anna son gowthaman02

முன்னாள் முதல்வர்  பேரறிஞர் அண்ணா(துரை) அவர்களின்  வளர்ப்பு மகன் கா.ந.அ. கௌதமன் சென்னையில் காலமானார். அவருக்கு  அகவை 67.

 இவரது மனைவி துளசி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், சென்னை செனாய் நகரில் உள்ள மகள் சரிதா வீட்டில் கௌதமன் வசித்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை மோசமானது. இந்நிலையில், இன்று 29.12.13 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கௌதமன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

செனாய் நகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கௌதமன் உடலுக்குத் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் பொருளாளர் மு.க.தாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, டி.கே.சு.இளங்கோவன், திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எசு.பாரதி, திமுக முன்னணியினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் துணைவி இராசாத்தி அம்மாளும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

கௌதமன் மறைவு குறித்து, அவரது மருமகன் சிவக்குமார் கூறும்போது, “மாமாவுக்கு மூளைக்குச் செல்லும் பாதையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு,  அவர் உயிரிழந்தார்” என்றார். கௌதமனின் உடல்  இன்று மாலை புது ஆவடிச் சாலையில்  உள்ள மின்எரிக் கூடத்தில் எரியூட்டப்பட்டது.

கௌதமனின் அண்ணன்கள் பரிமளம், இளங்கோவன் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டனர். தம்பி பாபு, சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார்.