paavalar vaiyavan01

ஆய்ந்து படி
அன்னைத்தமிழ் ஆய்ந்து படி
அதனையும் ஆழ்ந்து படி

பார்மொழியாம் தமிழ் படி
பழகுதமிழ் நீ படி
யார்மொழியின் நூலெனினும்
பசுந்தமிழில் பாயும்படி

புதைபடும் தமிழ்மடி
பொலிவினைக் காணும்படி
புதுப்புது நூல்கள் படி
புரட்சிவர நீயும் படி

புகுந்திள நெஞ்சினிலே
புதுஒளி பாயும்படி
புனைந்துள நூலெதையும்
புரியும்படி தேடிப் படி
பகுத்திடும் நால்வருணம்
பாரினில் ஏன்இப்படி?
பகுத்தறி வாளர்களின்
பலவிதநூல் வாங்கிப் படி

கலைகளில் தமிழ் படி
கல்வியிலும் தமிழ் படி
அலைபடும் ஆலயத்தில்
ஆட்சியினில் தமிழைப் படி
திருமணம் தமிழ் படி
குடிபுக தமிழ் படி
நறுமண மானத்தமிழ்
மாண்புறவே தூக்கிப்பிடி
puthakambook01
மார்க்சுபெரி யாரைப் படி
மாவோஅம் பேத்கர் படி
மாவீரன் பகத்சிங் படி
மருதுதிப்பு வீரம் படி
பாவேந்தர் பாட்டுப் படி
பாவாணர் ஆய்வு படி
பாராண்ட தமிழுக்கொரு
பழிவராமல் தாங்கிப்பிடி

விழிகளில் தீப்பொறி
வெளிப்பட நீ படி
விழுந்தவர் எழுந்திடவே
விளங்கிவரும் நூலைப் படி
மொழிகளில் தாய்மொழி
முகிழ்ந்திட நீ படி
பழிசொலும் மூடர்களின்
பகைமுடிக்க வாளைப்பிடி!

( பாவேந்தரின் “நூலைப் படி-சங்கத்தமிழ் நூலைப் படி” என்ற மெட்டில் எழுதினேன்.)

நன்றி: முகநூல்