thamizh06

 நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழிகளுள் ஒன்று தமிழ் என்பதை யாரும் மறத்தல் இயலாது. உலக அரங்கில் இடம் பெறுவதற்கு முன்னர் அதன் பிறப்பிடமாம் இந்நாட்டில் அதற்குரிய இடத்தை அளித்தல் வேண்டும். பாரத கூட்டரசுச் செயல்முறை மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஏற்கச் செய்தல் வேண்டும்.

  பாரத மொழிகளின் தாயே தமிழ்தான். தாயைப் புறக்கணித்து, மகளைப் போற்றும் மதியிழந்த மாந்தரைப்போல் இன்று தமிழைப் புறக்கணித்து இந்தியை அரியணையில் ஏற்ற முயல்கின்றனர். பழந்தமிழுடன் ஆரியம் வந்து கலந்ததனால் உண்டான விளைவே பாரத மொழிகளின் தோற்றம். ஆனால் பாரத மொழிகளின் தாய் ஆரியமே; தமிழும் அதன் புதல்விகளுள் ஒன்றே என்று கருதிவிட்டனர். வடவாரியம், இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்தது. பழந்தமிழோ தனிக்குடும்பத்தைச் சார்ந்தது. மொழிக்குடும்பங்களை ஆராயின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி இயல்புகள் உள என்பதை அறியலாகும்.

பேராசிரியர் சி.இலக்குவனார் : பழந்தமிழ்:  பக்கம் 35