தலைப்பு-மொழிமானக்காவலர் தமிழமல்லன் - thalaippu_mozhimaanakaavalar_thamizhamallan

மொழிமானக் காவலர் தமிழமல்லன்

தமிழுணர்வு குன்றாத தகையாளர்

தன்மானம் நின்றோங்கும் நெறியாளர்

உமியாக அயற்சொற்கள் கலப்பதையே

உரக்க எதிர்க்கின்ற வீராளர்

மல்லனுடை பாக்கள் என்றால்

அனல்பறக்கும்

நல்லொழுக்கம் கருத்துவளம்

அணிவகுக்கும்

கன்னலென தேன்பாக்கள்

கரும்பினிக்கும்

நன்னெறியில் பிறழ்வோரை

சுட்டெரிக்கும்

மின்சாரம் பாய்ந்ததுபோல்

வீச்சிருக்கும்

தென்னிலங்கை மண்பெருமை

மூச்சிருக்கும்

மண்மானம் மொழிமானம்

காத்திருக்கும்

எதுகையும் மோனையும்

எழுந்துநிற்கும்

எழுதென்று உவமையெலாம்

ஏங்கிநிற்கும்

தொடைவந்து தோள்சாய்ந்து

காத்திருக்கும்

தோதான இடம்கேட்டு

பார்த்திருக்கும்

படையெடுத்துச் சொல்லெலாம்

படியிருக்கும்

மடைதிறந்த வெள்ளம்போல்

கவிசிறக்கும்

பாவேந்தர் புகழ்பரப்பும் பண்பாளர்

பாடாற்றி தமிழ்காக்கும் அன்பாளர்

தூவலிலே துளிகலப்பும் இல்லாமல்

தூயதமிழ் வளர்க்கின்ற தாளாளர்

பகுத்தறிவு பரப்பிடுவார் இதழ்வழியே

பண்ணித்தமிழ் ஏசிடுவார் உரையினிலே

வகுத்தநெறி வழுவாமல் நடந்திடுவார்

வாய்திறந்தால்  தமிழொன்றே பேசிடுவார்

முழக்கம்

முழக்கம் கையில் நான்பெற்றேன்

முழுதாயப் படித்துத் தெம்புற்றேன்

வழக்காய் செய்யுள் செய்யாமல்

வரம்பை உடைத்த கவிகற்றேன்

இழுக்கை இகழ்ந்த திறம்கண்டேன்

ஈழம் போற்றும் விதம் கண்டேன்

எழுச்சி பொங்கும் பாக்களிலே

எள்ளல் துள்ளல் யான்கண்டேன்

தனித்தமிழே பாக்களிலே மிளிர்கிறது

தன்மானம் ஒன்றேதான் ஒளிர்கிறது

கனிச்சுவையாய்ப் பாட்டுவளம் இனிக்கிறது

கயமைகளைத் தீயிட்டு எரிக்கிறது

நடப்புகளை நன்றாக ஆய்கிறது

நரித்தனத்தை வீரோடு எதிர்க்கிறது

இடமறிந்து கொள்கைகளை விதைக்கிறது

இன்பத்தமிழ் சிறந்திடவே எழுகிறது

கையில் மல்லன் பாட்டோடு

காணும் இளைஞர் கூட்டத்தை

மெய்யாய்க் காண்போம் பின்னாளில்

மேன்மை எய்தும் தமிழினமே

ஐயா வாழ்க நீடூழி!

அடுத்தும் படைப்பீர் பலநூல்கள்

கையைக் கூப்பி வாழ்த்துகிறேன்

கன்னித் தமிழ்போல் வாழ்ந்திடுக!

 மு.பாலசுப்பிரமணியன்

செயலர்,

புதுவைத் தமிழ்ச் சங்கம்