thalaippu-kavithai

கவிதைக்கு அழிவில்லை

காற்றும் மழையும் அழித்தாலும்- என்
கவிதைக் கனலுக் கழிவில்லை
ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை- இனி
உறைக்குள் போட மனமில்லை

மண்ணும் மலையும் சரிந்தாலும்- என்
மானிடப் பார்வைக் கழிவில்லை
விண்ணும் கடலும் திரண்டாலும்- என்னுள்
விரியும் கவிதைக் கழிவில்லை

வெட்டிப் பொழுது போக்குவதை- நான்
வீணில் என்றும் கழித்ததில்லை
கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி- களத்தில்
கூர்மை வாளாய்க் களமிறங்கும்

சொல்லும் பொருளும் உள்ளவரை- என்னுள்
தொடரும் சமூகச் சிந்தனைகள்
வெல்லும் என்கவி எனச்சொல்லி
வித்தகம் பேச அறியேன்நான்

அல்லும் பகலும் கண்டவற்றை-என்
அகத்தின் காயமாய் உணர்ந்ததனால்
செல்லும் வழியைச் சீராக்கச்
சீறிப் பாய்வேன் தமிழாலே!

https://www.facebook.com/ramagurunathan?fref=nf

  • rama.gurunathanமுனைவர் இராம.குருநாதன்