(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 33 : தொடர்ச்சி)

பூங்கொடி

அயரினும் இவ்வுணா அருந்தேன் என்றனன்;
அடித்தனர் அவனை அருங்கேன் என்றனன்;
அடித்தனர் அவனை அஞ்சேன் என்றனன்;
அடித்தனர் அடித்தனர் அடித்தே கொன்றனர்!

 முத்தக் கூத்தன் கொலை

அந்தோ அந்தோ ஆவி துறந்தனன்; 140

நொந்த அப்பிணத்தை மூடிய கல்லறை
சுடுகாட் டாங்கண் தோன்றும்; அதுதான்
உடுவான் நிலவால் ஒளிபெற் றிலங்கும்,
சித்தம் கலங்கேல், அதன்முன் செல்லின்

முத்தக் கூத்தன் முழுவலி வாய்க்கும்’ என் 145
றுரைத்ததன் பின்னர் ஒள்ளிழை மேலும்

            பூங்கொடி கடல்நகர் செல்ல இசைதல்

‘இசை, துறை வல்லாய் இரைகடல் நாப்பண்
கடல்நகர் என்னும் ஒருநகர் உளதவண்
மடமையில் மூழ்கிய மக்கள் மலிந்துளார்;
அப்பெரும் மடமை அகற்றுதல் வேண்டும் 150

ஒப்பிலா நீயும் உடன்வர இசைவு
தருதி என்றனள் தாமரைக் கண்ணி,
உவப்புடன் பூங்கொடி ஒப்புதல் தந்து
சவக்குழிக் கல்லறை சார்வுறும் வழியே
அல்லிபின் தொடர ஏகினள் அவளே. 155
(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி