60omni-bus01

தேனிமாவட்டத்தில் இரவு, பகலாக இயங்கும்

தனியார் பேருந்துகள்

நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்

  தேனி மாவட்டத்தில் இரவு, பகலாக தனியார் பேருந்துகள் இயங்குவதால் மோதல் நேர்ச்சி ஏற்படும் கண்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், தேனி, கூடலூர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னைக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் புறப்பட்டு தேவதானப்பட்டியில் உணவருந்த நிறுத்திவிட்டு அதன்பின்னர் புறப்படுகின்றன. புறப்பட்ட பின்னர் வேறு எங்கும் நிற்காமல் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்தில் நிறுத்தப்படுகின்றன.

  மேலும் இப்பகுதியில் விளையும், மல்லி, புதினா, தக்காளி, திராட்சை முதலான வேளாண் பொருட்களும், சில பேருந்துகளில் சிப்பஅனுப்புகைப் பணிகளும் இயங்குகிறது. இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் முதல் நாள் இரவு சென்னையில் புறப்பட்டால் மறுநாள் காலையில் தேனிப்பகுதியை வந்தடையும். அதன்பின்னர் பேருந்தை நிறுத்திவிட்டு வண்டியில் ஏற்பட்ட பழுதுகள், வட்டை, நிறுத்தி போன்றவற்றைச் சரிசெய்து அன்று மாலைதான் சென்னைக்கு மீண்டும் திரும்பும். திருவிழாக் காலங்களில் சென்னையிலிருந்து புறப்படும் பேரூந்துகள் தேனிப் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு மறுபடியும் உடனே சென்னைக்குக் கிளம்புகின்றன. இவ்வாறு இரவு, பகலாக கண்விழித்து ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கிவருகிறார்கள். இதனால் பண்டிகைக் காலங்களில் ஏராளமான நேர்ச்சிகள் ஏற்படுகின்றன. எனவே வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தனியார் பேருந்துகளையும், ஓட்டுநர்களையும் ஆய்வு மேற்கொண்டு பேருந்துகளை இயக்க இசைவளிக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  இவ்வாறு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வதன் மூலம் நேர்ச்சிகளைத் தவிர்க்கலாம் எனவும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

உயிர்ப்பலிகளையும் உடைமை இழப்புகளையும் தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

60vaigai-aneesu