் தாழி அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. தாழி மடல் எழுதியனுப்புவதில் ஏற்பட்ட காலத்த்காழ்வே காரணம். ஆனால் தாழிக்கு வெளியே தொடர்ந்து தகவல்கள் அனுப்பி வருகின்றோம்.

எப்படியும், இடைக்காலத்தில் நிகழ்ந்தவற்றைத் தாழியில் பதிவு செய்வது தேவை எனக் கருதுகிறேன். போராட்டத்தின் ஒரு பகுதியாக பெரியகுளத்தில் மகாலட்சுமி-மாரிமுத்து வாழ்ந்து வந்த பகுதி மக்கள் ஆகட்டு 13ஆம் நாள் கறுப்புக் கோடி ஏற்றினார்கள். அதையொட்டி தோழர் மதியவன் இரும்பொறையும் மற்ற தோழர்களும் தளைப்படுத்தப்பட்டார்கள். உடனே காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் (JAACT) மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் வெளியிட்ட அறிக்கை இதோ –
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

  • பெரியகுளத்தில் சாதி ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடிக் கைது செய்யப்பட்ட தோழர் மதியவன் இரும்பொறை உள்ளிட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்!
  • சாதி ஆணவக் குற்றவாளிகளுக்கு எதிராக ப.சா.,ப.ப. (எசுசி எசுடி) வன்கொடுமை வழக்குப் போடு!

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை!

சென்ற 2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் மாரிமுத்து – மகாலட்சுமி இருவரும் தூக்கில் தொங்கும் சடலங்களாகக் கண்டெடுக்கபட்டனர்.

இது ஒரு சாதி ஆணவக் கொலை என்று மாரிமுத்துவின் பெற்றோரும் ஊராரும் சந்தேகப்படுகிறார்கள். மகாலட்சுமியின் உடல் அவசரமாக எரிக்கப்பட்டு விட்டது. ஆனால் மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்து அவரது தாய்தந்தையரும், குடும்பத்தினரும், தோழர் மதியவன் தலைமையிலான போராட்டக் குழுவினரும் போராடி வருகின்றனர். மாரிமுத்துவின் சடலமும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது.

மாரிமுத்து பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு எதிராகக் குற்றம் புரிந்தவர்கள் பட்டியல் சாதியைச் சேராதவர்கள் என்பதாலும் சட்டப்படி இந்த வழக்கைப் பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். மாரிமுத்துவின் தாயார் மாலையம்மாள் கொடுத்த முறைப்பாட்டை இவ்விடம் எசுசிஎசுடி வன்கொடுமைச் சட்டத்தில் பதிய மறுத்து தேனி மாவட்டம் பெரியகுளம் காவல்துறையினர் போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டுள்ளனர்.

ஒரு வாரத்துக்கு மேலாகியும் நீதி கிடைக்காத நிலையில் ஊர்மக்கள் தங்கள் இல்லங்களில் கறுப்புக் கொடி ஏற்றியதைக் காட்டி இன்று காலை தோழர் மதியவன் இரும்பொறையும் போராட்டக் குழுவில் உள்ள 13 தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைக் காக்கவும் பொதுமக்களை அச்சுறுத்தவும் காவல்துறை இந்த அடக்குமுறையைக் கைக்கொண்டிருப்பதாக நம்புகிறோம்.

கைது செய்யப்பட்ட மதியவன் இரும்பொறை உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்யுமாறும் –

மாரிமுத்து – மகாலாட்சுமி ஆணவக்கொலை தொடர்பாகப் பட்டியலின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்து கூண்டிலேற்றுமாறும் –

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 தியாகு, தமிழக ஒருங்கிணைப்பாளர், சென்னை 13 – 08 -2023
 காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (தமிழ்நாடு
புதுவை)
குறிப்பு: தளைப்படுத்தப்பட்ட தோழர்கள் 13/08 இரவு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 289