படுகொலை செய்யப்பட்ட சிறுவன் தருசன் - brutally_rapedand_murderedBoy_darsan

தருசன் படுகொலை என்பது இனப்படுகொலையின் தொடர்ச்சியே!

  சிங்களப் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, வயிற்றில் கல்லைக் கட்டி, கிணற்றில் வீசிப் படுகொலை செய்யப்பட்ட ஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தருசன் படுகொலைக்கு நீதி கேட்டுக் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தினால் தை 22, 2047 / 05-02-2016 வெள்ளி அன்று மாலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது.

  தருசன் படுகொலை என்பது இனப்படுகொலையின் தொடர்ச்சியே! இலங்கையின் அரசியல் சட்டம் தமிழர்களுக்கு எதிரானது என்பதே உண்மை. அமெரிக்கத் தீர்மானம் என்பது ஏமாற்று வேலை என உறுதியாகியிருக்கிறது. ஐ.நா தீர்மானத்தின் மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று சொல்லி விட்டு, தருசன் படுகொலைக்கு அமைதி காக்கும் நாடுகளின் நிலைப்பாடு கண்டிக்கப்பட வேண்டியது. ஐ.நா-வின் கள்ள அமைதி கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது. இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர் உடனடியாகத் தருசன் படுகொலை குறித்துப் பேச வேண்டும். சிரியாவுக்கு அமைத்ததைப் போன்று இலங்கை அரசு குறித்து உசாவப் (விசாரிக்க) பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தினை (ICTSL) அமைக்க வேண்டும். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பாகித்தான், சீனா அலுவலர்களும் உசாவப்பட (விசாரிக்கப்பட) வேண்டும். தெற்குச் சூடானுக்கு நடத்தியதைப் போன்று தமிழீழ விடுதலைக்குப் பொதுவாக்கெடுப்பினை நடத்த வேண்டும் – இவ்வாறெல்லாம் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதை முன்னிட்டு முருகதாசன் நினைவு நாளான பிப்பிரவரி 12 ஆம் நாள் ஐ.நா அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க தோழர் மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தோழர் பழ.நல் ஆறுமுகம், தமிழர் விடியல் கட்சியின் தோழர் இளமாறன், திசம்பர் 3 இயக்கத்தின் தோழர் தீபக்கு, இந்தியமன்பதைக் குடியரசுக்கட்சி(S.D.P.I), தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே பதினேழு இயக்கத் தோழர் திருமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

[படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!]

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_e.bhu.gnanaprakasan