அட்டை-நீதிமாரே! : attai_neethimaare

நீதிமாரே! நம்பினோமே! – நீதியரசர் கே.சந்துரு
– நூல் மதிப்புரை

நூல்: நீதிமாரே! நம்பினோமே!!

ஆசிரியர்: கே. சந்துரு

வெளியீடு: கவிதா பதிப்பகம்,

அஞ்சல் பெட்டி எண்: 6123,

8, மாசிலாமணி தெரு,

பாண்டி அங்காடி(பசார்), சென்னை – 600017.

பக்கம்: 208

விலை: உரூ.150/-

  இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கைகள் மெல்ல மெல்லச் சரிந்து வரும் நிலையில், நீதியரசர் கே.சந்துரு எழுதியுள்ள இந்த நூல் நம் குமுகக் (சமூக) கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறது. அத்துடன், நீதித்துறையின் கடமைகளையும் பொறுப்புகளையும் வலியுறுத்தவும் தயங்கவில்லை. சந்துரு கடந்த காலத்தில் உயர்நீதிமன்ற நீதியரசராகப் பணிபுரிந்ததால் இவரின் கவலைகளும் வழிகாட்டல்களும் கவனிக்கப்பட வேண்டியவையாகின்றன.

 நீதித்துறையை இந்திய மாண்புகளைக் காக்கும் கட்டமைப்பாகப் படிக்காதவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நீதிபதிகளின் மேலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்தியாவின் சாபக்கேடான சாதியத்தின் கருத்தியல்களைத் தாண்டி நீதிபதிகளும் வெளிவர முடியாமல் தவிப்பதால் அதன் போக்குகள் காலம் காலமாகக் கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றன. நீதியை எதிர்பார்க்கும் நேரங்களில் அதுவே நீதியின்மைக்கும் சுரண்டலுக்கும் வழியமைத்துக் கொடுக்கின்றது.

  அரசியலாளர்களின் மேல் வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் மேம்போக்காக அணுகி வந்துள்ளன. மதுரையை அடுத்துள்ள மலைகள், கருங்கற்களாகத் (granite) தகர்க்கப்பட்டுள்ளன. மலைகளைக் காக்க, முறைகேடான வகையில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுவதைத் தடுக்க ஏதேனும் வழக்குகள் பதிவானால், கொள்ளையர்கள் நீதிமன்றத்தின் அருள் வெள்ளத்தினால் கரையேறி விடுகிறார்கள். இதனால் முறையாகச் செயல்படும் அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

  கருங்கற்களுக்காக, பிராமி வடிவிலான தமிழ்க் கல்வெட்டுகள் அழிந்துவிடும் கண்டத்தைச்(அபாயத்தை) சுட்டிக்காட்டி நீதி விண்ணப்பம் அளிக்கப்படுகிறது. ஆனால், நீதிமன்றம் கருங்கல் கொள்ளையர்களின் பக்கமே தீர்ப்பை வழங்குகிறது. இந்தச் சமயத்தில் வரலாற்றின் மீது உள்ளார்ந்த அக்கறையோடு செயல்பட வேண்டிய நீதிபதிகளுக்கு அஃது இல்லாமல் போன நிகழ்வுகளைச் சந்துரு சுட்டிக்காட்டும்பொழுது நமக்கு ஏற்படும் அறச்சீற்றம் அளவிடற்கரியதாகும். இது போலத் தமிழ்நாட்டு அளவிலும் இந்திய அளவிலும் நடந்த பல நிகழ்வுகள் இருக்கின்றன.

  மாநில ஆளுநர்கள் யார், அவர்களின் பணி என்ன என்பவற்றையெல்லாம் அரசியல் சட்டம் சுட்டிக்காட்டினாலும் ஆளுநர்களின் செயல்பாடுகள் சட்ட வரம்புக்குள் அமைவதில்லை. மத்திய அரசின் முகவர்களாக(agents) இருந்து அவர்கள் பலமுறை சட்ட நெறிமுறைகளைக் குலைத்திருப்பதை அறிய முடிகிறது.

 குமுகாயத்தில்(சமுதாயத்தில்) கொந்தளிப்பு ஏற்படுத்தும் நிகழ்வுகளில் மக்களை அமைதிப்படுத்த அரசு அமைக்கும் உசாவல்(விசாரணை) ஆணையங்களின் அறிக்கைகள் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பின்மையால் ஓரம் கட்டப்படுகின்றன. அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக இவை கைவிடப்படுவதால் குமுகம்(சமூகம்) மேலும் ஆழமாகப் பிளவுபட்டுச் செல்கின்ற தன்மைகள் பற்பல.

  இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட மறைந்த நீதிமான் கிருட்டிண(ய்ய)ர் காரணமாக இருந்தது எப்படி? அந்த நிகழ்வையும் இந்நூலில் காணலாம். கேரள உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய கிருட்டிண(ய்ய)ர், காவல் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் இளைஞனை விரைந்து சென்று காப்பாற்றுகிறார். நீதித்துறையில் காணப்படும் குறைகளை வெளிப்படையாக்கும் சந்துரு, இந்தியக் குமுகத்தில் (சமூகத்தில்) நீதி எவ்விதம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்தப் பல நீதிபதிகளின் செயல்பாடுகளை எடுத்துக்காட்டி எழுதியுள்ளார்.

  வளர்ச்சியின் பெயரால் இந்தியாவில் நடைமுறைப்படும் பல திட்டங்கள் இந்தியச் சுற்றுச்சூழலுக்கும் பொருளியல் நிலைத்தன்மைக்கும்(economical stability) ஏற்படுத்தும் ஊறுபாடுகள் (பாதகங்கள்) குறித்துத் தம் பார்வையை விளக்கவும் தவறவில்லை அவர்.

  இந்திய மக்களாட்சி ஒளிர வேண்டுமானால் சந்துரு போன்றவர்களின் பணிகள் அவர்களின் பணி ஓய்வுக்காலத்திற்குப் பின்னரும் தொடர வேண்டும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய நிலையில், குறிப்பிட்ட அரசியல் இயக்கங்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை அளித்துவிட்டு, ஓய்வுபெற்ற கையோடு ஆளுநர் பதவியைத் துய்க்கச்(அனுபவிக்க) செல்லும் நீதிபதிகளால் நாடு நலம் பெறாது. கேரள ஆளுநராக இப்பொழுது இருக்கும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவத்தைக் கண்டிக்கிறார் சந்துரு. அதற்காகவே இந்த நூல் நம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

சீனத்(து)பிரியா

நன்றி: காலச்சுவடு.

பெயர்- இ.பு. ஞானப்பிரகாசன் : peyar_name_i.bhu.gnanaprakasan