பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி

ஈழத்தில் தமிழ் பயிற்றுவித்த பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்

தமிழ் ஈழம் சென்று தமிழ் பயிற்றுவித்த பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி இயற்கை எய்தினார்.          

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி சிரீபரமகல்யாணி கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி (81) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இயற்கை எய்தினார்.

‘புத்தன் பேசுகிறான்’ என்கிற இவரின் கவிதைத் தொகுப்பு மிகவும் பெயர் பெற்றவை. ‘இவர்தாம் பெரியார்’, ‘சோதிடப் புரட்டு’, ‘யார் இந்த இராமன்’ , ‘மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை’ முதலான மன்பதை சார்ந்த நூல்களையும் பேராசிரியர் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மொழியை நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததில் இவரின் பங்கு அளப்பரியது. இலண்டன், இத்தாலி, கனடா, சுவிச்சர்லாந்து, ஆத்திரேலியா, நார்வே முதலான நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்குத் தமிழ் கற்பித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று , 2006 முதல் 2008 வரை ஈழத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். ‘ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்’ என்ற நூல் அவர் ஈழத்தில் பெற்ற பட்டறிவுகளை நுட்பமாக விவரிக்கின்றன. வாழ்கையின் ஒவ்வொரு நாளையும் தமிழ் மொழிக்காக வாழ்ந்திட்ட பேராசிரியர், பாளையங்கோட்டை சைவ அவையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்தார்.

வாங்கிய பட்டங்கள்:   பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழிசை பாவாணர் என்ற பட்டமும், கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில் பைந்தமிழ்ப் பகலவன் என்ற பட்டமும் இவருக்கு  வழங்கப்பட்டன.

இவருக்கு ஞானத்தாய் என்ற மனைவியும், முத்துச்செல்வி, தமிழ்ச்செல்வி ஆகிய பெண்மக்கள் இருவரும் செல்வநம்பி, அழகியநம்பி ஆகிய ஆண்மக்கள் இருவரும் உள்ளனர்.

இவருடைய உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தானமாக வழங்கப்படுகிறது. தொடர்புக்கு 9092481997.