paaduchitte

காட்சி – 30

அங்கம்    :    அருண் மொழி, பூங்குயில்
இடம்        :    பள்ளியறை
நிலைமை    :    (பள்ளிகொள்ள வருகின்ற பூங்குயிலை
துள்ளி மெல்ல அணைக்கின்றான்)
பூங்    :    என்ன நீர் இன்று பொழுதுக்குள்ளே
களைப்பாய் உள்ளீர் உழைத்ததனாலா?
அரு    :    என்னடி! உண்ணல் உறக்கம் தவிர்த்தோர் தவிர
வேறென்ன வேண்டும்? உழைப்பு நமக்கு!
பூங்    :    வெல்வெட்டு மெத்தை பிரித்தே வைத்த
மேல் விரிப்பட்டும் தொங்கவே செய்த
நல்லதோர் தேக்கங்கட்டிலும் உண்டு!
நல்மணம் பரப்பும் பொருள்களும் உண்டு
பாலாடையாகப் படி நிறை திரட்டிப்
பாதாம் பருப்பும்! கற்கண்டும் கலந்து
மேலே குங்குமப் பூவையும் கொட்டி
எதற்கும் நல்ல தேனையும் விட்டு
வா! வா! என்றிட வைத்துள்ளேன்! நானே!
வாழையும் மாங்கனிப் பலாவுமான
தேவாமிர்தப் பழங்களும் இங்கே
தித்திக்கத் தித்திக்க! சிமிட்டுதல் பாராய்!
பன்னீர் திராட்சை பழச்சாறு வகையும்
பேரீச்சம் பழமும்! பெரியாப்பிளும்
உண்க! உண்க! என்பது போல
உமக்காக ஆங்கே உட்கார்ந்திருக்க!
என்னென்ன! வேண்டுமோ அனைத்தும்
சுந்தரவடிவாய்த் தோன்றியே இருக்க!
உனக்கென்ன! குறைதான்? உண்டே முடிந்து
உறங்கிட இன்னும் என்னதான்! வேண்டும்!
என்றே அவளும் எடுத்தே உரைத்து
நின்றே பார்த்தாள் நாணத்தால் ஆங்கே!

அரு    :    அனைத்து நலங்களும் அருகில் உள்ள
பொருள்களை உண்டிட வருமே தவிர
உனைநான் பார்த்ததும் அனைத்துச் சுவையும்
நலங்களும் தருகின்ற பொருளங்கு உண்டா?
எனக்கெதும் வேண்டாம்! நீயே வேண்டும்!
என்றவன் இழுத்து மடியினில் சாய்க்க!

(காட்சி முடிவு)

– ஆ.வெ.முல்லை நிலவழகன்

ஆ.வெ.முல்லைநிலவழகன்

ஆ.வெ.முல்லைநிலவழகன்