(அதிகாரம் 093. கள் உண்ணாமை தொடர்ச்சி)

attai_kuralarusolurai03

02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 094. சூது

பரம்பரைப் புகழ்,பண்பு, மதி,அன்பு

பொருள்கெடுக்கும் சூதை விடு.

  1. வேண்டற்க, வென்(று)இடினும் சூதினை; வென்றதூஉம்,

     தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று.

 மீன்விழுங்கிய தூண்டில் இரைதான்

         சூதில் வருவெற்றி; வேண்டாம்.

 

  1. ஒன்(று)எய்தி, நூ(று)இழக்கும் சூதர்க்கும், உண்டாம்கொல்

     நன்(று)எய்தி, வாழ்வ(து)ஓர் ஆறு?

 ஒன்றுபெற்றுப், பலஇழக்கும் சூதாடிக்கும்

       நன்றுஆம் வாழ்வு உண்டாமோ?     

 

  1. உருள்ஆயம் ஓயாது கூறின், பொருள்ஆயம்,

 போஒய்ப் புறமே படும்.

 ஓயாது சூதினை ஆடினால்,

       பொருள்வளம் போஒய்த் தொலையும்.

 

  1. சிறுமை பலசெய்து, சீர்அழிக்கும் சூதின்,

     வறுமை தருவ(து)ஒன்(று) இல்.

இழிவு தந்து, புகழ்மதிப்பையும்

       அழிக்கும் சூதுதான் வறுமை.

 

  1. கவறும், கழகமும், கையும் தருக்கி,

     இவறியார், இல்ஆகி யார்

 கருவி,இடம், கைத்திறன் உள்ளாரும்

       சூதினால் இல்லாரே ஆவார்.

 

  1. அக(டு)ஆரார், அல்லல் உழப்பர்,சூ(து) என்னும்,

     முகடியால் மூடப்பட் டார்.

சூதுஎனும் மூதேவியால் மூடப்பட்டார்,

       நன்கு உண்ணார்; துன்புறுவார்.

 

  1. பழகிய செல்வமும், பண்பும் கெடுக்கும்,

     கழகத்துக் காலை புகின்.

நாளும், சூதுஆடினால், பரம்பரைச்

     சொத்தும், பண்பும் அழியும்.      

 

  1. பொருள்கெடுத்துப், பொய்மேல் கொளீஇ, அருள்கெடுத்(து),

   அல்லல் உழப்பிக்கும் சூது.

சூது, அருள்,பொருள் கெடுக்கும்;

     பொய்யைக் கொடுக்கும்; துயர்ப்படுத்தும்.

 

  1. உடை,செல்வம், ஊண்,ஒளி, கல்வி,என்(று) ஐந்தும்,

   அடையாஆம் ஆயம் கொளின்.

  சூதாடி இழப்பவை: உடை,செல்வம்,

     உணவு, மதிப்பு, கல்வி.

  1. இழத்தொறூஉம், காதலிக்கும் சூதேபோல், துன்பம்

     உழத்தொறூஉம், காதற்(று) உயிர்.

துன்பத்தில் உயிர்மேலும், இழப்பில்

     சூதுமேலும் காதல் தோன்றும்.

 பேரா.வெ.அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன் :ve.arangarasan

(அதிகாரம் 095. மருந்து)