திருக்குறள் அறுசொல் உரை – 083. கூடா நட்பு: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 082. தீ நட்பு தொடர்ச்சி)
02. பொருள் பால்
11. நட்பு இயல்
அதிகாரம் 083. கூடா நட்பு
கூடாத மனங்களின் கூடாத
போலிமை நட்போடு கூடாமை.
- சீர்இடம் காணின், எறிதற்குப் பட்டடை,
நேரா நிரந்தவர் நட்பு.
மனம்கூடா நண்பர், வாய்ப்புவரின்,
துயரம் செய்வார்க்கும் துணைஆவார்.
- இனம்போன்(று) இனம்அல்லார் கேண்மை, மகளிர்
மனம்போன்று, வேறு படும்
போலிமை நண்பர்தம் நட்பும்,
விலைமகளிர் மனம்போல் மாறுபடும்.
- பலநல்ல கற்றக் கடைத்தும், மனநல்லர்
ஆகுதல், மாணார்க்(கு) அரிது.
நல்லன கற்றாலும், மனம்பொருந்தா
நண்பர், மனத்தாலும் பொருந்தார்.
- முகத்தின் இனிய நகாஅ, அகத்(து)இன்னா
வஞ்சரை, அஞ்சப் படும்.
முகத்தால் இனிதாகச் சிரிக்கும்,
வஞ்சக நண்பர்க்கு அஞ்சுக.
- மனத்தின் அமையா தவரை, எனைத்(து)ஒன்றும்,
சொல்லினால் தேறல்பாற்(று) அன்று.
மனம்கலவாத நணபர்தம் சொல்லை
மட்டும், வைத்துத் தெளியாதே.
- நட்டார்போல் நல்லன சொல்லினும், ஒட்டார்சொல்,
ஒல்லை உணரப் படும்.
நண்பர்போல் நல்லன சொல்லினும்,
நடிப்பார் சொல்தீமை, உடன்வெளிஆம்.
- சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க, வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
பகைவர் சொல்பணிவும், வில்வளைவும்
தீமைக்கு அறிகுறிகள்; கொள்ளற்க.
- தொழுத கைஉள்ளும், படைஒடுங்கும்; ஒன்னார்
அழுத கண்ணீரும், அனைத்து.
வணங்குகைக்குள் கொலைசெய் கருவியும்,
பகைவர் கண்ணீரும் சமம்.
- மிகச்செய்து, தம்எள்ளு வாரை, நகச்செய்து,
நட்பினுள் சாப்புல்லல் பாற்று.
மிகுநட்பைச் செய்து, இகழ்வாரை,
சிரித்துப் பேசியே ஒதுக்கு.
- பகைநட்(பு)ஆம் காலம் வரும்கால், முகநட்(டு),
அகநட்(பு) ஒரீஇ விடல்.
பகைவன் நண்பனாக வந்தால்,
முகத்தில் சிரிப்புகாட்டி விலக்கு
பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply