thirukkural02
இம்மை மறுமையின் – பயன்கள்
எவருமே யடையச்
செம்மை நெறியினை – விளக்கும்
தெய்வ நூல் செய்தோன்.

வழுக்கள் போக்க வந்தோன் – நல்ல
வாழ்வை ஆக்க வந்தோன்;
ஒழுக்கம் காட்ட வந்தோன் – தமிழுக்கு
உயிரை ஊட்ட வந்தோன்.

தொன்மை நூல்களெல்லாம் – நன்கு
துருவி ஆராய்ந்து,
நன்மை தீமைகள் வகுத்த
நாவலர் கோமான்.

எதை மறந்தாலும் – உள்ளம்
என்றுமே மறவாப்
பொதுமறை தந்த – தேவன்
பொய் சொல்லாப் புலவன்.

அறிவின் எல்லை கண்டோன் – உலகை
அளந்து கணக்கிட்டோன்;
தறியில் ஆடை நெய்தோன் தமிழில்
தரும நூல் நூற்றோன்.

சாதி ஒன் றேயாம் – தமிழர்
சமயம் ஒன்றேயாம்
நீதி ஒன்றேயாம் – என்று
நிலை நிறுத்தி நின்றோன்!

 – கவிமணி தேசிக விநாயகம் (பிள்ளை)

kavimani-thesiyavinakam01