இராசபட்சவுக்குத் தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டித் தலைமையாளர் ஏமாற்றிவிட்டார் :

கண்டுபிடித்த கலைஞரின் காட்டம்

 

 

 

 

திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதி அவர்கள், இராசபட்சவுக்குத் தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டித் தலைமையாளர் ஏமாற்றிவிட்டதாக, மன்மோகன்சிங்கிற்கு எதிரான காட்டமான அறிக்கை விட்டுள்ளார்.

இது தொடர்பிலான அவர் அறிக்கை வருமாறு:-

கனடா, பிரிட்டன், மொரீசியசு, திரினிடாட்டு, ஆசுதிரேலியா போன்ற நாடுகளும், உலகத் தமிழர்களும் தெரிவித்த எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கையில்  பொதுவளஆய மாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டின் ஒரே சிறப்புஇராசபட்சவுக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலையும், இங்கிலாந்து தலைமையாளர் தாவீது கேமரூனுக்குக் கிடைத்த  பன்னாட்டுக் கவனமும் ஆகும்.

உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்கள் நெஞ்சங்களிலும் கேமரூன் இடம்பெற்றுவிட்டார். இந்தப் புகழும், பெருமையும்  தலைமையாளர் மன்மோகன் சிங்குக்கும் கிடைத்திருக்கும். அது எப்போது தெரியுமா?

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில் இந்தியா சார்பில் ஒரு துரும்புகூட  பொதுவளஆய மாநாட்டில் பங்கேற்காது என்று மன்மோகன் சிங் அறிவித்திருந்தால் அந்தப் புகழ் கிடைத்திருக்கும்.

இராசபட்சவுக்குத் தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி ஏமாற்ற நினைத்ததைப் போல இரண்டுங்கெட்டான் நிலையில், தான் (மன்மோகன் சிங்கு) செல்லவில்லை என்றும், சல்மான்குர்சித் தலைமையிலான குழு செல்லும் என்றும்  தலைமையாளர் முடிவு எடுத்தார்.

இந்த முடிவை எடுத்த போதாவது, இலங்கை அரசால் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில்தான் நான் (மன்மோகன் சிங்கு) மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று  அவர் அறிக்கை விடுத்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

ஆனால் கேமரூன், ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், இலங்கைப்படை செய்து வரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில்  உசாவல்குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாகப் பன்னாட்டு உசாவல் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பணியை மத்திய அரசு செய்திருந்தால், தமிழ் மன்பதை நன்றி செலுத்தியிருக்கும். குர்சித் செய்தது என்ன…? தமிழர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, மாநாட்டில் பங்கேற்ற சல்மான் குர்சித் செய்தது என்ன ? தமிழர்களுக்கு ஆறுதலும் கூறவில்லை. இலங்கை மீது உசாவல் நடத்த வேண்டும் என்றும் கூறவில்லை. தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாக மாநாட்டில் முழங்கவும் இல்லை.சல்மான் குர்சித்துக்கு என்ன கவலை! மாண்டதெல்லாம் தமிழ் மக்கள்தானே!