(தோழர் தியாகு எழுதுகிறார் 86 தொடர்ச்சி)

பெரியாரும் திருக்குறளும் 2/2

அன்பர் வாலாசா வல்லவன் எழுதுகிறார்

ஆனால், குறளில் அப்படிப்பட்ட அதிசயம் ஒன்றையுங் கூறாவிட்டாலும் திருவள்ளுவரைத் தெய்வீகப் பிறவியாக ஆக்கா விட்டாலும் – அவருடைய பிறப்புப் பற்றி இழித்துக் கூறிவிட்டார்கள். 

வள்ளுவரின் தாயை ஒரு விபச்சாரியாகக் கற்பனை செய்து விட்டான். வள்ளுவர் பிறப்பைப் பற்றி எழுதும் போது பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் வள்ளுவர் பிறந்தார் என்று எழுதுகிறான். இதில் புத்திசாலித்தனம் என்னவென்றால் – குறளைப் போன்ற நீதி நெறிகளை, மக்களின் உயர் ஒழுக்கத்திற்கு வேண்டிய பண்புகளைப் போதிக்கத்தக்க தகுதியும் அறிவும் வள்ளுவருக்கு வந்ததற்குக் காரணமே, அவர் பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் ஆகும் என்ற கருத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்கள். இந்தப்படி பறைச்சியுடன் பார்ப்பான் கூடினான் என்பது, பார்ப்பனர்களுக்கு தருமப்படி எவ்வளவு கேவலம் என்பதை மறந்து விட்டார்கள். அக்காலத்தில் அறிவாளிப் பார்ப்பான் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்திருக்கிறான் என்பதைக் காட்டுகிறது. இந்தப்படியாக முதலில் எடுத்தவுடனேயே குறளையும், அதன் ஆசிரியரையும் இழிவு படுத்தி விட்டார்கள். 

நாட்டில் புராணங்களைப் பற்றியும், இராமன்-சீதை தொடர்பு பற்றியும், கந்தன் வள்ளி காதல் (இ)லீலைகள் பற்றியும், கிருட்டிணனின் பிள்ளை விளையாட்டு, கோபிகள் லீலைகள் பற்றியும் எல்லோருக்கும் – பாமரர்கள், பாட்டாளிகள், படிக்காதவர்கள், கூலிகள் முதற் கொண்டு பெரிய, பெரிய சீமான்கள் வரை தெரியும்; தெரிந்திருப்பார்கள். ஆனால், குறள் பற்றிப் பெரிய பணக்காரர்களுக்கும் தெரியாது; தெரிய வாய்ப்பும் இல்லை. இந்தப்படியாகக் குறளை எந்தெந்த வழியாக மங்கும்படி செய்ய முடியுமோ – மக்கள் மனத்தில் குறளின் கருத்துக்கள் புக முடியாது செய்ய முடியுமோ அவ்வளவுக்கு ஆரியர்கள் செய்து விட்டார்கள்.

நான், ஆரியக் கருத்துக்களெல்லாம் – அதன் தத்துவங்கள், கொள்கைகள் ஆகியவையெல்லாம் ஒரு கூட்டத்தின் உயர்வுக்கும், வேறொரு கூட்டம் வேதனைப் படவுமான முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி – அவற்றை, ஆரியக் கருத்துகளை அவற்றுக்கு ஆதாரமாய் இருக்கின்ற மதம், கடவுள் தன்மை, புராணங்கள் போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்றும் பரப்புரை புரிந்து வருவதால் எனக்கு வள்ளுவர் உள்ளமும், அவர் நூலின் உண்மைக் கருத்தும் தெளிவாகத் தெரிகின்றது.  ஆகவேதான், நாம் வள்ளுவரை, அவர் இயற்றிய திருக்குறளைப் போற்றுகிறோம். 

வள்ளுவர் யார், எந்தக் குலத்தைச் சோந்தவர் என்று நிச்சயமாய்க் கூற முடியாது. வள்ளுவர் ஆரியத்தை எதிர்ப்பவர்; ஆரியக் கருத்துகளைக் கண்டிப்பவர் ; அவற்றை வெறுப்பவர் என்றுதான் நமக்குத் தெரிகிறது. அத்தோடு, வள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவராகத் தெரியவில்லை. சாதாரணமாகச் சைவ, வைணவ, சமணர்கள் விவாதங்களில் – சமணர்கள்தான் வெல்லுவார்கள். பெரிய புராணம் எழுந்ததே சமணர்களை ஒழிப்பதற்காகத்தான். ஆரியக் கருத்துகளை சமணர்கள் ஏற்கவில்லை என்பதற்காக அவர்கள் வெறுக்கப்பட்டார்கள். அதன் விளைவாகப் பலப் பல தொல்லைகளுக்கு ஆளாக்கப் பட்டார்கள் சமணர்கள். இன்றுங்கூட மதுரையில் 8000 சமணர்களைக் கழுவேற்றின திருவிழா கொண்டாடப் படுகிறது. 

அவ்வளவு தூரம் ஆரியக் கருத்துகளை எதிர்த்து, அதற்காக இன்னல்கள் பல பட்டிருக்கும் சமணர்களும் – திருக்குறளை ஆகரிக்கிறார்கள். சைவ சமயத்தவரும், வைணவ மதத்தாருங்கூட திருக்குறளை மாபெரும் நூல் என்று ஒத்துக் கொள்ளுகின்றனர். இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்களும், கிறித்துவ மதத்தின் கீழிருப்பவர்களும் திருக்குறளைப் போற்றுகிறார்கள். இந்தப்படி எல்லாரும் போற்றுவதால்தான் திருக்குறள் ஒரு மதத்தைத் தழுவியோ, ஒரு மதத்தின் உயர்வுக்காகவோ எழுதப்பட்ட நூல் என்றில்லாமல், மக்களின் வாழ்க்கைக்கு, மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலே கையாள வேண்டிய வழிவகைகள் பற்றி எழுதப்பட்ட நூல் என்று ஆகிறது. குறளாசிரியர் காலத்தில் – இந்து மதம் என்பது இல்லை. இந்து மதம் என்று இருந்திருந்தால் திருக்குறளில் ஒரு இடத்திலாவது ‘இந்து என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், 1330 பாட்டுக்களிலும் ஒரு இடத்திலாவது ‘இந்து’ என்ற சொல் காணப்படவே இல்லை. 

அது மட்டுமல்ல, குறளாசிரியர் கடவுளையும், மோட்ச நரகத்தையும் ஒத்துக் கொள்ளவில்லை . குறளில் நீங்கள் அறம், பொருள், இன்பம் என்ற அளவில்தான் காண முடியுமே தவிர-‘ வீடு’ – மோட்சம்’ பற்றி அவர் கூறியிருப்பதாக இல்லை . அறம், பொருள், இன்பம் என்றுதான் முப்பிரிவுகளைக் கூறுகிறார், மோட்ச சாம்ராஜ்யத்தை விட்டு விட்டு. 

திருவள்ளுவர் கடவுளைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று கூறினேன். திருக்குறளின் முதல் அத்தியாயத்தில்,  கடவுள் வாழ்த்து என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக் கொள்கைகள் இடம் பெறவில்லை. மேலும், இந்து மதக் கடவுள்களைப் பற்றிய புகழாரம் அந்தப் பத்துப் பாட்டுக்களிலும் கிடையாது.

சிலர் கூறுகிறார்கள், ‘ குறளில் முதல் அத்தியாயத்தில் இருக்கும் கடவுள் வாழ்த்துப் பாக்கள் இடைச் செருகல்’ என்று ; சிலர், ‘ அப்படியெல்லாம் இல்லை; வள்ளுவர் பாடியது தான்’ என்று கூறுகிறார்கள். நம்மைப் பொறுத்த வரையில் கடவுள் வாழ்த்துப் பாக்களை வள்ளுவரே பாடினதாக வைத்துக் கொண்டாலும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற கடவுள்களைப் போன்ற கடவுள்களுக்கா வள்ளுவர் வாழ்த்துக் கூறினார்? இல்லை. கடவுள் வாழ்த்துக் கூறப்படும் பத்துப் பாட்டிலும், ஒரு பாட்டிலாவது வள்ளுவர் கடவுள் என்ற சொல்லைக் கையாளவில்லை. திராவிட மக்களுக்கு ‘எல்லாம் வல்ல,’ ‘ எங்கும் நிறைந்த’ என்பதாகக் கடவுளைக் குறிக்க ‘கடவுள்’ என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லையே வள்ளுவர் தமது குறளில் கையாளவில்லை! கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் கையாளவில்லை என்பதோடு மாத்திரமல்ல. குறள் முழுவதிலுமே- 1330 பாடல்களிலுமே ஒரு இடத்திலாவது வள்ளுவர் ‘கடவுள்’ என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை. தமிழ் மொழியில் உள்ள நல்ல சொற்களையெல்லாம் – உயர்ந்த சொற்களையெல்லாம் தமது நூலில் பயன்படுத்திய வள்ளுவர், ‘ கடவுள் ‘ என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவில்லை.

இரண்டாவது, ‘கடவுள் வாழ்த்து’ என்பதே கேலிக்குரியது; மிகவும் தவறான சங்கதியாகும். ‘சருவ வல்லமை’யும் படைத்த- நம்மையெல்லாம் காக்கும் கடவுளுக்கு ‘கடவுள் வாழ்த்து’ என்று நாம் போய் வாழ்த்துக் கூறுவதா? வள்ளுவரை நாம் மாபெரும் அறிவாளி, ஆராய்ச்சிக்காரர் என்று கூறுகிறோம். அதற்குத் தக்க ஆதாரங்களும் இருக்கின்றன. அவர் போய் இந்தப்படி ‘கடவுள்’ என்று நாம் கருதுவதற்கு வாழ்த்துப் பாடல் வாசிப்பாரா? 

வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு நற்குணங்களை வைத்து, அந்தப்படியாக நடக்க வேண்டும் என்பதற்காகவே பத்துப் பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறினார். சருவ வல்லமையுடைய சருவேசுவரனைப் பற்றிப் பாடுவதென்றால் இரண்டு, மூன்று பாட்டுகளோடு குறளை நிறுத்தியிருப்பார். அதை விட்டு அவ்வளவு பாட்டுகள் – அவைள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நற்குணத்தைப் போதிக்கிறார் என்றால் என்ன பொருள்? மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் – வாழ்வின் வகையை, நிலையை உணர்த்துவதற்காகத்தான் எட்டு, ஒன்பது கருத்துகளை வைத்து வள்ளுவர் கடவுள் வாழ்த்துக் கூறியிருக்கிறார். [ விடுதலை 30-5-1950)

(தொடரும்)

தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 52