இனி வேண்டா எதிர்மறை எண்ணங்கள்
இனி வேண்டா எதிர்மறை எண்ணங்கள்
– சு.கிருட்டிணன்
காட்சி – 1
சேரன் : டேய்! சேந்தன் என்ன இது புது மிதிவண்டியா? அருமையாக இருக்கிறதே! எப்பொழுது வாங்கினாய்?
சேந்தன் :நேற்றைக்குத்தான்! எங்க மாமா எனக்குப் பிறந்த நாள் பரிசாக
வாங்கித் தந்திருக்கிறார்.
சேரன் : டேய்! உண்மையிலே இது மிதிவண்டி மாதிரியே இல்லைடா. பொறிஉருளி மாதிரியே இருக்கிறது.
சேந்தன் : ஆமாம்டா.. இதில் பற்பொறி(gear) இருக்கிறது.நாம் கொஞ்ச நேரம் அழுத்தி விட்டுப் பற்பொறியைப் போட்டு விட்டுவிட்டால் தன்னால் போய்க்கொண்டே இருக்கும்..
சேரன் : ஐய்! ஐய்! அப்படியா! இது என்னடா..
சேந்தன் : அது நிறுத்தி(break)டா. நிறுத்திக் கலம் (break drum)உள்ளது! மிகவும் பாதுகாப்பானது!
சேரன் : மிகவும் நன்றாக உள்ளதடா!
சேந்தன் : அப்படியா! நன்றிடா! நான் வருகிறேன்!
காட்சி – 2
(சேந்தன் புது மிதிவண்டியில் வந்து கொண்டிருக்கிறான். சேரன் எதிர்ப்படுகிறான்.)
சேரன் : சேந்தன்..சேந்தன்.. ஒரு நிமிடம் நில்லுடா..
சேந்தன் : (மிதிவண்டியை நிறுத்தி விட்டு) என்னடா சொல்லு..
சேரன் : இல்லைடா..ஓர் அவசரம்.. கொஞ்சம் மிதிவண்டியைக் கொடுடா.. வேகமாகப் போய்விட்டு உடனே தந்துவிடுகிறனே்!
சேந்தன் : ஊகும். புது மிதிவண்டிடா.. யாருக்கும் கொடுக்க மாட்டேன்.. போடா…
சேரன் : எனக்கும் தெரியும்டா.. ஆனால் மிகவும் அவசரம்டா.. அப்பா அலுவலகத்திற்குக் கிளம்பும் அவசரத்தில் பணப்பையையே மறந்து விட்டுப் போய் விட்டார்டா.. பேருந்து வந்து விடும்.. அதில் ஏறுவதற்கு முன் போக வேண்டும்.
சேந்தன் : எதுவாகயிருந்தாலும் முடியாதுடா.. நீ பாட்டுக்கு அவசரமாகப் போவாய்.. எதிலாவது மோதி விட்டாய் என்றால்..? அதெல்லாம் முடியாதுடா..
சேரன் : (வாடிய முகத்துடன்) சரிடா சேந்தன். நான் ஓடிப்போய் கொடுத்து
விடுகிறேன்..
காட்சி – 3
(சேந்தன், சேரன் ஓடிப்போவதைப் பார்த்துக் கொண்டே மிதிவண்டியைக் கிளப்புகிறான். பாடிக்கொண்டே மிதிவண்டியை வேகமாக ஓட்டுகிறான்.)
வழிப்போக்கன் : தம்பி! பார்த்துப் போப்பா.. கண்ணை மூடிக் கொண்டு போகிறாய்!.. ஏதாவது நேர்ச்சியில் (accident)சிக்கிக் கொள்ளப் போகிறாய்!
சேந்தன் : அடப் போய்யா! உன் வேலையப் பாரு.. புது மிதிவண்டி… நிறுத்தி
எல்லாம் கச்சிதமாகப் பிடிக்கும்.. நீ பாட்டுக்குப் போப்பா..
வழிப்போக்கன் : சரிடா தம்பி.. சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்.. அப்புறம் உன்விருப்பம். என்றாலும் கவனமாகப் போப்பா..
காட்சி – 4
(சேந்தன் மிதிவண்டியுடன் கீழே விழுந்து கிடக்கிறான். சேரனும் வேறு சிலரும் சேகரைச் சூழ்ந்து நிற்கின்றனர்.)
சேரன் : என்னடா சேந்தன்.. என்ன ஆயிற்று?
சேந்தன் : ஐயோ.. வலி கொல்கிறதே.. இந்தப் பொறிஉருளியில் வந்த ஆசாமி
வேகமாக வந்து எம் மேலே மோதி இப்படி ஆய்விட்டதடா..
சேரன் : ஏய்யா.. பார்த்து வரக்கூடாது.. சின்னப்பிள்ளைகள் வருகிற இடம்.. வீடுகள் இருக்கிற இடத்துல இப்படி வேகமாக வரலாமா? (அடிக்கப் போகிறான்)
சேந்தன் : (மெதுவாக எழுந்து கொண்டே) சேரன்! என்னோட மிதிவண்டியைப்
பாருடா.. இப்படி ஆய்விட்டது…(அழுகிறான்)
சேரன் : சரிடா விடு. உனக்கு ஒன்றும் ஆகவில்லையே.. சின்னக் காயத்தோடு தப்பினாய்!
வா.. வா.. அந்த ஆளைப் பிடித்து மிதிவண்டியைச் சரி செய்து
வாங்கிக் கொள்ளலாம்..
காட்சி – 5
சேந்தன் : டேய்! சேரன்! நீ கேட்ட பொழுதே உன்கிட்ட மிதிவண்டியைக்
கொடுத்திருந்தால் இப்படி ஆகியிருக்குமா? எம்மேலதான் தப்பு.. நீ
மோதிடுவாய் என்று சொன்னேன்.. அது நானே மோதும்படி ஆய்விட்டது..
சேரன் : டேய்! அப்படி எல்லாம் பேசாதே.. ஏதோ ஆய்விட்டது.. அப்படியே
விட்டு விடுடா..
சேந்தன் : இல்லை சேரா! என்னுடைய எதிர்மறை எண்ணம்தான் இந்த
விளைவை ஏற்படுத்தி இருக்கிறது.. உனக்கு மிதிவண்டி கொடுக்க
மனமில்லாமல் நீ மோதி விடுவாய் என்று சொன்னேன். ஆனால் பார்..
நானே மோதி விட்டேன்..
சேரன் : டேய்.. டேய்.. விடுடா.. பெரிய இவன் மாதிரி.. தத்துவமெல்லாம்
பேசிக் கொண்டு.. அங்கே பார்! உங்கள் அப்பாவே வருகிறார்!
காட்சி – 6
சேகரின் அப்பா : சேந்தன்.. மிக நன்றாகச் சொன்னாய்.. எதிர்மறை எண்ணங்கள்
எப்பொழுதும் வரக்கூடாது. நல்லதையே நினைக்க வேண்டும்..
நல்லதையே சொல்ல வேண்டும்.. நல்லதையே செய்ய
வேண்டும்..
சேரன் : மாமா.. மாமா.. நீஙக வேற.. சேந்தன் எப்பவும் இப்படி செய்யவே
மாட்டான்.. ஏதோ புது மிதிவண்டி… அதனால்…
அப்பா : அப்படியில்லை சேரா! … ஒருவேளை உன்னிடம் அவன் மிதிவண்டியை
எதிர்மறையாக எண்ணாமல் கொடுத்திருந்தால் இந்த நேர்ச்சியே
நடக்காமல் போயிருக்கலாம்.. எனவே சேரா! சேந்தன்! உங்கள்
இருவருக்கும் இப்பொழுது மட்டுமல்ல.. இனி எப்பொழுதும் வேண்டா
எதிர்மறை எண்ணங்கள்…
(நிறைவு)
Leave a Reply