moulaviumarjahfermanbayee

உலகினரை வியக்க வைக்கும் செம்மொழியே !

 

எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை

இசுலாத்தின் வழியினிலே வைத்தவனே !

எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை

எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே !

எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு

இனிதான தமிழ்தாயைத் தந்தவனே !

அத்தனையும் உன்கருணை ! உன் புகழே !! – நான்

அதற்காக காலமெல்லாம் புகழுகின்றேன் !

அலஃகம்து லில்லாஃக் ….

சொல்வதற்கு இயல்பான செந்தமிழே ! – ஏழு

சுரங்களுக்குள் இசையான பைந்தமிழே !

நல்ல நெறி நாடகத்தின் நறுந்தமிழே ! – நீ

நான்குதிசை போற்றி நிற்கும் செம்மொழியே !

கற்கண்டில் எப்பக்கம் இனிக்குமென்றால் – அதைக்

கடிக்கின்ற பக்கமெல்லாம் இனிக்குமென்போம் ! – (அதுபோல)

பொற்புடைய பைந்தமிழே ! பெட்டகமே !! – உன்னைப்

படிக்கின்ற படைப்பெல்லாம் இனிமையென்போம் !

சேரசோழ பாண்டியரின் மடிகளிலே – நீ

சிரித்து வந்த சரித்திரத்தைப் போற்றுகின்றேன் !

வீரமா முனிவரையும் மயங்கவைத்து – அவரும்

உன் புகழைப் பாடியதில் வியந்து நின்றேன் !

கம்பன் உமர் வள்ளுவரின் மனங்களிலே – நீ

கருப்பொருளாய் விளைந்ததையும் கண்டுகொண்டேன் !

உம்புகழே உனக்குத் தனி செழுமை தர – நீ

உலகினரை வியக்க வைக்கும் செம்மொழியே !

ஒரு கோடிப் பக்கங்கள் இயற்றுகின்ற – பெரும்

உயர்வான காவியங்கள் உனக்குள் உண்டு !

ஒன்றரைக்கும் மேற்போகா வரிகளுக்குள் – நல்ல

உரைகூறும் தகுதிகளும் உனக்கேயுண்டு !

உயர்ந்த தனிச் செம்மொழியே தமிழ்மொழி தான் – இதை

உரையாடும் செந்தமிழர் உயர்ந்தவர்தாம்

உயிர்போலக் காத்துவந்தால் உயர்ந்தவர் நாம் – எமக்கு

உயர்தமிழும் உயிர் தீனும் ஒன்றே தான்.

            – மர்ஃகூம் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் சஃபர் மன்பயீ