(அதிகாரம் 030. வாய்மை தொடர்ச்சி)

arusolcurai_attai+arangarasan

01. அறத்துப் பால்
 03. துறவற இயல்  

அதிகாரம் 031. வெகுளாமை

எப்போதும், எவரிடத்தும், எதற்காகவும்,

சினமோ, சீற்றமோ கொள்ளாமை.  

 

  1. செல்இடத்துக் காப்பான், சினம்காப்பான்; அல்இடத்துக்

     காக்கின்என்? காவாக்கால் என்?

 

    செல்இடத்தில் சினம்அடக்கு; செல்லா

       இடத்தில் அடக்கு; அடக்காமல்போ.

 

  1. செல்லா இடத்தும் சினம்தீ(து); செல்இடத்தும்

     இல்,அதனின் தீய பிற.

 

  செல்இடத்தும், செல்லா இடத்தும்,

       சினத்தலைவிடத், தீயது வே[று]இல்லை.

 

  1. மறத்தல் வெகுளியை, யார்மாட்டும்; தீய

     பிறத்தல், அதனான் வரும்.

 

  தீமைகளின் பிறப்பிடமாம் சினத்தை

       யாரிடத்தும் மறத்தலே அறம்.

 

  1. நகையும், உவகையும் கொல்லும் சினத்தின்,

     பகையும், உளவோ பிற?

 

       முகமகிழ்வையும், மனமகிழ்வையும்,

       கொல்லும் சினம்தான், பெரும்பகை.

 

  1. தன்னைத்தான் காக்கின், சினம்காக்க; காவாக்கால்,

     தன்னையே கொல்லும் சினம்.

 

   சினத்தைக் கொல்லுக; கொல்லாவிடில்,

       சினம்அ[து] உன்னையே கொல்லும்.

 

  1. சினம்என்னும், சேர்ந்தாரைக் கொல்லி, இனம்என்னும்,

   ஏமப் புணையைச் சுடும்.

 

  தன்னைச் சேர்த்தாரையும், சேர்த்தாரோடு         .

       சேர்ந்தாரையும் தீச்சினம் எரிக்கும்.

 

  1. சினத்தைப் பொருள்என்று, கொண்டவன் கேடு,

     நிலத்(து)அறைந்தான் கை,பிழையா(து) அற்று.          

 

  நிலத்தை அறைந்தான் கைகெடும்;

       சினந்தான் தப்பாது கெடுவான்.

 

  1. இணர்எரி தோய்(வு)அன்ன, இன்னா செயினும்,

   புணரின், வெகுளாமை நன்று.

 

      பூங்கொத்தை எரிக்கும் தீயைப்போல்

       தீமைகளைச் செய்தாலும் சினக்காதே.

 

  1. உள்ளிய(து) எல்லாம் உடன்எய்தும், உள்ளத்தால்

   உள்ளான், வெகுளி எனின்.

 

  மனத்தாலும், சினத்தை நினையார்க்கு,

       நினைத்தன எல்லாம் அடைவான்.

 

  1. இறந்தார், இறந்தார் அனையர்; சினத்தைத்

    துறந்தார், துறந்தார் துணை.

 

சினத்தார் செத்தாரைப் போல்வார்;

       சினவாதார் துறவியரைப் போல்வார்.

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 032. இன்னா செய்யாமை)