தலைப்பு-தமிழ்நாடாளவேண்டும் : thalaippu_thamizhnaadaalavendum

உறுதி கொள்வீர்! – கவிஞர் முடியரசன்

முதலோடு முடிவில்லாப் பெருமை, நான்கு
மொழிபெற்றும் மூப்பில்லா இளமைத் தன்மை,
அதனோடு மிகுமினிமை, காலஞ் சொல்ல
அமையாத பழந்தொன்மை, தனித்தி யங்கி
உதவுநிலை, வளர்பண்பும், எளிமை, யாவும்
உயர்தனிச்செந் தமிழுக்கே உண்டாம்; மேலும்
புதுமைபெற முடிசூடி அரசு தாங்கப்
புலவரெலாம் இளைஞரெலாம் உறுதி கொள்வீர்!

தெலுங்குமொழி பிறமொழிகள் உயர்தல் காண்பார்
தேன்மொழியாம் தமிழ்மொழியை வாழ்க என்றால்
கலங்குகின்றார் ஒருசிலர்தாம்; உயிரா போகும்?
கலங்கற்க! தமிழ்வாழ்ந்தால் யாரும் வாழ்வர்;
புலங்கெட்டுப் போகாதீர்! ஆட்சி செய்யப்
புன்மொழிகள் வேண்டாதீர்! தமிழின் மானம்
நலங்கெட்டுப் போவதுவோ? தமிழே இந்த
நாடாள வேண்டுமென உறுதி கொள்வீர்!

-கவிஞர் முடியரசன்

kavignar-mudiyarasan02