4

நான் சாப்பிடும் உணவில் நச்சு மாத்திரை கலக்கப்பட்டது!

– நளினியின் சிறைச் சித்திரவதைகள்!

‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் இராசீவு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி எழுதியிருக்கும் நூலின் நான்காவது பகுதி இது.

  நான் சொன்னதை மிக அமைதியாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. தேவை என்றால் மட்டுமே கேள்வி கேட்டார்.

  அப்பொழுதுதான் எனக்கொரு மன உறுத்தல் ஏற்பட்டது. என்னைப்பற்றியும் என் கணவரைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேனே, என் கணவருடன் தூக்கு மர நிழலில் இருக்கும் மற்ற இருவரைப் பற்றியும் பேச வேண்டும்; அவர்களும் குற்றமற்றவர்கள் என்பதை இந்த வாய்ப்பில் கூறிவிட வேண்டும் என்று அவர்களைப் பற்றியும் பேசலானேன்.

  அதை அவர் விரும்பவில்லை. அவர்களும் குற்றமற்றவர்கள்தாம் என்று சொல்ல வந்தேன். ஒரு நாட்டின் மிகப் பெரிய தலைவர், முன்னாள் தலைமையமைச்சரின் கொலை வழக்கு, இவ்வளவு மட்டமாகவா உசாவப்பட்டது (விசாரணை) செய்யப்பட்டது என்ற ஆற்றாமையின் வெளிப்பாடாகவும் அவரது சினம் இருந்திருக்கலாம்.

  எங்கள் சந்திப்பு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நீண்டது. 50 நிமையங்கள்(நிமிடங்கள்) வரை நான் சொன்ன விளக்கங்களையெல்லாம் உள்வாங்கிக் கொண்டே சிறு சிறு கேள்விகளை எழுப்பியபடியிருந்தார்.

  நான் பேசி அவர் கேட்க வேண்டும் என்ற தேவையே இல்லை. அவருக்கு வேண்டிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் பார்க்காமல் என்னிடம் வந்தார்.

  என்னை விருப்பப்படி பேசவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். தேவையான இடங்களில் மட்டுமே குறுக்கிட்டு விடை பெற்றார். மற்றபடி என்னை முற்றாகப் புறக்கணித்து விடவில்லை என்பதே அவரின் மேலான குணத்தைக் காட்டியது.

  எல்லாமும் பேசி முடித்து அவர் கிளம்பியபொழுது, “அம்மணி, நீங்கள் நல்லபடியாக வீடு போய்ச் சேர்ந்தீர்கள் என்ற செய்தி எனக்கு வரும் வரை நான் சாப்பிடாமல்தான் இருப்பேன். நல்லபடியாகச் சென்றடைந்தீர்கள் என்ற தகவல் வந்த பிறகே சாப்பிடுவேன். அதனால், நீங்கள் நல்லபடியாகச் சென்றடைந்தேன் என்ற தகவலை எனக்குக் கிடைக்க வழி செய்தால் எனக்கு நிறைவு” என்று நான் கூறியபொழுது அவரும் அமைதியான முகத்தோடு, “ஒன்றும் இடர்ப்பாடு இல்லை. அப்படியே செய்கிறேன்” என்று கூறிவிட்டுக் கிளம்பிப் போனார்.

  நான் இப்படிக் கேட்டதற்கு எனது 17 ஆண்டுக் கால வலியே காரணம். போகிறபொழுது தற்செயலாக ஏதாவது அவருக்கு நடந்தாலும் அந்தப் பழி என்னை வந்து சேர்ந்து விடும் என்ற அச்சம் என்னைக் கௌவிக் கொண்டிருந்தது. அப்படி மீண்டும் ஒரு பழி வருவதைத் தாங்கும் தெம்பு துளி அளவும் இல்லை. ஏற்கெனவே நடைப்பிணமாக உள்ளோம். இனி என்ன இருக்கிறது?

  சொன்னபடியே அடுத்த நாள் நண்பகல் நான் உணவை மறுத்து இருந்தேன். அந்தத் தகவல் சிறை அலுவலருக்குப் போனது. அவர் தில்லி வரை தொடர்பு கொண்டு உசாவி, அம்மணி நல்லபடியாக வீடு போய்ச் சேர்ந்திருக்கிறார் என்ற தகவலை மாலையில் கூறி அனுப்பினார். அதன் பிறகுதான் நான் இரண்டாவது நாளன்று இரவு உணவைச் சாப்பிட்டேன்.

  இந்தச் சந்திப்பைப் பற்றி நான் வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. வழக்குரைஞரையும் அம்மாவையும் வரவழைத்து அவர்களிடம் மட்டும் சொல்லி வைத்தேன். அவர்களும் அதை வேறு யாரிடமும் கூறவில்லை. கமுக்கமாகவே வைத்திருந்தார்கள்.

  பிரியங்கா அவர்கள் சந்தித்துச் சென்ற பிறகு 11 நாட்கள் கழித்துத்தான் என் கணவர் என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இதைச் சொன்னேன். ஒரு மாதம் கழித்து வேறு வழக்கறிஞர் ஒருவர் மூலம் அந்தத் தகவல் பரப்பப்பட்டது. அதன் பிறகு எங்கள் சந்திப்பின் நன்மை-தீமைகள்பற்றி ஊடகங்கள் வகைவகையாக எழுதித் தள்ளின.

  நாங்கள் வெளியிடாத ஒரு செய்தி வேறு யாரால் தெரியத் தொடங்கியது? அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்றும் தெரியத் தொடங்கியது.

  பிரியங்கா அவர்கள் என்னைச் சந்தித்தது வேறு வேறு நிகழ்வுகளையெல்லாம் முடிச்சுப் போட்டுப் பேச வைத்து விட்டது.

  அதில் முதலாவது, அவர் என்னைச் சந்தித்த பிறகுதான், ‘நான் எதையோ சொல்லிவிட்ட பிறகுதான்’ இலங்கையில் இன அழிப்புப் (இனப்படுகொலைப்) போர் தீவிரமடைந்து கொடுமையாக முடிந்தது என்று நச்சுத்தனமான பரப்புரையை இங்கே சிலர் செய்தார்கள்.

  இந்த உண்மை தெரியாத சிலரும் வலியின் காரணமாக என்னைத் தவறாகப் பேசினார்கள். சிலர், எரிகிற வீட்டில் பிடுங்கின வரை ஆதாயம் என்று பழி பரப்பினார்கள். சிலர் எனது விடுதலைக்கான ஆதரவினை முழுமையாகத் தடுத்துவிடத் திட்டமிட்டு அந்தப் பழிகளை என் மீது சுமத்திப் பரப்புரை செய்தார்கள்.

  அப்படிப் பரப்புரை செய்தவர்கள் நான் அப்படி என்னதான் சொன்னேன் என்றும் சொல்லி இருக்கலாமே? அப்படி என்னதான் என்னிடம் இருந்தது? வெளியில் உள்ள அவர்களுக்குத் தெரியாத தகவலா உள்ளே இருக்கும் எனக்குத் தெரிந்திருக்கப் போகிறது?

  எங்களை 60 நாட்கள் காவல்துறைக் காவலில் வைத்திருந்தார்கள். பல அலுவலர்களிடம் பல தகவல்கள் இருந்திருக்கலாம். ஓர் ஆண்டு புலனாய்வு செய்து குற்ற அறிக்கை அளித்திருந்தார்களே, சிறப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லினவே, பிறகு பல்நோக்கு உசாவல் குழு ஒன்று அமைக்கப்பட்டதே, அவர்களும் 15 ஆண்டுகளாக உசாவியபடி இருக்கின்றார்களே, இவற்றிலெல்லாம் கிடைக்காத ஒரு தகவலுக்காகவா பிரியங்கா என்னைத் தேடி வந்திருக்கப் போகிறார்?

  அவருக்கு ஏதோ நம்பிக்கையின்மை இருந்திருக்க வேண்டும். நாங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை விரும்பிக் கொடுத்திருந்தோம் என்பதை அவர் நம்பவில்லை. பல ஆண்டுகளாக அது அவருக்கு ஐயத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை அறிந்து கொள்வதற்காகக்கூட என்னைச் சந்தித்திருக்கலாம்.

  சோனியாவைச் சந்தித்த பெங்களூரு அரங்கநாத்து சொல்லாத தகவலையா நான் சொல்லி இருக்க முடியும்? இலங்கையில், இறுதி இன அழிப்புப் (இனப்படுகொலை) போர் 2007-ஆம் ஆண்டு வேகம் எடுக்கத் தொடங்கியது. அதற்கு முந்தைய ஆண்டே அந்தப் போருக்கு ‘ஆபரேசன் பெக்கான்’ என்று பெயரே வைத்து விட்டிருந்தார்கள். இதற்கு ஓராண்டு கழித்து 2008-இல்தான் இங்கே வேலூர்ச் சந்திப்பு நடந்தது.

  எனவே, எனது சந்திப்புக்கும் இறுதிப் போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரியங்கா எதிர்பார்த்து வந்தது என்னிடமிருந்து அவருக்குக் கிடைத்திருந்தால், அவர் நிறைவடைந்திருக்க வேண்டும்; அவர் எனது விடுதலைக்கு வழிவகை செய்திருக்க வேண்டும்.

  ஆனால், எனக்குச் சார்பாக இருந்த சூழ்நிலைகள் அப்படியே எதிராக அல்லவா மாற்றப்பட்டு விட்டன! சிறையிலும் எனக்குத் திட்டமிட்ட துன்பங்கள் இழைக்கப்பட்டன. விடுதலையைத் தடுக்கப் பல பழிகள் சுமத்தப்பட்டன. சிறைக்குற்றம் என்று ஒரு வழக்கும் புனையப்பட்டது. பின்பு, உயர் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது.

  இவை தவிர, அந்தச் சந்திப்புக்குப் பிறகு, சிறையில் எனக்குத் திட்டமிட்ட உளவியல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்று, நான் மனநோயாளி ஆகிவிட வேண்டும்; அல்லது, தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இவற்றைக் குறி வைத்து வகைவகையான இன்னல்கள் என் மீது ஏவப்பட்டன.

  சிறை மாற்றம் செய்யப்பட்டேன். அல்லல்பட்டேன். கணவரைச் சந்திக்க ஒப்புதல் இல்லாது ஓர் ஆண்டுக்கு மேல் இடர்ப்பட்டேன். வாயும் வயிறும் அவிந்து போய் உணவு சாப்பிட முடியாமல் பல மாதங்கள் துன்பப்பட்டேன். இப்படி எனக்கு ஆக வேண்டும் என்று ஏதோ ஒரு மாத்திரையை எனக்கான உணவில் கலந்து நாள்தோறும் கொடுத்துள்ளார்கள்.

  இதனை மனச்சான்று கொண்ட காவலர் ஒருவர் என்னிடம் சொன்ன பிறகு அவர்கள் தருகிற உணவினை அப்படியே வாங்கிக் கமுக்கமாகக் கொட்டி விடுவேன். பழங்கள், மாச்சில்லுகள் (Biscuits) மட்டும் சாப்பிட்டுப் பல மாதங்கள் கழித்தேன்.

  இவை எல்லாம் ஏன் நடந்தன, எப்படி நடந்தன என்பதை வெளியுலகுக்குச் சொல்லக் கூட அஞ்சிக் கொண்டிருந்தேன். ஆனால், இவை அனைத்தையும் சிறைத்துறைத் தலைவருக்கு அவ்வப்பொழுது முறையீடாக நானும் என் கணவரும் அனுப்பி இருக்கிறோம்.

  ஏதோ ஒரு வகையில், இந்தப் பெண் குற்றமற்றவர் என என்னைப் பற்றிப் பிரியங்கா நினைத்திருக்கலாம். கமுக்கச் சந்திப்பை இந்தப் பெண் அம்பலப்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை இருந்து அதனாலும் பார்க்க வந்திருக்கலாம். ஆனால், அந்தச் சந்திப்பு மனித நேயச் சந்திப்பாகத்தான் பேசப்பட்டது.

  இப்போது திரும்பிப் பார்க்கிறேன். அந்தச் சந்திப்பு நடந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டன. எங்களுக்கு நல்லது ஏதும் நடக்கவில்லை. ‘என்னுடைய காயத்தை ஆற்றிக் கொள்ள நடந்த சந்திப்பு’ என்று அறிக்கை கொடுத்திருந்தார் பிரியங்கா.

  ஒரு செவ்வி(பேட்டி)யில், ‘அவரை மன்னித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அங்கே (வேலூர்) போனேன். போன பிறகுதான் அது தேவை இல்லை என்றாகி விட்டது. அவரைச் சந்தித்த பிறகுதான் என் வேதனையும் நளினியின் வேதனையும் ஒன்றாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன் என்று மூன்று வரிகளில் கூறியிருந்தார்.

  ஆக, என்னைக் குற்றமற்றவர் என ஏதோ ஒரு வகையில் உணர்ந்துள்ளார். அதே நேரத்தில், அவரால் வெளிப்படையாக என் விடுதலையைப் பேசவும் முடியவில்லை. இந்தியா, நடுவண் புலனாய்வுத்துறை (சி.பி.ஐ) என்ற கட்டமைப்புகள் குலைந்து போய்விடக் கூடாது என்ற காரணமாகவும் இருக்கலாம். அவரைப் போலவே அவர் உடன்பிறந்தவரான இராகுல் காந்தியும் சொன்னார்.

  சார்க்கண்டு மாநிலத்தில், மாவோ தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட காவல்துறை அலுவலர் பிரான்சிசு இந்துவார் வீட்டுக்கு இராகுல் காந்தி ஆறுதல் கூறச் சென்றிருந்தார். அப்பொழுது பிரான்சிசினுடைய பிள்ளைகளிடம் பேசியபொழுது, “நானும் வன்கொடுமைக்கு என் தந்தையைப் பலி கொடுத்தவன்தான். அதன் வலி எனக்குத் தெரியும். அப்பொழுது என்னுடைய வயது 19-தான். அதனால் உங்களின் வேதனை எனக்குப் புரிகிறது. துக்கத்தில் இருந்து மீண்டு வாருங்கள்” என்று ஆறுதல் கூறினார்.

  அப்பொழுது அந்தப் பிரான்சிசின் பிள்ளைகள், “எங்கள் தந்தையைக் கொன்றவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம். நீங்கள்….?” என்று கேட்க, “நானும் உங்களைப் போலத்தான். அந்தக் கொலையாளிகளை நான் என்றைக்கோ மன்னித்து விட்டேன்” எனப் பட்டென்று பதில் கூறியிருக்கிறார் இராகுல்.

  இந்தச் செய்தி 2010-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் பரவலாக வெளிவந்தது. அதன் பிறகும் ஆறு ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆனாலும் எங்களை விடுவிக்க விருப்பமின்றியே இருக்கிறார்கள்.

  இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டக் காரணம், பிரியங்காவின் சந்திப்பு எங்களை விடுதலை செய்வதற்கானது அல்ல. வேறு அரசியல் காரணங்களுக்கானது என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது என்பதைச் சொல்லத்தான்.

(சிவராசனை நடுவண் புலனாய்வுத்துறை ஏன் பிடிக்கவில்லை என்பது பற்றி அடுத்த இதழில்)

கருத்தாளர்: நளினி முருகன்
தொகுப்பாளர்: பா.ஏகலைவன்

-நன்றி: இளைய (சூனியர்) விகடன், 7.12.2016 இதழ்

தரவு :  இ.பு.ஞானப்பிரகாசன்