(முன் கட்டுரையின் தொடர்ச்சி)

இராவண காவியம்

கதைச்சுருக்கம்

மிகப்பழங் காலத்தே தமிழ்நாடு இன்றுள்ள எல்லைக்குட்பட்டிருக்கவில்லை; வடக்கில் பனிமலை காறும் பரவியிருந்தது; அயல்நாடர் குடியேற்றத்தால் பின்னர் விந்தமலையை வடக்கெல்லையாகக் கொண்டது. தென் கடல் நிலமாக இருந்தது. அது, இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கில் ஆயிரங் கல்லுக்கு மேல் அகன்றிருந்தது. கிழக்கிலும் வங்கக் கடலும், சாவக முதலிய தீவுகளும் ஒரே நிலப்பரப்பா யிருந்தது. தென்னிலத்தில் குமரிமலை; பன்மலை முதலிய மலைகள் ஓங்கியுயர்திருந்தன. குமரிமலையில் குமரியாறும், பன்மலையில் புஃறுளி யாறும் தோன்றி அந்நிலத்தை வளஞ்செய்தன.

குமரியாற்றுக்கும் பஃறுனியாற்றுக்கும் இடைப் பட்ட நிலம் பெருவளநாடு எனவும், பஃறுளிக்கும் தென் கடலுக்கும் இடைப்பட்ட நிலம் தென்பாலிநாடு எனவும், வழங்கின; பஃறுளியாற்றங் கரையில் இவ்விரு நாடுகளின் தலைநகரமான மதுரை இருந்தது. குமரிக்கும் விந்தத்திற்கும் இடைப் பட்டநிலம் திராவிடம் என வழங்கிற்று. இதன் தலைநகரம் வஞ்சி என்பது. கிழக்கு நாட்டின் – தலை நகர் நாகை ஆகும். இக்கால்வகைப் பட்ட தமிழகம் – குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐந்நிலமாகி மக்கட்கு வேண்டிய எல்லாச் செல்வமும் பொருந்தி யிருந்தது.

பழந்தமிழர்கள் அறிவு, ஆற்றல், வணிகம், கைத்தொழில் ஆகிய நாகரிக நற்பண்பில் சிறந்து அதற்கேற்ப அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நாற்பாலாக விளங்கினர், இல்லறமுற்றிப் பொது நலம் புரிவோர் அந்தணராவர், உழவு முதலிய எல்லாத் தொழிலாளரும் வேளாளராவர், நம்முன்னையோர் நல்லொழுக்கத்திற் சிறந்து ஒன்றா யொரு குலமாயிருந்தனர். தாய்மொழியாம் தமிழ் மொழியை உயிரினும் பெரிதாகப் போற்றி வளர்த்துவந்தனர்.

ஐம் நில மக்களும் தங்களுக்குள் ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொண்டு அவன் ஆணைக்குட்பட்டு வாழ்ந்து வந்தனர். பின்னர்த் தமிழக முழுமைக்கும் ஒரு மாபெரும் தலைவனை ஏற்படுத்தினர். அவன் தமிழகத்தின் நடுவில்- இன்றுள்ள இலங்கையின் தென்மேற்கில் இருந்த ஒரு தொன்னகரில் இருந்து தமிழகத்தை ஆண்டு வந்தனன். அப்பண்டையோன் மரபில் வந்தவரே பாண்டியராவர். அம்மாபெரும் தலைவன் வழிவந்த ஒருவன் தன் மகனைத் தென்னாட்டுக்கும், மற்றிரு தமிழ்த் தலைமக்கள் கிழக்கு நாடு திராவிட நாடுகட்கும் தலைவராக்கினான். அம்மூவர் வழிவந்தோரே பாண்டிய சோழ சேரராவர்.

கி. பி. 140 கடைச்சங்க இறுதிக்காலமாகும். கடைச்சங்க முன் 8000 ஆண்டுகளுக்குமுன் தென் கடல் பொங்கிச் தென் பாலியையும், கிழக்கு நாட்டின் பெரும்பகுதியையும் வாய்க் கொண்டது; பின், கி. மு. 2500-இல் ஒரு முறை பொங்கிப் பெரு வளத்தின் பெரும் பகுதியையும், கிழக்கு நாட்டையும் விழுங்கிற்று; கி. மு. 700-இன் முன் ஒருமுறை பெருகித் திராவிடத்தின் ஒரு பகுதியையும் உண்டேப்பமிட்டது. 

இரண்டாங் கடல்கோளின் பின்னர் இலங்கை உண்டானது இலங்கை நாட்டின் நடுவில் இருந்த முரீகூடல் மலைமீது இலங்கை நகர் இருந்தது.

மூன்றாங் கடல்கோளுக்கு முன் இலங்கையிலிருந்து தமிழகத்தை யாண்டுவந்த மாபெரும் தலைவர் வழிவந்த வக்சிரவாவுவின் மனைவியான கேகசி என்பாள் இராவணன், கும்பகன்னன், பீடணன் என்னும் மூன்று ஆண்மக்களையும், காமவல்லி என்னும் பெண்மகளையும் பெற்றனள். மூத்தவனான இராவணன் முடிபுனைந்து தமிழகத்தை ஆண்டு வந்தனன்.

மலைவளங்காணச் சென்ற இராவணனும், திராவிடத்தைச் சார்ந்த முதிரையிலிருந்து முல்லை நாட்டை யாண்டுவந்த மாயோன் மகள் வண்டார்குழலியும் எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு மணம் புரிந்து இல்லறம் நடத்திவந்தனர். வண்டார்குழலி சேயோன் என்னும் செம்மலைப் பெற்றனள்.

தமிழகத்தின் வடக்கெல்லையான விந்தச்சாரல் பல சிறு நாடுகளாகப் பாகுபட்டிருந்தது. வட நாட்டில் ஆரியர் என்னும் ஓரினத்தினர் வாழ்ந்துவந்தனர். அவர் ஏற்றத்தாழ்வான குல வேற்றுமை யுடையவர். அவர்களில் கல்வி யறிவுள்ள முதியோர் சிலர், இராவணன் தோன்றுவதற்கு நெடுநாள் முன்னரே அறிவுக் கோலத்துடன் தமிழகம் போந்தனர். தமிழ் மக்கள் அன்னாரை அன்புடன் வரவேற்று ஊணுடை யுதவிப் போற்றி வந்தனர். அவர் தமிழ் கற்றும், தமிழரிடம் நெருங்கிப் பழகியும் வந்தனர். இவ்வாறே பின்னரும், பின்னரும் பலர் வந்தனர், நாளடைவில் அவர் தமிழகம் முழுதும் புகுந்து, தமிழந்தணருடனும், புலவருடனும் நெருங்கிப் பழகி அரசர் உறவையும் பெற்றனர். நாளாகஆக இளைஞரும் வந்து, தமிழ்ச் செல்வ இளைஞரிடம் தோழமை செய்யும் பார்ப்பன வேலையும் சிலர் பார்த்து வந்தனர்

⁠நாளடைவில் பலர் பெண்டு பிள்ளைகளுடன் குடியேறி விந்தக் காடுகளில் இலைக்குடில்கள் அமைத்து வாழ்ந்து வந்தனர். அவர் வேள்வி மூலம் உயிர்களைக் கொன்றுண்ணத் தொடங்கினர். தமிழ் மக்கள் தடுத்தனர். அவர் கேட்கவில்லை. இருவருக்கும் போருண்டானது. அம்மக்கட்போர் தமிழாரிய மன்னர் போரானது, முடிவில் வடவரசர் தோற்றனர். ஆரிய முனிவர்கள் அஞ்சினவர் போல நடித்துப் பல தமிழாசர்களை வஞ்சித்துக் கொன்றனர், நூற்றுக்கணக்கான தமிழர் கோட்டைகளைத் தீயிட்டெரித்தனர்.

⁠விந்தச்சாலி லிருந்த இடைவள நாட்டை யாண்டு வந்த தாடகை யென்னும் தமிழரசி இராவணனது துணையை வேண்டினாள். அவன் சுவாகு என்னும் படைத்தலைவனைப் பெரும் படையுடன் அனுப்பினான். சுவாகு இடைவளஞ் சென்று ஆரியப் புலைவேள்வியை அகற்றிக் காத்துவந்தான், அதனால், கோசிகன் என்னும் ஆரிய முனிவன் வேள்வி செய்ய முடியாது மன முடைந்து சென்றனன்

⁠வடநாட்டில் சரயுவாற்றங் கரையில் உள்ள அயோத்தியில் தசரதன் என்னும் சிற்றரசன் ஒருவன் இருந்தான். அவன் கோசலை, சுமத்திரை என்னும் இருமனைவியருடன் பல காதல் மகளிருடனும் களித்து வந்தான்; தனது தோள் வலிமையால் பல நாடுகளை வென்று கோசலம் என்னும் நாட்டை நிறுவிப் பேரரசனானான். பின் தன் தகுதிக்கேற்பப் பேரரசனான கேகயன் மகள் கைகேசியைக் கேட்டான். அவள் மறுக்கவே, தனது நாட்டைக் கைகேசிக்குப் பரிசமாகக் கொடுத்து அவளை மணந்தனன்.

⁠கிழப்பருவமுற்றும் பிள்ளையில்லாது வருந்திய தசரதன், குலகுரு வசிட்டர் சொற்படி கலைக்கோட்டு முனிவனைக் கொண்டு குதிரை வேள்வி செய்தனன். ஓராண்குதிரை, படையுடன் ஓராண்டில் நாடு சுற்றி மீண்டது. முனிவர் வேள்வி தொடங்கினர். அவ்வேள்விக் குதிரையைக் கோசலை வாள்கொண்டு மூன்று வெட்டில் வெட்டி வீழ்த்தினார். கேசலை தன் கணவனைத் தழுவுவதுபோல் வெட்டுண்ட அவ்வாண் குதிரையைத் தழுவி அவ்விரவைக் கழித்தனள். சடங்குகள் முடிந்தபின் பலபகல் குதிரை, ஆடு, மாடு, ஆமை, பாம்பு, பறவை முதலிய பன்னூற்றுக் கணக்கான உயிர்களைக் கொன்று தின்று சோமக் கள்ளுண்டு இன்புற்றனர். தசரதன் கலைக்கோடர் முதலிய வேள்வியாசிரியர் மூவர்க்குக் கோசலை முதலிய மூன்றுமனைவிகளையும் காணிக்கையாகக் கொடுத்தான். அவர்கள் கனிமொழி பேசிக்கூடிக் கலந்தின்புற்று மூவரும் கருப்பமுறவே அவர்களுக்கீடான பொருள் பெற்றுக்கொண்டு தசரதனிடம் ஒப்பித்துச் சென்றனர். கருப்பமுதிர்ந்து கோசலை இராமனையும், கைகேசி பரதனையும், சுத்திமரை இலக்குவ சத்துருக்கரையும் பெற்றனர், மக்கள் வளர்ந்து மணப்பருவ முற்றனர்

⁠மனமுடைந்து சென்ற கோசிகன் அயோத்தியை யடைந்து வேள்வித்துணையாக இராமலக்குவரை அழைத்துக்கொண்டு இடைவளநாட்டை யடைந்து ஒரு சோலையில் தங்கினர். அங்கே தனித்து வந்த தாடகையை முனிவன் சொற்படி இராமலக்குவர் கொன்றனர். அங்கிருந்து சென்று தன் குடிலையடைந்து முனிவன் வேள்வி தொடங்கினன்.

⁠சுவாகு, இளவரசனான மாரீசனோடு சென்று வேள்வியைத் தடுத்தான், இராமன் சுவாகுவைக் கொன்றான். தன்னிலைமையுணர்ந்த மாரீசன் ஆங்கு நின்றும் மீண்டனன். மூவரும் வேள்வி முடித்துத் தமிழகத்தை நீங்கினர்.

⁠தூதரால் இதையறிந்த இராவணன், விந்த நாட்டை யாண்டு வந்த தனது தங்கை காமவல்லிக்குத் துணையாகப் பெரும்படையை அனுப்பினன். கரன் என்னும் படைத்தலைவன் அப்பெரும்படையை ஆங்காங்கு அமைத்துக் காத்து வந்தனன், காமவல்லியின் காப்பில் விந்தநங்கை புலைவேள்வியற்றுப் பொலிந்தனள்.

⁠வேள்வி முடித்துச்சென்ற மூவரும் மிதிலையை யடைந்து சனகன் விருந்தினராக இருந்தனர். சனகன் முனிவரிடம், தான் கண்டெடுத்து வளர்த்துவரும் சீதையை மணக்கப் பேராசர் எவரும் முன்வாராமையையும், அதனால் இவ்வில்லை வளைப்போர்க் குரியளென ஒரு வில்லை நாட்டியும் ஒருவரும் வாரா மையையும் கூறி வருந்தினான், முனிவர் கட்டளைப்படி இராமன் அவ்வில்லை வளைத்தொடித்தனன், சனகன் மகிழ்ந்து, தசரதன் முதலியோரை வரவழைத்துச் சீதையை இராமனுக்கும், ஊர்மிளையை இலக்குவனுக்கும், தன் தம்பி குசத்துவசன் மகளிரான மாளவியைப் பரதனுக்கும், சுதகீர்த்தியைச் சத்துருக்கனுக்கும் மணஞ்செய்து கொடுத்தனன். தசரதன் சனகனிடம் விடை பெற்று மக்கள் மருமக்களுடன் அயோத்தியை யடைந்தனன் .

⁠தசரதன், இராமன் மீதுள்ள பற்றினால் பரதனுக்குரிய நாட்டை இராமனுக்காக வெண்ணித் தந்திரமாகப் பாதனைச் சத்துருக்கனுடன் அவன் பாட்டனூருக் கனுப்பிவிட்டு இராமனை நாட்டு மக்களிடம் பழகச் செய்தனர். இவ்வாறு பன்னிரண் டாண்டுகள் சென்றன, தசரதன் அரசர்களையும் குடிகளையும் கலந்து இராமனுக்கு இளவரசுப் பட்டங்கட்ட முடிவு செய்தனன். இதை யறிந்த கைகேசியின் தோழியான மந்தரை என்பவள் அரசன் சூழ்ச்சியைக் கூறி முடி சூட்டைத் தடுக்கும்படி வேண்டினாள், கைகேசி தசரதனிடம் முன்னர்ச் சம்பரனை வென்றதற்காகக் கொடுத்த இருவரங்களில் ஒன்றால் பரதன் நாடாளவும், மற்றொன்றால் இராமன் பதினான்காண்டு காடாளவும் செய்யவேண்டும் என கேட்டாள். தசரதன் சூழ்ச்சி பலிக்கவில்லை. இராமன் சீதை இலக்குவன் மூவரும் தேரேறிக் காடு சென்றனர். 

⁠சென்றவர், குகனென்னும் தோழனால் கங்கையைக் கடந்து வழி நெடுக ஆரிய முனிவர் வரவேற்று வழியனுப்பச் சென்று சித்திரகூட மலையை அடைந்திருந்தனர். தேரோட்டி வந்த சுமந்திரன் சென்று கூறவே தசரதன் இராமன் பிரிவால் உயிர் விட்டனன். பரதன் செய்தி கேட்டு வந்து தந்தையின் உடலை அடக்கம் செய்து சேனை சூழச் சித்திர கூடத்தை யடைந்து இராமனை நாடாள வரும்படி வேண்டினான். இராமன் நாடு பரதனுக் குரிய தென்பதைக் கூறி, பரதன் நான் அதை உனக்குத் தந்தனன். ஏற்றருள்க வென, இராமன் நான் பெற்றோர் சொற்படி பதினான்காண்டு கழித்து வருகிறேன். அது மட்டும் எனக்கீடாக நீ ஆள்வாயெனப் பரதன் இராமன் மிதியடியைப் பெற்று மீண்டு, நம்பியூர் என்னும் சிற்றூரில் தங்கி, மிதியடியை முடிபுனைனந் தரியணை யிருத்தி அதை வணங்கி வந்தனன். சத்துருக்கன் ஆட்சி புரிந்து வந்தனன்.

 

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை