தலைப்பு-குதித்தெழுந்துவாருங்கள் :thalaippu_kuthithezhundhu_ vaarungal

குதித்தெழுந்து வாருங்கள் !

 

படித்தவரும் குடிக்கின்றார் பாமரரும் குடிக்கின்றார்

அடுத்துவரும் விளைவுபற்றி ஆருமே மனத்திலெண்ணார்

குடிபற்றித் தெரிந்திருந்தும் குடியொழிக்க மறுக்கின்றார்

அடியோடு குடியொழித்தால் அனைவர்க்கும் ஆனந்தமே !

 

குடித்திவிடும் வேளையிலே குணமெல்லாம் மாறிவிடும்

அடித்துடைத்து அத்தனையும் அவர்நாசம் செய்திடுவார்

பிடித்தமுள்ளார் முன்னாலும் பேயாக மாறிடுவார்

எடுத்துரைக்கும் எச்சொல்லும் ஏறிவிடா அவர்களுக்கு !

 

அம்மாவை மதியார்கள் அப்பாவை மதியார்கள்

ஆர்வந்து நின்றிடினும் அவர்மதிக்க மாட்டார்கள்

என்னதான் செய்கின்றோம் என்பதையும் அறியாது

ஈனத்தனமாக எத்தனையோ செய்து நிற்பார் !

 

கொலைகூடச் செய்திடுவார் கொழுத்திநிற்பார் சொத்தையெலாம்

நிலைகெட்டுத் தடுமாறி    நீசராய்   மாறிடுவார்

வெறிமுறிந்த பின்னாலே விபரீதம் தனைப்பார்த்து

வேரொடிந்த மரமாகி விரக்தியிலே நின்றிடுவார் !

 

உழைக்கின்ற காசெல்லாம் ஒருசதமும் மிஞ்சாது

பிழைக்கின்ற பிழைப்பதனில் பெருங்குழப்பம் வந்துவிடும்

கிடைக்கின்ற நல்வாழ்வும் கீழ்நிலைக்கு வந்துவிடும்

நடைப்பிணமாய் ஆகியவர் நரகத்தைத் தொட்டுநிற்பர் !

 

நாட்டிலே குடியொழித்தால் நல்லதே நடக்குமென

ஏட்டிலே எழுதிவைத்த எழுத்தையெலாம் ஒதுக்கிவிட்டுக்

கூட்டமாய்க்  குடிகுடித்துக்  குவலயத்தை அழிப்பதனை

கூண்டோடு அழித்திடுவோம்  குதித்தெழுந்து வாருங்கள் !

 

வள்ளுவர் பிறந்தமண்ணில் வகைவகையாய் குடியிருக்கு

மாசமண முனிவரெலாம் குடியொழிக்கு வகைசொன்னார்

தெள்ளுதமிழ் நூல்கள்பல குடியொழிக்கச் சொன்னாலும்

உள்ளமதில் கொள்ளாமல் உயிர்குடிக்கக் குடிக்கின்றார் !

 

அன்பை அறத்தை அகிம்சையை அழித்துநிற்கும்

அநியாயக்  குடிதன்னை அகற்றிடுவோம் வாருங்கள்

துன்பமெலாம் தந்துநிற்கும் துன்மார்க்கக் குடிதன்னை

துடைத்தொழிக்க  வாருங்கள் தூய்மையாய் வாழ்ந்திடுவோம் !

 

மெல்பேண் செயராமர்