thirukkural02

வள்ளுவர் தந்த திருமறையைத் – தமிழ்

     மாதின் இனிய உயிர் நிலையை

உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும்

     உத்தம ராகி ஒழுகுவமே.

பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன்

     பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை

நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின்

     நன்னயம் முற்றுந் தெளிகுவமே,

தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை

     தேரும் சிலப்பதி காரமதை

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்

     ஓதி யுணர்ந்தின் புறுவோமே.

கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக்

கற்பனை சேருங் களஞ்சியத்தை

முற்ற அளந்து தெரிவோமே – காதல்

மூழ்கும் துறைகண்டு வாழ்வோமே.

பண்டை இயற்கை வளங்களெல்லாம் – பத்துப்

     பாட்டின் வளத்தினிற் கண்டறிந்து,

மண்டல மெங்கும் கமழும் அருந்தமிழ்

     வாசம் நுகர்ந்து மகிழ்வோமே.

kavimani_thesikavinayakam01-கவிமணி தேசிக விநாயகம் (பிள்ளை)