(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 14 : முதிர்பருவம் – தொடர்ச்சி)

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை

  1. 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்

1928-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் முதல் தேதி முதல் நான் அரசு வேலையிலிருந்து விலக வேண்டி வரும் என்று முன்பே அறிந்திருந்தபடியால் அதற்காக அது முதல் என் வாழ்நாட்களை எப்படி கழிப்பது என்று ஒரு தினசரிப் பட்டி ஏற்படுத்திக்கொண்டேன். அதை எழுது முன் எனது நண்பர்களில் பலர் நீ ஏன் மறுபடியும் வழக்குரைஞராகப் பழகலாகாது என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அன்றியும் சனவரி மாதம் 31-ஆந்தேதி என் நீதிமன்ற வேலையை முடித்தவுடன் சிறுவழக்கு நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஒன்றுகூடி காலஞ்சென்ற எனது நண்பர் பி. எம். சிவஞான முதலியார் மூலமாக என் பிரிவைப்பற்றி ஏதோ உபசார வார்த்தைகளை கூறிய பிறகு “நீங்கள் மறுபடியும் உயர்நீதிமன்ற வழக்குரைஞராக வந்து கலந்து கொண்டால் எங்களுக்குத் திருப்திகரமாயிருக்கும்” என்று கூறியபோது “அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்கள் கேட்பதை மறுப்பதற்காக மன்னிக்க வேண்டும்” என்று கூறினேன். அதற்கு முக்கிய காரணம் ஒருமுறை நீதிபதியாயிருந்த பிறகு மறுபடியும் வழக்குரைஞராகப் போவது சரியல்ல என்று நான் தீர்மானித்ததேயாம். மறு நாள் ஒரு தினசரி ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் (Reporter) என்னிடம் வந்து “இனி உங்கள் காலத்தை எப்படிக் கழிக்கப் போகிறீர்கள்” என்று கேட்டபோது, “ஈசுவரன் எனக்கு இனி அருளும் ஆயுட்காலத்தையெல்லாம் தமிழ் நாடகத்திற்காகவும் தமிழ்மொழிக்காகவும் தொண்டு செய்யத் தீர்மானித்திருக்கிறேன்” என்று பதில் கூறினேன். அன்று முதல் இந்நாள் வரை அந்த இரண்டு தொண்டுகளையும் என்னாலியன்ற அளவு செய்து வருகிறேன் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்கள் என்று நினைக்கிறேன். பிறகு வழக்குரைஞராகப் புகவேண்டுமென்று என்னை வற்புறுத்திய என் பல பந்துக்களுக்கும் சிநேகிதர்களுக்கும் நான் கூறின பதிலை இங்கு எழுதுகிறேன். அவர்கள் என்னிடம் வந்து “நீங்கள் ஏன் மறுபடியும் வழக்குரைஞராகச் சேரலாகாது?” என்று கேட்டதற்கு நான் “ஏன் மறுபடியும் வழக்குரைஞராகும்படிக் கேட்கிறீர்கள்?” என்று நான் வினவினேன். அதற்கு அவர்கள் “இல்லை நீங்கள் 7 வருடம் அரசு உத்தியோகத்தில் இல்லாதபடியால் உங்களுக்கு ஓய்வூதியம் (Pension) கூட ஒன்றும் கிடையாதே. ஆகையால் மற்றவர்கள் செய்வதுபோல் நீங்கள் மறுபடியும் சுலபமாக வழக்குரைஞராக (Advocate) ஆகி வேலை பார்த்து பணம் சம்பாதித்து சுகமாய் வாழலாமே என்று கேட்கிறோம்” என்றார்கள். அதற்கு நான் “மறுபடியும் இந்த வேலை பார்த்து கட்டப்பட்டுப் பணம் சம்பாதித்து அடையவேண்டு மென்கிற சுகத்தை அந்தக் கட்டமெல்லாம் இல்லாமல் இப்போது அநுபவித்துக் கொண்டிருக்கிறேனே. அதையேன் தடுக்கிறீர்கள்” என்று பதில் சொன்னேன்.

சிலர் உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளின் பொருட்டு நீங்கள் அப்படிச் செய்யலாகாதா? என்று கேட்டதற்கு அடியிற் கண்டபடி பதில் உரைத்தேன்:- “ஈசன் கருணையினால் எனக்கிருப்பது ஓர் ஆண் பிள்ளையும் இரண்டு பெண்களும். அப்பிள்ளைக்கு நான் சம்பாதித்து வைத்த பொருளே போதுமானது. என் இரண்டு குமாரத்திகளையும் தக்க இடத்தில் விவாகம் செய்து கொடுத்து விட்டேன். அவர்கள் தங்கள் புருசன் வீட்டில் பரமேசுவரன் கருணை யினால் சுகமாக வாழ்கிறார்கள். இப்படியிருக்க எதற்காக நான் மறுபடியும் நீதிமன்ற வழக்கு வேலையில் கட்டப்பட வேண்டும்”. என்று சொல்லி “என் இச்சைப்படி, தமிழுக்காக உழைப்பதை த் தடுக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை