(பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்- தொடர்ச்சி)

பூங்கொடி

உலுத்தர் தொல்லை

கடைத்தெரு வழியே காரிகை தனியாய்

ஏகின் சிற்றினம் எதம் விளைக்கும் ;    50

நாகிளம் பருவ நல்லியல் மாதர்

உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின்

நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே

ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர்

மக்கட் பண்பு மங்குதல் கண்டோம்           55

தெக்கணம் இப்படித் தேய்வது நன்றாே ?

அல்லியின் வரலாறு

வளநகர் ஈங்குநான் வந்தது கேளாய்

களமர் கெழுமிய கண்கவர் பொழில்சூழ்

மயில்நகர் எனும்பேர் மருவிய நகருள்

கோசிகப் பேரினன் குலக்கொடி யாவேன்;    60

மாசி மாமகக் தண்புனல் ஆடும்

ஆசை துரப்ப ஆணை கோரினேன்;

தந்தை தடுத்தும் தவிரரும் ஆர்வம்

உந்த அவருரை உதறித் தனிமை

அஞ்சிலேன் ஆய்விலா நெஞ்சினேன் சென்றேன்; 65
ஒருமகள் ஆதலின் உருத்துத் தடுக்கா
திருந்தனர், ஆங்கோர் இடுக்கண் நேர்ந்தது;

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி