(திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல் தொடர்ச்சி)

 

திருக்குறள் அறுசொல் உரை

03. காமத்துப் பால்

14. களவு இயல்

அதிகாரம் 110. குறிப்பு அறிதல்

பார்வை, செயல்களால், காதலியின்

ஆழ்மனக் குறிப்பினை அறிதல்

(01-10 தலைவன் சொல்லியவை)

 

  1. இருநோக்(கு), இவள்உண்கண் உள்ள(து); ஒருநோக்கு

      நோய்நோக்(கு),ஒன்(று) அந்நோய் மருந்து.

இவளிடம் இருபார்வைகள்; ஒன்று,

நோய்தரும்; மற்றுஒன்று, மருந்து.

 

  1. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில்

      செம்பாகம் அன்று: பெரிது.

காதலியின் கள்ளப் பார்வை,

காதலில் பாதியைவிடப் பெரிது.

 

  1. நோக்கினாள்; நோக்கி, இறைஞ்சினாள்; அஃ(து),அவள்

      யாப்பினுள் அட்டிய நீர்.

பார்த்தாள்; தலைகுனிந்தாள்; காதல்

பாத்தியுள் பாய்ச்சியநீர் அவை.

 

  1. யான்நோக்கும் காலை, நிலன்நோக்கும்; நோக்காக்கால்,

      தான்நோக்கி மெல்ல நகும்.

நான்பார்த்தால், நிலம்பார்ப்பாள்; பார்க்காப்போது

என்னைப் பார்த்துச் சிரிப்பாள்.

 

  1. குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒருகண்

      சிறக்கணித்தாள் போல நகும்.

குறிப்போடு பார்க்காவிட்டாலும், ஒருகண்ணைச்

சுருக்கிப் பார்த்துச் சிரிப்பாள்.

 

  1. உறாஅ தவர்போல் சொலினும், செறாஅர்சொல்,

      ஒல்லை உணரப் படும்.

காதல் இல்லார்போல் சொல்லினும்,

காதலர்சொல், காதலைக் காட்டிவிடும்.

 

  1. செறாஅச் சிறுசொல்லும், செற்றார்போல் நோக்கும்,

      உறாஅர்போன்(று) உற்றார் குறிப்பு.   

பகைக்காத சொல்லும், பகைப்பார்வையும்,

உறவு உள்ளார்தம் குறிப்புக்கள்.

 

  1. அசையியற்(கு), உண்(டு)ஆண்(டு)ஓர் ஏஎர்;யான் நோக்கப்,

      பசையினள் மெல்ல நகும்.

நான்பார்க்கும் பொழுது, மெல்லச்

சிரிப்பாள்; அதுவும், அழகுதான்.

 

  1. ஏதிலார் போலப், பொதுநோக்கு நோக்குதல்,

      காதலார் கண்ணே உள.

அயலார்போல், பொதுவாகப் பார்த்துக்

கொள்ளுதல், காதலர்க்கு இயல்பே.

 

  1. கண்ணொடு கண்இணை நோக்(கு)ஒக்கின், வாய்ச்சொற்கள்,                                                

      என்ன பயனும் இல.

காதலர்தம் கண்களின் பார்வைகள்

ஒன்றினால், வாய்ச்சொற்கள் எதற்கு?

 

பேரா.வெ.அரங்கராசன்