தலைப்பு-நாடிவந்துநிற்குமன்றோ, செயராமசருமா :thalaippu_naadivanthu_nirukum_seyaramar_jeyuaram       

      நாடிவந்து நிற்குமன்றோ!

 

             நாநயம் இருந்துவிட்டால்

             நாணயம் நமக்குவரும்

             பேய்மனம் கொண்டுவிட்டால்

             பிணம்போல ஆகிடுவர்

             தூய்மையது மனமேறின்

             துட்டகுணம் மறைந்துவிடும்

             நாமென்றும் வாழ்வினிலே

             நாணயத்தைக் காத்திடுவோம் !

 

              மேடைகளில் முழங்கிடுவார்

              விதம்விதமாய் எழுதிடுவார்

              விவாதங்கள் வந்துவிட்டால்

              மேதையெனக் காட்டிடுவார்

              போதைபற்றி கதைசொல்வார்

              பொறுப்புபற்றி பலசொல்வார்

              போதையுடன் வீடுவந்து

              பொங்கிடுவார் வீட்டினிலே !

 

              அறவழியை விட்டுவிட்டால்

              அனைவர்க்கும் தீமையென்பார்

               அகிம்சைதனை அரவணைத்தல்

               அனைவர்க்கும் நன்மையென்பார்

               அன்புபாசம் யாவருக்கும்

               அத்திவாரம் தானென்பார்

                அசிங்கமுள்ள அத்தனையும்

               அரங்கேற்றம் செய்தும்வைப்பார் !

 

               வள்ளுவரை அருகழைப்பார்

               வாய்மைபற்றிப் பேசிடுவார்

               தெள்ளுதமிழ் தலைவனென்பார்

               தில்லுமுல்லு பலசெய்வார்

               உள்ளமெலாம் கள்ளமுடன்

               ஒழுக்கமின்றி அவரிருப்பார்

                நல்லதமிழ் காத்திடுவோம்

              நாட்டிலுள்ளோர் வாருமென்பார் !

 

              கண்ணகியைப் போற்றிடுவார்

              கற்புப்பற்றி நூல்செய்வார்

              எண்ணமெலாம் திருவருளே

              எனச்சொல்லி திருடிநிற்பார்

               தன்னைவிட மேதாவி

               தோன்றவில்லை எனவுரைப்பார்

               தலைதெறிக்கக் காரியங்கள் 

                சமத்தாகச் செய்துநிற்பார் !

 

               பெண்ணடிமை ஒழிவதற்குப்

               பரப்புரை செய்திடுவார்

               பெண்பித்து தலைக்கேறி

               பெண்ணைப் பிய்த்துஎறிந்திடுவார்

                மண்மீது போதையது

               மடிவதற்கு முழங்கிடுவார்

               மதுமீது அவர்தவழ்ந்து

               வந்துநிற்பார் மனைக்குள்ளே !

 

 

              வீண்வார்த்தை பேசாதீர்

              வீண்வாதம் புரியாதீர்

              மாண்புடனே பேசிடுவீர்

              மாண்புடனே நடந்திடுவீர் 

              தான்வாழும் சமுதாயம்

              தலைநிமிர வேண்டுமென்று

              தான்நினைத்து வாழ்பவரே

               தலைவனாய் உயர்ந்திடுவார் !

 

             உள்ளொன்றும் புறமொன்றும்

              உயர்வினுக்கு ஏற்றதல்ல

              உரைக்கின்ற வார்த்தையது

              உள்ளிருந்து வரவேண்டும்

              கள்ளமிலா உள்ளமொடு

              கருணையுடன் வாழ்வதுதான்

              நல்லதொரு வாழ்வாக

               நமக்கெல்லாம் அமைந்துவிடும் !

 

               நாணயமாய் வாழ்ந்துவிட்டால்

               நாட்டுக்கே நன்மையன்றோ

                நாட்டுக்கே இப்போது

                நாணயமே தேவையன்றோ 

                நாநயத்தைக் காப்பாற்றி

                நாணயமாய் நாமிருந்தால்

                நன்மையெலாம் எமைநோக்கி

                நாடிவந்து நிற்குமன்றோ !

 மெல்பேண் செயராமர்,  அவுத்திரேலியா

தரவு : முதுவை இதாயத்து