bharathidasan02கத்து கடல்சூழ் புதுவைக் கருங்குயிலே!

புத்தமுதப் பாடற் பொழிவாய் நீ – இத்தரையில்

மொத்த புகழ் ஒத்தவிசை எத்தனையோ அத்தனையும்

நத்திச் சுவைத்தாய் நன்று.

பாடும் இசைக்குயிலே. பாரதி தாசனே!

தேடு சுவைபடைத்த தேன்பொழிலே! கூடு

துறந்து தமிழ்ச்சோலை சுற்றறுத் தேனோ

பறந்தாய் மறைந்தாய் பகர்!

கானக்குயிலே! கனித்தமிழின் இன்சுவையே

மோனப் பெருந்துயிலின் மூழ்கியதேன்? -ஞானத்

திருவிளக்கே பாவுலகில் தேடினும் உன்போல்

ஒருவிளக் குண்டோவுரை!

பாட்டுத் திறத்தாலே பைந்தமிழைக் காக்கும் – மாங்

காட்டுக் குயிலரசே! காதலினால் – நாட்டிலுறு

கேடுகளைப் போக்கக் கிளர்ந்தெழும் உன்குரலைக்

கூடுமோ கேட்க இனிக் கூறு!

புரட்சிக் குயிலே! புவிமாந்தர் கொள்ளும்

மருட்சிதமைத் தீர்க்கும் மருந்தே – இருட்டிலா

விண்ணிற் பறந்ததனால் வெம்புமனமாந்தர் தம்

கண்ணீர்ப் பெருக்கினைக் காண்!

 

குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964