அருந்தமிழ் நுகர்ந்து மகிழ்வோமே! – கவிமணி
வள்ளுவர் தந்த திருமறையைத் – தமிழ்
மாதின் இனிய உயிர் நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும்
உத்தம ராகி ஒழுகுவமே.
பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன்
பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை
நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின்
நன்னயம் முற்றுந் தெளிகுவமே,
தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே.
கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக்
கற்பனை சேருங் களஞ்சியத்தை
முற்ற அளந்து தெரிவோமே – காதல்
மூழ்கும் துறைகண்டு வாழ்வோமே.
பண்டை இயற்கை வளங்களெல்லாம் – பத்துப்
பாட்டின் வளத்தினிற் கண்டறிந்து,
மண்டல மெங்கும் கமழும் அருந்தமிழ்
வாசம் நுகர்ந்து மகிழ்வோமே.
Leave a Reply