கல்வியும் மருத்துவமும் மாணவர்களின் இரு கண்கள்
கல்வியும் மருத்துவமும்
மாணவர்களின் இரு கண்கள்
தேசிய நூலக விழாவில்
முன்னாள் மருத்துவத் துணை இயக்குநர் பேச்சு
வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம்,சிரீகிருட்டிணா பயிற்சி மையம், எசு.ஆர்.எம்.இன்போடெக் கணிணிப் பயிற்சி நிறுவனமும் இணைந்து கார்த்திகை 7, 2045 / நவம்பர் 23 அன்று நடத்திய தேசிய நூலக வார விழாவின் பரிசளிப்பு நிகழ்வில், இன்றைய அவசரமான உலகில் கல்வியும் மருத்துவமும் குழந்தைகளுக்கு இரு கண்களைப்போல் கட்டாயம் கிடைத்திட செய்திட வேண்டும் என்று முன்னாள் மண்டல மருத்துவத் துணை இயக்குநர் மருத்துவர் எசு.குமார் பேசினார்.
இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு தலைமையேற்றார். கிளை நல்நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். பா.சீனிவாசன், ஏ.தேவா, பா.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வந்தை வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன், தைலம்மாள் ஆன்ம நேய அறக்கட்டளை நிறுவனர் மு.இராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தேசிய நூலக வார விழாவையொட்டி வந்தவாசி வட்டத்திலுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டியில் 16 பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் மண்டல மருத்துவத் துணை இயக்குநர் மரு.குமார் பரிசுகளை வழங்கிப் பேசும்போது, இளம் அகவையில் மாணவர்கள் எவ்விதக் குழப்பத்திற்கும் இடம் தராமல் ஆர்வத்தோடு கவனத்தைக் கல்வி பயில்வதில் நேரத்தைச்செலவிட வேண்டும். அகவையில் மூத்தோரை, பெற்றோர்களை, ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும். நமது வளர்ச்சிக்காக பிறர் சொல்லும் அறிவுரையைக் கேட்டு, அதன்படி நடந்திட வேண்டும். நல்ல கல்வியைப் பெறுவதைப் போலவே நல்ல நலமான உடல் நலத்தினையும் பெற்றிருத்தல் வேண்டும். இன்றைய அவசரமான உலகில் கல்வியும் மருத்துவமும் குழந்தைகளுக்கு இரு கண்களைப்போல் கட்டாயம் கிடைத்திட செய்திட வேண்டும் என்றார்.
நிறைவாக, அலுவலக உதவியாளர் மு.இராசேந்திரன் நன்றி கூறினார்.
Leave a Reply