60PHC01

தேவதானப்பட்டி

தொடக்க நல்வாழ்வு நிலையத்திற்கு

மருத்துவர்கள் வராததால்

நோயாளிகள் அவதி

  தேவதானப்பட்டி, மேல்மங்கலம் முதலான தொடக்க நல்வாழ்வு நிலையங்களுக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

  பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், சில்வார்பட்டி, புல்லக்காபட்டி முதலான ஊர்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். தற்பொழுது பனிக் காலம் என்பதால், மாறிவரும் காலநிலையில் பலவிதமான தொற்று நோய்களுக்கும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர்.

 இதனை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் பத்து நாட்கள் வரை நோய் நீடிக்கிறது. உடனடி மருத்துவம் பெற தொடக்க நல்வாழ்வு நிலையத்திற்கு வந்தால் மருத்துவர்கள் இல்லாமல் அங்குள்ள செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்பப் பணியாளர்கள் எந்த நோய் இருந்தாலும் அனைத்திற்கும் ஒரே விதமாக மாத்திரைகளைக் கொடுக்கின்றனர். இதனால் நோய் நீங்காமல் பக்கவிளைவு ஏற்படுகிறது.

 இதனால் வத்தலக்குண்டு, பெரியகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர்.

  மேலும் மருத்துவர்கள், விடுமுறை நாட்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் மருத்துவமனைக்கு வராமல் தங்கள் சொந்தமருத்துவமனைக்குச் சென்றுவிடுகின்றனர்.

எனவே மாவட்ட நிருவாகம் தொடக்க நல்வாழ்வு நிலையங்களுக்கு மருத்துவர்ககள் வருகை புரிகிறார்களா என்பதைக் கண்காணித்து வராத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

60steth

60vaigai-aneesu