no-alcohol-madu vendaa01

பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மள்ளர்நாடு கோரிக்கை

  பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று மள்ளர்நாடு அமைப்பின் சார்பாக மாநில கொள்கைப் பரப்புச்செயலாளர் செய்தியாளர்களுக்குச் செவ்வி ஒன்றை அளித்தார். அச்செவ்வியில் பின்வருமாறு கூறினார்: – அறவழிப்போராட்டத்தின் வழியாகப் போராடி வந்த மதிப்பிற்குரிய சசிபெருமாள் மரணம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுபானக் கடைகளின் முன் குடிப்பவர்களின் ஒவ்வொரு காலிலும் மறுபயன் எதிர்பாராமல் விழுந்து குடிக்காதீர்கள் என்று வேண்டிக்கொண்டு கொடூரமான அரக்கனான மதுவுக்கு எதிராகப் போராடி வந்த அவரின் இழப்பு என்பது காந்தியக் கொள்கைகளுக்கு ஒரு கரும்புள்ளியாகவம் இறங்குமுகமாகவுமே பார்க்க வேண்டி உள்ளது.

  எந்த ஆயுதத்திற்கும் பயப்படாத பிரித்தானிய அரசுகூடப் பார்த்து பயந்து போன அறவழப்போராட்டத்தை இந்த இரசு கண்டும் காணாமல் இருப்பது மிகுந்த வருத்தம் கொள்ள வைக்கிறது. மதுவால் விபத்து-கொள்ளை-கற்பழிப்பு-கொலைகள்-இளம்கைம்பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-வரம்புமீறிய தகாத உறவுகள்-குழந்தைகள் பாலியல் வன்புணர்ச்சி -குழந்தைகள் மது அருந்துதல் எனத் தமிழக ஒழுகலாறே செல்லரித்துப் போன மரக்கட்டைபோல் ஆகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக வருங்காலத் தூண்கள் என்று சொல்லக்கூடிய மாணவ, மாணவியர்கள் சமுதாயமும் இந்த கொடிய நஞ்சான மது என்னும் மாயைக்குள் மூழ்கி வருவதைக் கண்கூடாகப் பார்த்தும் இந்த அரசு வருமானத்திற்காக மது மூலம் தமிழனின் மானத்தைக் காற்றில் ஏலம் போடுவதை நிறுத்திக் கொள்ளாதது வேதனயைாக உள்ளது.

  தமிழகத்தில் சில நல்ல உள்ளங்கள்-மகளிர்அமைப்புகள்-தன்னார்வச் சங்கங்கள்-சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து மதுவிற்கு எதிராகக் குரல் கொடுத்தும் அரசு அமைதி காப்பது தமிழ்நாட்டைச் சுடுகாடு ஆக்கவா அல்லது வருமானத்திற்காகவா? வருமானத்திற்கு என்றால் அரசுக்கு 1000 வழிகள் சொல்ல வல்லுநர்கள் இருக்கிறார்கள். பின் எதற்கு மதுக்கடைகள்? மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும், பொதுமக்கள் இறப்பார்கள் என்கிறார்கள். அப்படியானால் நாட்டில் மதுவிலக்கு காவல்துறை எதற்கு? அந்த துறையைக் கலைத்துவிடலாமே?. பூரண மதுவிலக்கு காலத்தில் 20 விழுக்காட்டினர் குடிப்பார்கள். ஆனால் இன்றைய நிலை என்ன? தமிழகத்தில் ஆண்-பெண்-குழந்தைகள்-மாணவ, மாணவியர் என்று 80 விழுக்காட்டினர் குடிக்கின்றனர். இதைவிடக் கொடுமை வேறு ஒன்றும் இல்லை.

  கள்ளச்சாராயத்திற்கு எதிராக இருக்கும் இரும்புச் சட்டங்களுடன் கடுமையான சட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டும். இரும்புக்கரம் கொண்டு கள்ளச் சாராய வசணிகர்களை அடக்கவேண்டும். தமிழகத்தில் உள்ள மாணவ-மாணவியரையும் இளைஞர்களையும் காக்கப் பொதுமக்கள் நலன் கருதித் தமிழக அரசு பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும். மக்கள் பல வடிவங்களில் இந்த அரசிடம் போராடி விட்டனர். கிடைத்த பலனோ சுழியம்தான்!

  காந்தியவாதி சசிபெருமாள் புதுவித ஆயுதமான தனது இன்னுயிரை தமிழக மக்களுக்காக ஒப்படைத்துள்ளார். எனவே பூரண மதுவிலக்கைத் தமிழக அரசு கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என மள்ளர் நாடு கட்சி வேண்டிக்கொள்கிறது என்று தெரிவித்தார்.

 vaikaianeesu-name