இராவண காவியம்

திராவிடத் தளபதி,

திரு, சி. என். அண்ணாத்துரை எம்.ஏ.அவர்களின்

முன்னுரை

 

இராவண காவியம்- திடுக்கிடுகிறீர்களா? அப்படித்தான் இருக்கும், பன்னெடுங் காலமாக இராமாயணம் படித்தும், படிக்கப் பக்க நின்று கேட்டும் வந்த மக்களல்லவா! அவர்களின் செவிக்கு. இராவணகாவியம் என்ற ஒலியே சற்றுக் கிலி தருவதாகத்தான் இருக்கும், எனினும், இந்நூல், எதிர் பாராததல்ல. காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி, என்று பல கூறலாம் இதற்குக் காரணமாக, இது போல் ஒரு நூல் வெளி வந்தே தீரும் என்பதை, நாட்டு மக்களின் உள்ளத்தின் போக்கிலே ஏற்பட்டுவரும், புதிய எழுச்சியை அறிந்தோர், அறிந்திருந்தனர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இதனை அறிவித்தே விட்டார் பல ஆண்டுகளுக்கு முன்னரே.

“தென் திசையைப் பார்க்கின்றேன் என்செய்வேன் எந்தன்
சிந்தை யெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!”

இராவணகாவியம், புரட்சிக் கவிஞரின் புதுக் கவிதைபோல, புதிய தமிழகத்தின் ஓவியம். இதனுடைய நோக்கம், முன்னுள்ள ஏடுகளின் மூலம் ஏற்பட்ட கேடுகளைக் களைந்து, இந் நாள் நினைவுக்கேற்ப, அவற்றினை ஆராய்ந்து, புது உருவாக்கித் தருவது. பழைய உருவிலே பற்றுக்கொண்டோருக்கு இஃது – பயங்கரப் புயலாகத் தோன்றும். இதனை, ஆக்கியோர் அறிவார், மனித இயல்பறிந்தோர் ஆச்சரியமும் கொள்ளார். இராம நவமி கொண்டாடும் நாட்களிலே, நாட்டிலே, இராவண காவியம் ஆக்கப்படுவது, அதிசயம் என்று கருதிப் பயனில்லை, அறிவிப்பு என்று கொள்ளவேண்டும்-பழமை மடிகிறது என்பதற்கான அறிவிப்பு, சாரின் கொடுமை உண்டாக்கிய சூழ்நிலையால்தான் ஓர் இலெனின் தோன்ற முடிந்தது. தோன்றினதால் தான், யார் தேவகுமாரன் என்று தேய்த்தினரால் வணங்கப் பட்டு வந்தானோ அவன், மக்களின் இரத்தத்தை உறிஞ்சிடும் ‘பேயன்’ என்று ஏற்பட்டது. சார் இல்லையேல் இலெனின் இல்லை! அவசியம் இராது!! அஃதே போல், இராமாயணத்திற்கு ஆக்கம்தேடி முனைவோரும், சித்திரம் தீட்டிடுவோரும், சிறு கட்டுரை யாக்கிடுவோரும் இன்று புதுக்கூத்தாட முற்பட்டிருக்கவில்லை யானால், இக்காவியமும் எழுந்திராது. ஒன்றின் விளைவு மற்றொன்று-விளைவு மட்டுமல்ல–ஒன்றுக்கு மற்றொன்று மறுப்பு!

   இராமன், தெய்வ மாக்கப்பட்டான், இராமன் தெய்வமாகத் திகழ்வதற்காக, இராவணன் அரக்கனாக்கப் பட்டான், கோவிலுக்கு ஓர் உருத் தேவை என்பதற்காக, கொற்றவன் மகனாக மட்டுமே குறிக்கப்பட வேண்டிய இராமன் கையில், மகத்துவம் பொருந்திய கோதண்டத்தையும், இராம தூதனின் வாலுக்கு நினைத்த அளவில் நீண்டு வளரக்கூடிய மகிமையையும், கவி கற்பித்துக் கொண்டார். வாலும் வில்லும், வணக்கத்துக் குரிய பொருள்களாக்கப் படவே, தோள்வலியும் மனவலியும் படைத்த ஒரு மன்னன், மிலேச்சனாக்கப்பட்டான். இராமனுக்குச் செந்தாமரைக்கண் அமைத்தார் கவி; எனவே, இராவணன் கண்கள் செந்தழலை உமிழ்ந்தன என்று தீட்டலானார். அவருடைய நோக்கம், இராமனைத் தேவனாக்கவேண்டும் என்பது. அதற் கேற்றபடி கதை புனைந்தார்.

   இராவணகாவியம், முன்னாள் கவி, தம் நோக்கத்துக்காக, இராவணன் மீது ஏற்றிய இழி குணங்களையும், கொடுஞ் செயல்களையும் களைந்தெறியவும், இராவணனுடைய தூய்மைக்கு ஆதாரமான பல புகலவும், அஃதே போல, இராமனுடைய குணம், செயல் ஆகியவற்றிலே காணக் கிடைக்கும் தவறுகளைத் தெளிவு படுத்தவும் தோன்றிய நூலாகும். இராமன் கோயில் எங்கும் காணப்படும் இக்காலத்திலே, இம்முயற்சியில் ஈடுபட “நெஞ்சழுத்தமும்” அதிகம் வேண்டுமல்லவா? அஃது ஆசிரியருக்கு அமைந்திருக்கிறது. எங்ஙனம் எனில், அவர் முன்னாள் கவிபோல ஆரியரின் போற்றுதல், அரசர்களின் மாலை மரியாதை ஆகிய வற்றினைப் பெறும் எண்ணம் கொள்ளாமல், மக்கள் மன்றத்திற்கு, மனதிற்பட்ட உண்மையை எடுத்துரைப்பதே தமிழன் மாண்பு என்ற கொள்கையினராகலாம், அவர் தன்மான இயக்கத்தவர். எனவே, தகுமா ? முறையா? ஏற்றதா? என்ற கேள்விகளை அல்ல, சொல்லித்தீர வேண்டும்-உண்மை வெல்லும்-இன்று அல்லது நாளை என்ற உறுதியைத் துணை கொண்டு இந்நூலைச் செய்துள்ளார்.

   இராமனும் இராவணனும்-உண்மை உருவங்களா? வரலாற்றுக் காலத்தவரா? அல்ல கற்பனைகள், இதனைக் கூறத் தன்மான இயக்கத்தார் தயங்குவதில்லை. ஆனால்,

அவர் தம் கேள்விகட்குத் தக்கவிடையிறுக்க முடியாத நேரத்தில் மட்டுமே, செந்தமிழை வாணிகம் செய்வோர், இரமாயணம் ஓர் கற்பனைக் கதை என்றுரைப்பரே யொழிய, மற்றைப்போதினில், இராமனை நிசப் புருசனாகவே எண்ணுவர்-மதிப்பர்-வணங்குவர். ஆராய்ச்சிக் கூடத்தில் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பசனை மனப்பான்மை குறையும். மற்றப் போதெல்லாம் அவர்கள் இராமதாசர்களே! தன்மான இயக்கத்தவர்-இராவண தாசர்களல்லர்! இராவணனுக்குக் கோயில் கட்டிக் கும்பாபிசேகம் செய்வித்துப் பூசாரிகளாக வேண்டும் என்பதற்காக அல்ல இக்காவியம் புனைந்தது. பழி சுமத்தினரே பண்டைக் கவிஞர்கள் இராவணன் மீது, இது முறையல்லவே, துருவிப் பார்க்குங்கால், விசயம் முற்றிலும் வேறாகவேயன்றோ உளது என்று எண்ணித் தீட்டியதே இந்த ஏடு.  இராமதாசர்களுக்கு இராவணதாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல இந்நூல். இராமதாசர்களுக்கு, தன்மானத் தமிழர் தரும், மயக்க நீக்கு மருந்து இது. “தாசர் நிலை கூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்கு வதற்கே பயன்படும் நண்பா!” என்று அறிவுறுத்தவே இந்நூல் வெளிவந்துளது.    இராமாயணம் தீட்டப்பட்ட காலம், இந்தப் பரந்த பூபாகத்திலே இரு வேறு கலாச்சாரங்கள் மோதத் தொடங்கிய நேரம். இது பண்பாடு, மக்கள் உளநூல், நாட்டுநிலை அறிவோர், அறிந்தோர் கண்ட உண்மை. திராவிட இன மக்களின் எழில் மிக்க வாழ்க்கையிலே, ஆரிய இனக்கலாச்சாரம் தூவப்பட்டது என்பதை மறுப்பார் எவருமிலை. நாம், நமது கருத்துக்கு மாறானவர்கள், இருசாராரும் இதனில் மாறுபட்டோ மில்லை. ஏனெனில், இது மறைக்க முடியாத உண்மையாகி விட்டது. திராவிடம்-ஆரியம் எனும் இருவேறு பண்பாடுகள் இருந்தன-கலந்தன. இதனை அவர்களும் கூறுகின்றனர். எது திராவிடம், எது ஆரியம் என்று பிரித்துக்காட்டக் கூடாதவாறு கலந்துவிட்டது, எனறு முறுவலுடன் கூறுவர், பிரித்துக் கூறுவர். பிரித்துக் கூறக்கூடாது என்ற ஆர்வம் அவர்களுக்கு இருப்பது மட்டுமல்ல, அவர் தம் ஆராய்ச்சியாலும் தெரிவது. பிற்காலத்தில் பிரிக்கக்கூடாதவாறு. ‘சருவ சாக்கிரதையாக,’ மிகத் திறமையுடன் அந்நாளிலே, ஆரியத்தைத் திராவிடத்தில் குழைத்திருக்றார்கள், என்ற உண்மையும் தெற்றென விளங்குகிறது. கண்டு பிடிக்கவே முடியாத களவு! வெளிக்குத் தெரியாமல் நடைபெறும் விபசாரம்! ஓசைப்படாமல் கடிக்கும் நாகம்!-இவைபோல் இஃது பிரிக்கவே முடியாதபடி கலந்து போயிருக்கக் கூடும்! இஃதோ புதை பொருள் தோண்டப்படும் காலம்! மகஞ்சதாரோக்கள் காணப்படும் காலம்! மனித அறிவுக்கு எட்டாதது என்று எண்ணப்பட்ட எண்ணற்ற விசயங்களை எளிதில் அறியக்கூடிய வழிவகை கண்ட காலம். எனவே தான், எஃது ஆரியம், எது திராவிடம் என்று பிரித்துக் காட்டக்கூட முடியாத அளவு கலந்துபோய்விட்டது என்று கூறப்படும், தன்மையை, மாற்றிட முடிகிறது. மாற்றாரின் கோபத்துக்குக் காரணம் அதுவே. எவ்வளவு முன்னேற்பாடாக, திராவிடக் கலையினைச் சிதைத்தும் குறைத்தும், ஆரியத்தை அத்துடன் இணைத்தும், இழைத்ததும் ஒட்டியும் கட்டியும், பூசியும் தூவியும் பலவகையாலும் பலகாலமாகப் பாடுபட்டுக் கலந்தும், இன்று இந்தப் “பாவிகள்” எப்படியோ துப்புக் கண்டுபிடித்து, துருவித் துருவி பார்த்துச் சலித்தும் புடைத்தும் புடம்போட்டும் பார்த்து, இதோ ஆரியம், இதோ திராவிடம், இன்னது இன்ன அளவு உள்ளது என்று பிரித்துக் காட்டுகின்றனரே, அந்த நாள் தொட்டு நாம் செய்த முயற்சிக்கு இந்நாள் வந்ததே விபத்து என்றெண்ணிக் கவலைப்படுகின்றனர்; அவர்கள் கவலைப்படுகிறார்களே என்பதற்காகக் காலவேகம், வேலை நிறுத்தம் செய்யுமா! தடையும் எதிர்ப்புப் படையும், அந்த வேகத்தை அதிகப்படுத்துகிறது.  இராவண காவியத்தை இந்த மன நிலையின் கனியெனக் கொள்ளவேண்டும். இதுவும், அந்நாள் இராமாயணம் போல, கலைப்போர் முரசுதான்! இரண்டும் கற்பனைகளே! முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது, இராவணனைத் தேவனாக்கவுமல்ல. தமிழனாக்க! அதாவது வீரனாக்க ! முன்னதற்குக் கவி, வானையும் வானிலுறைவோரையும் துணை கொள்ள நேரிட்டது. இந்நூலுக்கு அஃது தேவையில்லை, முன்னூலில் புதைந்துள்ளவற்றைக் கொண்டே, இராவணனின் உருவம் இத்தன்மையது என்று எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். சம்பராசுரயுத்தம் என்று முன்னூல் கூறுகிறது-அசுரன் அவன் என்று பயங் கட்டுகிறது. இராவண காவியத்திலே, சம்பரன், அசுரனல்ல-பாண்டியன்! எதைக்கொண்டு இம் முடிவு கட்டுகிறார்? முன்நூலிலே சம்பராசுரன், மீனக்கொடியோன் என்று குறிக்கப்பட்டிருக்கிறது; ஆக, மீனக்கொடி பாண்டியனுக்குரியது! எனவே சம்பரன் அசுரனென்று ஆரியரால் நிந்திக்கப்பட்ட பாண்டிய மன்னனாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு கட்டுகிறது. இஃதே போலவே, இந்நூலின் கண் காணப்படும் பல்வேறு நிகழ்ச்சிகட்கும் ஆதாரம், இராமாயணத்திலிருந்தே சலித்து எடுக்கப்பட்டவையே யாகும்.  இராவண காவியத்திலிருந்து தப்ப வேண்டுமென்று விரும்பும், ஆரியர்க்கும் ஆரிய நேசர்கட்கும், ஒரே ஒரு வழிதான் உண்டு; இராமாயணமே பொய்க்கதை, அதனை நாங்கள் ஏற்கோம் என்று அறிவித்துவிடுவது தான். வேறு மார்க்கம் இல்லை.  கதை கிடக்கட்டுமய்யா! காவிய ரசனை இருக்கிறதே, அது, கம்பனின் இராமாயணத்தில் பொங்கி வழிகிறதே, அதிருக்கட்டும் அச்சம் ஏன்? கொச்சைத் தமிழிலே, ஏதேதோ கூறிடுவோர் கூறட்டும். அழகு கவிதையில் ஆரிய இராமன் மிளிர்கிறான், என்று கூறுவதற்கும் இந்தப் பொல்லாத குழந்தை இடந்தரவில்லை! கூறவேண்டியதைக் காவியச் சுவை குறைவுபடா வண்ணம் கூறி விட்டிருக்கிறார். அங்கு ஆறு ஓடும் விதம் எவ்வளவு அழகு பட உளதோ, இங்கு முளது. அங்கு இயற்கைக்குத் தமிழ் ஆபரணம் பூட்டப்பட்டிருப்பது போலவே, இராவணகாவியத்திலும் பொலிவுறப் பூட்டப்பட்டுளது. அதிலாவது, தேவாம்சம் புகுந்து தமிழின் இனிமைக்கும் ஊறு தேடுகிறது; இதன் கண் அக்குறையும் கிடையாது. அது ஆரியங்கலந்த கடுந்தமிழில் புலவர்க்காக ஆக்கப்பட்டது. இது எளிய இனிய தனித்தமிழில் எல்லாத் தமிழ்மக்களுக்கும் இயற்றப்பட்டது. எடுத்துக்காட்டாகச் சில கூறுவோம்.        1.கதிரவன் தோற்றம்

அளித்தகை யில்லா வாற்ற லமைந்தவன் கொடுமை யஞ்சி

வெளிப்பட வரிதென் றுன்னி வேதனை யுழக்கும் வேலை,

களித்தவர் களிப்பு நீங்கக் காப்பவர் தம்மைக் கண்ணுற்

றொளித்தவர் வெளிப்பட்ட டன்னக் கதிரவ னுதயஞ் செய்தான்,”

   [கம்பராமாயணம்: அணிவகுப்புப் படலம், 24] [சூரியன், இராவணன் கொடுமைக்கு அஞ்சி வெளிவர முடியாமல் வருந்திக் கொண்டிருக்கும்போது, இராமன் படையைக் கண்டு வெளிப்பட்டான்.] “இருண்டபெ ரிருளை நீக்கி இளங்கதிர்ச் செல்வன், துப்பில்திரண்டுமே பொருது வென்று சென்றவர் போக, மண்ணில் புரண்டுமே யுயிரை நீத்துப் போனமா மறவர்க் கின்றோடிரண்டுநா ளாயிற் றென்ன எண்ணுவான் போல வந்தான்.”       [இராவணகாவியம்: இரண்டாம் போர்ப் படலம்-1]   [துப்பு-வலி. துப்பில் திரண்டு-வலிமிக்கு]          2.கதிரவன் மறைவு

தன் றனிப் புதல்வன், வென்றித் தசமுகன் முடியில் தைத்த மின் றளிர்த் தனைய பன்மா மணியினை வெளியிற் கண்டான், ஒன் றொழித் தொன்றா மென்றவ் வரக்கனும் ஒளிப்பான் போல          

வன் றனிக் குன்றுக் கப்பால் இரவியும் மறையப் போனான்,”

       [கம்பராமாயணம்: மகுடபங்கப் படலம்-41]   [சூரியன் மகனான சுக்ரீவன், இராவணனது மணிமுடியைச் சிதைக்க, இராவணன் அங்கு நின்று சென்றது போல, மகன் வென்றிகண்ட மகிழ்வால் சூரியனும் மறைந்து சென்றான்.]

“குருதி யாடிக் குவிபிணக் காடணர்

பரவை போலப் படர்செங் களத்தினை

பரிதி காணப் படாதெனச் செல்லவே

இரவு வந்த தினுங்கொலு வேனெனா.”

     [இராவணகாவியம்: முதற்போர்ப்படலம்-77]   [அணர்தல்-மேல் நோக்கி எழுதல். பரவை – கடல்.]  விரிக்கிற் பெருகும்! பெருங்காப்பியத்திற்குள்ள இலக்கண முறை சிறக்கச் செய்துள்ளார். கவிச்சுவை, ஓசை, உவமைகள், அணிகள், அழகுடன் அமைந்துள்ளன. அகம் புற இலக்கணங்களில் கூறப்படும் களவு, கற்பு, போர் முறை, வீரம் முதலியவற்றிற்கோர் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றது. எனவே சிறந்ததோர் காவியமாக அமைந்துள்ள இராவணகாவியம் தமிழின் இனிமை கண்டு சொக்கு வோருக்கு, விருந்தாக அமையுந்தகைமைத்து.  இராமாயணம், ஆரிய ஆதிக்கத்துக்குப் பயன் பட்டது மறுக்கொணாத உண்மை. பண்டித சவகர் தம் திருமகளாருக்குத் தீட்டிய திருமுகத்திலேயும் இதனைக் குறித்தார். நோக்கமே அந்நூலுக்கு அது தான்.  தோழர் புலவர் குழந்தை, தமிழர் – தமிழ்இனம் விழிப்புற்று வீறு கொண்டு, விடுதலை பெற்று; வீரமக்களாய், தன்னாட்சித் தனியரசுரிமையுடன் வாழவேண்டும் என்ற நோக்குடையார். எனவே, அவர் தமது அறிவுத்திறனை, ஆராய்ச்சி அனுபவத்தை, தமிழை, இந்த நோக்கத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். காவியத்திலே, தமிழ்நாடு, தமிழ், தமிழர் தன்மை , ஆரியர் வருகை, அவரைத் தமிழர் ஆதரித்தமை, ஆரியரின் உட்கருத்து. அவர் தம் உளவு முறை, கெடு நினைப்பு, தீய செயல் ஆகியவற்றினை விரித்துரைத்திருக்கிறார்.  சுருங்கக் கூறுமிடத்து, இந்நூல், பழமைக்குப் பயணச் சீட்டு, புதுமைக்கு நுழைவுச் சீட்டு, தன்மான இயக்கத்தார், தமிழ்ப்பகைவர்கள், காவியமறியாதார், கலையுணர்வில்லாதார் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம். தமிழ் மறுமலர்ச்சியின் தலை சிறந்த நறுமலர். நெடுநாள் ஆராய்ச்சியும், நுண்ணிய புலமையும், இனப்பற்றும் ஒருங்கமைந்த ஓவியம். தமிழரின் புதுவாழ்வுக்கான போர் முரசு! காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்திவிட்டோம். எனவே இது அழிந்துபடாது என்று இறுமாந்திருப்போருக்கு ஓர் அறை கூவல். தமிழருக்கு உண்மையை உணருமாறு கூறும் ஓர் அன்பழைப்பு! தமிழரசுக்குக் கால்கோள்! விடுதலைக் கீதம்!  இவ்வரிய நூலை, மிகச் சிரமப்பட்டு, தமிழரின் தன்மானம் தழைக்க வேண்டும் என்ற நோக்குடன் எழுதியுள்ளமைக்கு, என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதுடன்; நந்தமிழ் மக்கள் இதற்குப் பேராதரவு தருவர் என்று அவர்க்கு உறுதி கூறுகிறேன். தமிழராகிய நீவிர், உமக்கென ஆக்கப்பட்ட இத்தனித் தமிழ்க் காவியத்தைப் போற்றியாதரிப்பீர் என்ற நம்பிக்கையை ஈடேற்றி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.                 

 

  அன்பன்,                

அண்ணாத்துரை,

இராவண காவியம், 1946