திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை?

(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தமிழ்நாடு
அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை?
தமிழருக்கென ஒரு நாடு இல்லை. பலகோடி தமிழர் பிழைக்க வழிவகையின்றி அயல்நாடுகளுக்குச் சென்று அல்லல்படுகின்றனர். தம் தாய்மொழி, பண்பாடு, நாகரிகம் வளம்பெறச் செய்ய வாய்ப்பின்றி இடர்ப்படுகின்றனர். ஏனெனில், நாமெல்லாம் இந்தியர்!
அயல்நாட்டார் பலர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். இந்திக்காரர் வந்து தமிழ்நாட்டில் குடியேறுகின்றனர். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர் எவரும் எந்த இடத்திலும் குடியமர உரிமை உண்டென இந்திய அரசியல் சட்டம் செய்யப்பட்டுள்ளது. அதுகொண்டு தமிழ்நாட்டில் அவர்கள் நிலையாகக் குடியேறி, தொழில்கள் செய்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் நடத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் கிடைக்கும் கனிமப்பொருள்கள் யாவும் வடநாட்டிற்கே கொண்டு செல்கின்றனர். வருவாய் மிகுந்த இருப்புப் பாதைத்துறை, அஞ்சல்துறை, வருமானவரித்துறை, சுங்கத்துறை முதலியவற்றையெல்லாம் வடவரின் நேரடி ஆட்சியின் கீழ் வைத்துளர். தமிழ்நாட்டின் ஆட்சிமுறையைக் கண்காணிக்க ஓர் ஆளுநரையும் அமர்த்தியுளர். எந்த நேரத்தில் ஆட்சிக் கலைக்கப்படுமோ என்று அஞ்சிக் கொண்டே ஆட்சிபுரிய வேண்டியுள்ளது.
கடந்த காலத்தில் கலைஞர் ஆட்சியும், புரட்சித்தலைவர் ஆட்சியும், சானகி – இராமச்சந்திரன் ஆட்சியும் கலைக்கப்பட்டதை ஈண்டு நினைவுபடுத்துகிறோம்.
தில்லி ஆண்டார்க்கு மாறாகச் செயல்படும் மாநில ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி கொணரப்படும். எனவே. தமிழ்மக்கள் என்றும் வடவர்க்கு அடிமையே என்பது ஒருதலை. எப்பொழுதும் தென்னாட்டார் இந்திய முதலமைச்சராக வர வாய்ப்பே இல்லை! வடநாட்டாரிலும் இந்தி மொழி பேசும் மாநிலத்தைச் சார்ந்தவர்தாம் முதலமைச்சராக வரலாம். இந்திய அரசியல் சட்டம் அவ்வாறு ஆக்கப்பட்டுள்ளது. என்றென்றும் நாம் இந்திக்காரர்கட்கு அடிமையாக வாழ வேண்டியதே!
தமிழக அரசுக்கு மேலவை, பேரவை என இரண்டு சட்டமன்றங்கள் இருந்தும், எந்தச் சட்டமும் இயற்றி நடைமுறைப்படுத்தும் உரிமையில்லை. தில்லிக்கு அனுப்பி முதலமைச்சர், குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்றால்தான் நடைமுறைப்படுத்தலாம். ஒப்பதல் அளிக்காமல் மறுக்கவும் கூடும். நம் நாட்டில் உண்டாகும் வறட்சி, வறுமை, வற்கடம், புயல், வெள்ளம் முதலிய தின்மைகட்கும், நன்மைதரும் திட்டங்கட்கும் வடவரிடம் கையேந்தி நிற்கவேண்டிய நிலைமைதானே இருக்கிறது. ஆயின், வடவர் வந்து பார்வையிட்டபின்னரே குறைத்தோ, கூட்டியோதாம் உதவி வழங்குவர்.
நம் இனத்தலைவர் பலர் தம்மை, ஈகம் செய்து பெற்ற விடுதலை வடநாட்டார்க்கு அடிமையாக வாழ்த்தானா? தமிழர்க்கென ஒருநாடு வேண்டுமானால், தமிழ்மொழி, பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால் நம் நாடு வடவர் பிடியினின்று விடுதலை பெறவேண்டும். அன்றுதான் நம் தாய் மொழி, நம் பண்பாடு, நம் நாகரிகம் வளமுறவும், வளரவும் கூடும்.
இல்லையேல், நாம் இந்திக்காரர்க்குக் கொத்தடிமைகளாகவே வாழவேண்டியதுதாம். இனமிலா இந்தியர் அல்லது பண்பற்ற பாரதராக ஆகவேண்டியதே!
காந்தியடிகளார் சொன்னாற்போல, ‘செயல்படு அல்லது செத்துமடி! புகழுடம் பெய்துவாய்!’ எதிர்காலம் உனக்கு விழாவாவது எடுக்கும்.
மானங்கெட வரின் வாழாமை முன்னினிது.
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை



![image-55157 3 ] தமிழ்நாடு , க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்](http://www.akaramuthala.in/wp-content/uploads/2024/12/attai-thiruthurai-kizhaar-katturaikal-thamizhppaavai1-300x300.jpg)

Leave a Reply