(திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல் தொடர்ச்சி)

 

 

  3. காமத்துப் பால்
15. கற்பு இயல்
128. குறிப்பு அறிதல்

       காதலர்  தம்தம்  உள்ளத்துள்ள்

        குறிப்புகளைக், குறிப்பாக உணர்த்தல்

 

(01-05 தலைவன் சொல்லியவை)       

  1. கரப்பினும், கைஇகந்(து) ஒல்லாநின் உண்கண்,

      உரைக்கல் உறுவ(து)ஒன்(று) உண்டு.

மறைத்தலையும் மீறி, உன்கண்கள்

குறிப்பு ஒன்றைச் சொல்லுகின்றன.

 

  1. கண்நிறைந்த காரிகைக் காம்(பு)ஏர்தோள் பேதைக்குப்,

      பெண்நிறைந்த நீர்மை பெரிது

கண்கொள்ளா அழகுக் காதலிக்குப்

பெண்மை நிறைபண்பே, பேர்அழகு.

 

  1. மணியில் திகழ்தரு நூல்போல், மடந்தை

      அணியில், திகழ்வ(து)ஒன்(று) உண்டு.

மணிமாலையுள் நூல்போல், மங்கை

அழகிலும் ஓர்குறிப்பு உள்ளது.

 

  1. முகைமொக்(கு)உள் உள்ளது நாற்றம்போல், பேதை

      நகைமொக்(கு)உள் உள்ள(து)ஒன்(று) உண்டு.

மொட்டுள் மணம்போல், இவள்தன்

புன்னகை மொட்டுள் குறிப்புஒன்று.

 

  1. செறிதொடி செய்(து)இறந்த கள்ளம், உறுதுயர்

      தீர்க்கும் மருந்(து)ஒன்(று) உண்டு.

மனைவியின் கள்ளமான குறிப்பு

துயர்நோய் தீர்க்கும் மருந்து.

 

      (06-08 தலைவி சொல்லியவை)

  1. பெரி(து)ஆற்றிப், பெட்பக் கலத்தல், அரி(து)ஆற்றி,

      அன்(பு)இன்மை சூழ்வ(து) உடைத்து.

பேர்ஆர்வம் காட்டும் நீள்கூடலில்,

பிரிவுக் குறிப்பும் உள்இருக்கும்.

 

  1. தண்அம் துறைவன் தணந்தமை, நம்மினும்

      முன்னம் உணர்ந்த வளை.

கணவர்தம் பிரிவை, என்னைவிட,

வளையல்கள் முன்னர் உணர்ந்தன.

 

  1. நெருநற்றுச் சென்றார்எம் காதலர்; யாமும்,

      எழுநாளேம் மேனி பசந்து.

நேற்றுதான் பிரிந்தார்; அதற்குள்,

ஏழுநாள் பசலை மேனிமேல்.

 

  (09-10 தலைவன் சொல்லியவை)

  1. தொடிநோக்கி, மென்தோளும் நோக்கி, அடிநோக்கி,

      அஃ(து)ஆண்(டு) அவள்செய் தது.

வளைகள், தோள்கள், காலடிகளைப்

பார்த்தமை, பிரிவுக் குறிப்புதான்.

 

  1. பெண்ணினால் பெண்மை உடைத்(து)என்ப, கண்ணினால்

      காமநோய் சொல்லி இரவு.

காதல் நோயினைக் கண்குறிப்பால்

உணர்த்துதல், பெண்மையைச் சிறப்பிக்கும்.